Skip to main content

காடுவெட்டி குரு மரணத்திற்கு காரணம் பாமக ராமதாஸ்! வீரபாண்டி ராஜா பதிலடி!!

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

காடுவெட்டி குரு மற்றும் வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக போராடி உயிரிழந்த பலரின் மரணத்திற்கு பாமக நிறுவனர் ராமதாசும், அவருடைய மகன் அன்புமணி ஆகியோர்தான் காரணம் என்று, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா பதிலடி கொடுத்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வன்னியர் சமூகத்தினருக்கு எம்பிசி பிரிவில் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அண்மையில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 


விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் இடைத்தேர்தல் ஆதாயத்திற்காக திமுக இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டதாக பாமக பகிரங்கமாக குற்றம் சாட்டியது. பின்னர் திமுக, பாமக ஆகிய இரு கட்சிகளும் வன்னியர் சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டது யார்? என்பது குறித்து பரஸ்பரம் அறிக்கைப்போர் நடத்தி வருகின்றன.  இதற்கிடையே, சேலத்தைச் சேர்ந்த பாமக மாநில துணை பொதுச்செயலாளர் அருள், திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணத்திற்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்று குற்றம்சாட்டினார்.

salem pmk party arul and dmk raja kaduvetti guru incident


மேலும் அவர், ''கலைஞர் உயிருடன் இருக்கும்போது, திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலினை கொண்டு வர வேண்டும் என்று பொன்முடி, எ.வ.வேலு உள்ளிட்ட கட்சியின் முன்னோடிகள் சிலர் முன்மொழிந்தனர். அப்போதே அதற்கு வீரபாண்டி ஆறுமுகம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதை மனதில் வைத்துக்கொண்டுதான், சேலம் அருகே சில ஆண்டுக்கு முன் நடந்த ஆறு பேர் கொலை வழக்கில் தேவையில்லாமல், வீரபாண்டியாரின் சகோதரர் மகன் சுரேஷ்குமார் மீது வேண்டுமென்றே காவல்துறை மூலம் வழக்குப்பதிய வைத்தார் மு.க.ஸ்டாலின்.


இதனால் அவர் மனம் உடைந்து போனதால் உடல்நலம் குன்றியது. அதன்பிறகே அவர் மருத்துவமனயையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். வீரபாண்டி ஆறுமுகம் மரணத்திற்கு நீதி விசாரணை கேட்போம்,'' என்று கூறியிருந்தார்.  அருளின் பேட்டி, ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான வீரபாண்டி ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

salem pmk party arul and dmk raja kaduvetti guru incident



 

அவர் கூறியதாவது:  


''எந்த தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் மரணம் குறித்து பாமக அருள் தெரிவித்த கருத்துகளை ஏற்க முடியாது. என் தந்தை இறந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தக்கூட ராமதாஸ், அன்புமணி ஆகியோர் வரவில்லை. இப்போது தேவையின்றி அவருடைய மரணத்தை வைத்து பாமகவினர் ஆதாயம் தேட பார்க்கின்றனர். அவருடைய மரணத்தைப் பற்றி பேச பாமகவுக்கு அருகதை கிடையாது. வன்னியர் சமுதாயம் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு பெற்றுத்தந்தது திமுகதான். திமுக ஆட்சிக்கு வந்தால், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதை பாமக வரவேற்க வேண்டுமே தவிர, தனது கட்சிக்காரர்களை வைத்து பேட்டி கொடுத்து வருகிறார்.
 


தற்போது அதிமுக கூட்டணியில் பாமக உள்ளது. அக்கட்சியிடம் இதுநாள் வரை ஏன் உள்ஒதுக்கீடு கேட்கவில்லை? காடுவெட்டி குரு மற்றும் இட ஒதுக்கீட்டுக்காக போராடி உயிரிழந்தவர்களின் இறப்புக்கு ராமதாசும், அன்புமணியும்தான் காரணம். இது தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். எனக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு பேசி வருகின்றனர். பாமக அருள் மீது வழக்கு தொடர்வது குறித்து திமுக தலைமையிடம் பேசி முடிவு செய்யப்படும். உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டும், அதிமுகவில் சீட் பெற வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு பேசி வருகின்றனர்,'' என்றார் வீரபாண்டி ராஜா.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.