Skip to main content

கல்வி வளாகத்திற்குள் அரசியல் கூடாது! பெரியார் பல்கலை விழாவில் மாஜி நீதிபதி பரபரப்பு பேச்சு!

Published on 25/10/2019 | Edited on 25/10/2019

கல்வி வளாகத்திற்குள் அரசியல் நடவடிக்கைகள் தேவையற்றது என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் கூறினார். சேலம் பெரியார் பல்கலையில், நடந்த 19வது பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு பேசினார். 


சேலம் பெரியார் பல்கலையின் 19- வது பட்டமளிப்பு விழா, வியாழக்கிழமை (அக். 24) நடந்தது. தமிழக ஆளுநரும், பல்கலை வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் பட்டங்களை வழங்கினார். விழாவில், 261 மாணவ, மாணவிகளுக்கு பிஹெச்.டி., பட்டமும், பெரியார் பல்கலை மற்றும் அத்துடன் இணைவு பெற்ற கல்லூரிகளில் பிஹெச்டி., எம்.பில், முதுநிலை, இளநிலை பட்டப்படிப்புகளில் 95 பேருக்கு தங்கப்பதக்கமும், சான்றிதழும் வழங்கினார். 

salem periyar university graduation supreme court former chief judge speech


இப்பல்கலையில் முதன்முதலாக டி.எஸ்ஸி., பட்டச்சான்றிதழும் ஒருவருக்கு வழங்கப்பட்டது. பெரியார் பல்கலை மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 55427 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கேரளா மாநில முன்னாள் ஆளுநருமான சதாசிவம் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியது:

 

சேலம் பெரியார் பல்கலை, தேசிய தர மதிப்பீட்டில் 'ஏ' சான்றிதழும், தேசிய தரவரிசை பட்டியலில் 68- வது இடத்தையும் பெற்றுள்ளது. இந்தியாவில் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். உலகளவில் பெருகி வரும் வாய்ப்புகளை இளைஞர்கள் பெறும் வகையில், அவர்களின் திறன்களை வளர்த்தெடுக்க வேண்டியது உயர்கல்வி நிறுவனங்களின் முதன்மைப் பணியாகும். 
 


அதனால், உயர்கல்வித்துறையில் புதுமையான முயற்சிகள் வர வேண்டும். அரசியல் செயல்பாடுகள், பல்கலைக்கழக வளாகத்திற்குள் உகந்தது அல்ல. கல்விசார் ஒத்துழைப்பு மற்றும் ஆரோக்கியமான அறிவுநிலை உரையாடல் ஆகியவைதான் பல்கலை வளாகத்திற்குள் தேவை. மாறாக தீமை அல்லது வன்முறை அறவே தேவையில்லை என கருதுகிறேன்.  உங்களுடைய அறிவும், முயற்சியும் நீங்கள் பெற்றிருக்கின்ற பட்டத்தை குறிப்பிடுகின்றது. வாழ்க்கை வடிவமைப்பில் கல்வி மிக முக்கிய அங்கம். ஆனால் நற்பண்புகளே உங்களுடைய இறுதி இலக்கை நிர்ணயிக்கும். இவ்வாறு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சதாசிவம் பேசினார். 

salem periyar university graduation supreme court former chief judge speech


பல்கலை இணை வேந்தரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான அன்பழகன், பல்கலை துணைவேந்தர் குழந்தைவேல், உயர்கல்வித்துறை செயலர் மங்கத்ராம் ஷர்மா, பல்கலை பதிவாளர் (பொறுப்பு) தங்கவேல், தேர்வாணையர் (பொறுப்பு) முத்துசாமி, பேராசிரியர்கள், ஆட்சிக்குழு, ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 



 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.