Skip to main content

பட்டப்பகலில் பட்டறைக்குள் புகுந்து அரிவாள் வெட்டு; முகமூடி அணிந்த ரவுடிகள் வெறிச்செயல்!

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

salem police arrested three in Workshop case

 

சேலத்தில், பட்டப்பகலில் இரும்பு கிரில் பட்டறைக்குள் புகுந்த முகமூடி அணிந்த ரவுடிகள் மூன்று பேர், அதன் உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம், செவ்வாய்பேட்டை நரசிம்மன்செட்டி சாலையைச் சேர்ந்தவர் சிவக்குமார் (45). இவர், பள்ளப்பட்டி கோரிக்காடு பகுதியில் கிரில் பட்டறை வைத்துள்ளார். ஜன. 25ம் தேதி காலை, சிவக்குமார் மற்றும் ஊழியர்கள் சாரதி (19), பாஸ்கர் (45) ஆகியோர் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் மூன்று பேர் வந்தனர். அவர்கள் ஹெல்மெட் மற்றும் முகமூடி அணிந்து இருந்தனர். 


திடீரென்று பட்டறைக்குள் புகுந்த அவர்கள், அரிவாளால் சிவக்குமாரை சரமாரியாக வெட்டினர். இதைத் தடுக்க வந்த ஊழியர்களையும் வெட்டினர். இதில் நிலைகுலைந்த மூன்று பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். 


அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் நிகழ்விடம் வந்து பார்த்தனர். அங்கே ரத்த வெள்ளத்தில் கிடந்த சிவக்குமார், சாரதி, பாஸ்கர் ஆகிய மூவரையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


பட்டறையில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராவில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிவக்குமார் உள்ளிட்டோரை அரிவாளால் வெட்டும் காட்சிகள் பதிவாகி உள்ளன. இந்த சம்பவம் குறித்து பள்ளப்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், நிலத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்துள்ளது தெரிய வந்தது. 


கடந்த 15 ஆண்டுக்கு முன்பு, சிவக்குமாரின் வீட்டில் திருமலைகிரியைச் சேர்ந்த ஏழுமலை என்பவர் குடியிருந்து வந்தார். பின்னர் வீட்டை காலி செய்யும்படி சிவக்குமார் கூறியபோது, அந்த வீட்டை தங்களுக்கே கொடுக்குமாறு ஏழுமலை கேட்டுள்ளார். இதற்கு அப்போது ஒப்புக்கொண்ட சிவக்குமார், வீட்டை கொடுப்பதாகக்கூறி முன்பணமாக ஏழுமலையிடம் இருந்து 4.90 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். ஆனால் சொன்னபடி ஏழுமலை தரப்புக்கு வீட்டை விற்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் இருந்து வந்ததோடு, ஏற்கனவே இது தொடர்பாக அன்னதானப்பட்டி காவல்நிலையத்திலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


அந்த வழக்கில் இருதரப்பையும் அழைத்துப் பேசிய அன்னதானப்பட்டி காவல்துறையினர், சிவக்குமார் தரப்பு மேலும் 21 லட்சம் ரூபாயை ஏழுமலைக்குக் கொடுக்க வேண்டும் என்றும், இதில் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்றும் சமரசம் செய்து வைத்துள்ளனர். இது தொடர்பாக இருதரப்பிலும் எழுதி வாங்கப்பட்டது. இதையடுத்து சிவக்குமார் தரப்பில் முதல்கட்டமாக 5 லட்சம் ரூபாய் ஏழுமலையிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 16 லட்சம் ரூபாயை நடப்பு ஜனவரி மாதம் 31ம் தேதிக்குள் கொடுத்து விடுவதாகவும் சிவக்குமார் ஒப்புக்கொண்டுள்ளார். 


ஆனாலும், ஏழுமலை தரப்பினர் அடிக்கடி சிவக்குமாரிடம் மீதப்பணத்தைக் கேட்டு தகராறு செய்துள்ளனர். இதன் பின்னணியில்தான் ஏழுமலை ரவுடிகளை ஏவி விட்டு சிவக்குமாரை தாக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தின் ஏழுமலையின் மகன் பாபு என்பவர்தான் மூலையாக செயல்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. பொறியியல் பட்டதாரியான அவர், தற்போது ஜார்க்கண்டு மாநிலத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. 


இதற்கிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள சிவக்குமார் உள்ளிட்ட மூன்று பேரிடமும் மாநகர காவல்துறை துணை ஆணையர் மாடசாமி, உதவி ஆணையர் நாகராஜன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் பள்ளப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.