Skip to main content

சிறுமியைத் தலை துண்டித்து கொலை; வாலிபருக்குத் தூக்குத் தண்டனை! போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

Salem Pocso court order sentence to child girl case

 

ஆத்தூர் அருகே, 13 வயது பள்ளிச் சிறுமி தலையைத் துண்டித்து, கொடூரமாகக் கொலை செய்த வழக்கில், வாலிபருக்குத் தூக்குத் தண்டனை விதித்து சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றம், செவ்வாய்க்கிழமை (ஏப். 26) பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 


சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தளவாய்ப்பட்டியைச் சேர்ந்தவர் சாமிவேல். இவருடைய மனைவி சின்னப்பொண்ணு. இவர்களுடைய இரண்டாவது மகள் ராஜலட்சுமி (13). பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த இந்தச் சிறுமி, உள்ளூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். இவர்களுடைய வீட்டில் இருந்து சுமார் 150 அடி தூரத்தில் கார்த்தி என்கிற தினேஷ்குமார் (25) என்பவரின் வீடு உள்ளது. இவருடைய மனைவி சாரதா. காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 


தினேஷ்குமார், கதிர் அறுக்கும் வண்டியில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். கடந்த 2018ம் ஆண்டு அக். 22ம் தேதி இரவு, 7.30 மணியளவில், தன் வீட்டில் இருந்து கொடுவாளுடன் சிறுமி ராஜலட்சுமி வீட்டுக்கு ஆவேசமாக சென்றார். அங்கு சிறுமியும், அவளுடைய தாயாரும் பூக்கட்டிக் கொண்டிருந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுமியை கழுத்தில் வெட்டினார். தடுக்கப் பாய்ந்த தாயாரையும், சுவரில் மோதி கீழே சாய்த்தார். இதில் அவர் நிலைகுலைந்தார். சிறுமியை அவளுடைய வீட்டு வாசல் வரைக்கும் தரதரவென இழுத்து வந்த வாலிபர் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். 


தலையை தனியாக துண்டித்து கையில் எடுத்துச்சென்ற தினேஷ்குமார், நிகழ்விடத்தில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் தளவாய்ப்பட்டி & ஈச்சம்பட்டி மண் சாலையில் வீசிவிட்டு, தன் வீட்டுக்குள் சென்று பதுங்கிக் கொண்டார். செல்லும் வழியில் வீடு அருகே இருந்த ஒரு சிறு நுணா மரத்தையும் அடியோடு வெட்டி வீழ்த்தி இருக்கிறார். பின்னர், அருகில் இருந்த முள்புதருக்குள் கொலைக்குப் பயன்படுத்திய கொடுவாளை வீசியெறிந்துள்ளார். 


உடலெங்கும் ரத்தம் தெறித்து இருந்ததையும், சிறுமியின் தாயாரின் அலறல் சத்தத்தையும் கேட்டு பதறிய சாரதாவும், தினேஷ்குமாரின் தம்பி சசிகுமாரும் நிகழ்விடத்திற்கு ஓடிச்சென்று பார்த்தனர். அங்கு சிறுமியின் தலையின்றி உடல்  மட்டும்  ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதேநேரம் வீட்டுக்குள் பித்துப் பிடித்தவர் போல தினேஷ்குமார் அமர்ந்து கொண்டு, வீட்டின் விட்டத்தையே பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். மனைவியும் தம்பியும் கேட்ட எந்த ஒரு கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை. இதையடுத்து சாராதாவும், சசிகுமாரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தினேஷ்குமாரை உட்கார வைத்து நிகழ்வு நாளன்று இரவு 8.30 மணியளவில் ஆத்தூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். 


இரண்டு நாள்கள் காவல்நிலையத்தில் வைத்து, எல்லா வகையிலும் விசாரித்துப் பார்த்தும், கொலைக்கான காரணம் தெரியவரவில்லை. விசாரணையின்போது தினேஷ்குமார், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல தனக்குத்தானே ஏதேதோ பேசிக்கொண்டு இருந்தார் என்றது காவல்துறை தரப்பு. இதற்கிடையே, கொலைக்குப் பயன்படுத்திய கொடுவாளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
 

கொலையை நேரில் பார்த்ததற்கான சாட்சிகள் இருந்ததாலும், முதல் தகவலின் பேரிலும், கொலையுண்ட சிறுமி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலும், காவல்துறையினர் கொலை, ஆபாசமாக பேசுதல், சாதி வன்கொடுமை ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 25.10.2018ம் தேதி, நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்தியச் சிறையில் தினேஷ்குமாரை அடைத்தனர்.


தொடர் விசாரணையில், வேறு பல பரபரப்பு தகவல்கள் கிடைத்தன. சம்பவம் நடப்பதற்கு மறுநாள் சிறுமியின் பள்ளியில் ஆண்டு விழா நடக்க இருந்தது. அதில், மாறுவேடப் போட்டியில் கலந்து கொள்ள பெயர் கொடுத்திருந்த ராஜலட்சுமி, மாரியம்மன் சாமி வேடம் போட இருப்பதாக கூறி வந்திருக்கிறாள். இதற்காக, சம்பவத்தன்று மாலை தினேஷ்குமாரின் தோட்டத்தில் இருந்து மல்லிகைப் பூக்களை பறித்து வந்திருக்கிறாள். தனது தாயாருடன் சேர்ந்து பூக்கட்டுவதற்கான வேலையில் ஈடுபட்டு இருந்திருக்கிறாள். அப்போது பூக்கட்டுவதற்கான நூல் கண்டு இல்லாததால், அதை வாங்கி வருவதற்காக தினேஷ்குமாரின் மனைவி சாரதாவிடம் கேட்பதற்காக அவருடைய வீட்டுக்குச் சென்றிருக்கிறாள். அப்போது தினேஷ்குமார், சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாகவும், இதுகுறித்து தன் தந்தையிடம் சொல்லி விடுவேன் என்று சிறுமி சொன்னதாகவும் தெரிகிறது. 


இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் மானம் போய் விடும் என்பதால், ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், சிறுமியை வீடு புகுந்து கொடூரமாக கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கொலையாளி மீதான எப்.ஐ.ஆர். திருத்தம் செய்யப்பட்டு, அவன் மீது போக்சோ வழக்கும் பாய்ந்தது. கொடூரமான கொலை குற்றத்தில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. 


இந்த வழக்கின் விசாரணை, சேலம் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தினேஷ்குமார் குற்றவாளி என்று திங்கள்கிழமை (ஏப். 25) நீதிபதி முருகானந்தம் தீர்ப்பு அளித்தார். அவருக்கு செவ்வாய்க்கிழமை (ஏப். 26) தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டது. 


அதன்படி, தினேஷ்குமாருக்கு கொலை குற்றத்திற்கு தூக்குத் தண்டனையும், சாதி வன்கொடுமை குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும் 26 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அபராத தொகையை, கொலையுண்ட சிறுமியின் பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது. சிறுமி தரப்பில் ஆஜராகி வாதாடிய வழக்கறிஞர் ஆசைத்தம்பி கூறுகையில், ''இந்த தீர்ப்பை முழுமனதாக ஏற்கிறோம். பட்டியலினத்தவர்கள் மீது நடக்கும் வன்கொடுமை சம்பவங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்துள்ளது'' என்றார். 


இந்த தீர்ப்பைக் கேட்டு தினேஷ்குமாரும், அவருடைய குடும்பத்தினரும் நீதிமன்ற வளாகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இந்நிலையில் சிறுமி ராஜலட்சுமியை பறிகொடுத்த அவளுடைய பெற்றோர், ''இனிமேலும் எங்களுக்கு எங்கள் மகள் கிடைக்கப் போவதில்லை. ஆனாலும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்கின்றோம். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது'' என்றனர். 

 

Salem Pocso court order sentence to child girl case


ராஜலட்சுமி கொலையுண்ட சில நாள்கள் கழித்து, சிறுமியின் பெற்றோரை அவர்களுடைய வீட்டில் சந்தித்துப் பேசினோம். சிறுமியின் முண்டம் கிடந்த வீட்டு வாசல் பகுதியில், செங்கற்களை வரிசையாக அடுக்கி வைத்து, மலர்களை தூவி தெய்வமாக வழிபட்டனர். 


அப்போது அவர்கள் கூறுகையில், ''பொட்ட புள்ளைங்க நடு தடத்துல சுதந்திரமாக நடக்கணும். அதுக்கு தினேஷ்குமாருக்கு தூக்கு தண்டன கிடைக்கணும்,'' என்றனர். தற்போது அவர்கள் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.