Salem Panchayat Union Councilor by-election: DMK historic victory!

சேலம் ஊராட்சி ஒன்றியக்குழு 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

Advertisment

சேலம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில், இறப்பு மற்றும் பதவி விலகல் காரணமாக ஏற்பட்டுள்ள காலி பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் ஜூலை 9ம் தேதி நடந்தது. சேலம் ஊராட்சி ஒன்றியக்குழு 8வது வார்டு கவுன்சிலர் மற்றும் 11 ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

Advertisment

இவற்றில், வாழப்பாடி ஒன்றியத்தில் நீர்முள்ளிக்குட்டை 1, சங்ககிரி ஒன்றியத்தில் புள்ளாக்கவுண்டம்பட்டி 1, மேச்சேரி ஒன்றியத்தில் தெத்திகிரிப்பட்டி 1, அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் பூவனூர் 1, மின்னாம்பள்ளி 1 ஆகிய 6 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நிர்வாகிகள் போட்டியின்றி வெற்றி பெற்றனர்.

இதையடுத்து, சேலம் ஊராட்சி ஒன்றியக்குழுவில் 8வது வார்டு கவுன்சிலர், 5 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 6 பதவிகளுக்கு சனிக்கிழமை (ஜூலை 9) வாக்குப்பதிவு நடந்தது. வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) நடந்தது. மற்ற பதவிகளைக் காட்டிலும், சேலம் ஊராட்சி ஒன்றியக்குழு 8வது வார்டு கவுன்சிலர் தேர்தல் மட்டும் ஆளுங்கட்சி தரப்பில் கூர்ந்து கவனிக்கப்பட்டது.

Advertisment

Salem Panchayat Union Councilor by-election: DMK historic victory!

கடந்த 40 ஆண்டுகளில் இந்த வார்டில் ஒரே ஒருமுறை தவிர மற்ற காலங்களில் அதிமுகதான் வெற்றி பெற்று வந்துள்ளது. இந்த முறை இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாவிட்டாலும், அக்கட்சியின் மறைமுக ஆதரவுடன் ஆண்டிப்பட்டி கிளை செயலாளர் வெங்கடேஷ்வரன் தென்னை மரம் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து, திமுக தரப்பில் அதே ஊரின் கிளை செயலாளர் முருகன் போட்டியிட்டார்.

இந்த வார்டில் மொத்தம் 7683 வாக்காளர்கள் உள்ளன. இடைத்தேர்தலில் 6597 வாக்குகள் பதிவாகி இருந்தன. அதாவது, 86 சதவீதம் வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை முடிவில், திமுக வேட்பாளர் முருகன் 4126 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வெங்கடேஷ்வரன், 1935 வாக்குகள் பெற்றார். 2191 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் காலம்காலமாக அதிமுகவின் கோட்டையாக இருந்த 8வது வார்டு, முதன்முதலாக திமுக வசமாகி, வரலாற்று சாதனை படைத்துள்ளது.

கிராம ஊராட்சிகளில், வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

சேலம் மாவட்டம் தேவியாக்குறிச்சி 2வது வார்டில் கவிதா, கிழக்கு ராஜாபாளையம் 9வது வார்டில் அஞ்சலி, புள்ளாக்கவுண்டம்பட்டி 7வது வார்டில் செல்வி, நீர்முள்ளிக்குட்டை 6வது வார்டில் பாப்பா, பூவனூர் 3வது வார்டில் அண்ணாதுரை, மின்னாம்பள்ளி 3வது வார்டில் காளியம்மாள்; நடுப்பட்டி 7வது வார்டில் செல்லபெருமாள், தெத்திகிரிப்பட்டி 4வது வார்டில் இந்திரா, பொட்டனேரி 6வது வார்டில் திருநாவுக்கரசு, கூனாண்டியூர் 7வது வார்டில் சவிதா, எலவம்பட்டி 5வது வார்டில் கலைச்செல்வி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.