சேலம் அருகே பெற்ற மகள் என்றும் பாராமல் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு போக்சோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
சேலம் மாவட்டம், மல்லூர் அருகே உள்ள நிலவாரப்பட்டியைச் சேர்ந்தவர் சுருட்டையன் என்கிற முருகன் (43). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராணி. கடந்த 2021ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி ராணி வீட்டில் இல்லாதபோது மது போதையில் வந்த சுருட்டையன் தனது 12 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கொண்டலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சுருட்டையன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சேலம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, பெற்ற மகளென்றும் பாராமல் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சுருட்டையன் என்கிற முருகனுக்கு ஆயுள் தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து புதன்கிழமை (ஏப். 26) தீர்ப்பளித்தார்.