Skip to main content

88 லட்சம் சுருட்டிய மாநகராட்சி ஊழியரை கஸ்டடியில் எடுத்தது போலீஸ்! 

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

சேலம் மாநகராட்சியில் போலி சம்பள பட்டியல் மூலம் 88 லட்சம் ரூபாய் சுருட்டிய துப்புரவு ஊழியரை, மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத்தில் துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தவர் வெங்கடேஷ்குமார் (38). கொண்டலாம்பட்டி மண்டலத்திற்கு உட்பட்ட நிர்வாக அலுவலகம் தாதகாப்பட்டியில் இயங்கி வருகிறது. கணக்குப்பிரிவில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, துப்புரவு தொழிலாளியான வெங்கடேஷ்குமார், மண்டல அலுவலகத்தில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணிக்கு அமர்த்தப்பட்டார். கடந்த பத்து ஆண்டுகளாக இப்பிரிவில் பணியாற்றி வந்தார்.

கொண்டலாம்பட்டி மண்டலத்தில் பணியாற்றும் அனைத்து வகை பணியாளர்களுக்கும் மாதந்தோறும் சம்பள பட்டியல் தயாரிப்பது, காசோலைகளை வங்கிக் கணக்கில் செலுத்துவது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வந்தார். இந்நிலையில், நடப்பு நிதியாண்டுக்கான கணக்கு தணிக்கை அறிக்கை தயாரிக்கும்போது, தற்செயலாக கேஷ் டிஸ்போஸபிள் புத்தகத்தை பார்த்தபோது, சம்பள பட்டியல் விவரங்கள் சிலவற்றில் திருத்தங்கள் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


சந்தேகத்தின்பேரில் முந்தைய ஆண்டுகளுக்கான கேஷ் டிஸ்போஸபிள் புத்தகங்களை எடுத்து வருமாறு வெங்கடேஷ்குமாருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டபோது, அவர் சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவானார். அதிகாரிகள் விசாரணையில், அவர் போலி சம்பள பட்டியல் தயாரித்தும், காசோலைகளில் திருத்தம் செய்தும் 88 லட்சம் ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. அவர் தன்னுடைய தாயார் விஜயா, தம்பி மோகன்குமார், தம்பி மனைவி பிரபாவதி ஆகியோர் மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள்போல் சித்தரித்து, அவர்களின் பெயர்களில் காசோலைகள் தயாரித்து வங்கியில் இருந்து பணத்தை எடுத்துள்ளார்.

salem municipality corporation employees scam police take custody


இதுகுறித்து கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையர் ரமேஷ்பாபு அளித்த புகாரின்பேரில் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த 15ம் தேதி வெங்கடேஷ்குமார், அவருடைய தம்பி மோகன்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய தாயார் விஜயா, தம்பி மனைவி பிரபாவதி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தலைமறைவாகிவிட்டதாக சொல்கிறது மத்திய குற்றப்பிரிவு.


இந்த மோசடி குறித்து முதன்முதலில் நக்கீரன் இணையம்தான் கடந்த 14ம் தேதி அம்பலப்படுத்தியது. நமது கள விசாரணையில், மேலும் பல பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 2015-2016, 2016-2017, 2018-2019 ஆகிய மூன்று ஆண்டுகளில் வெங்கடேஷ்குமார் தயாரித்த சம்பள பில் பட்டியல், காசோலைகள் குறித்தும் தணிக்கை அதிகாரி யவனராணி தலைமையிலான குழுவினர் கடந்த ஒரு வாரமாக தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.


தணிக்கைத்துறை துணை ஆய்வாளரான செந்தில் என்பவர்தான் ஆரம்பத்தில் இந்த மோசடி குறித்து தோண்டி எடுத்தார். அதனால் அவர் இருந்தால் எங்கே நம் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று அஞ்சிய வெங்கடேஷ்குமார், அவரை அந்த மண்டலத்தில் இருந்து எப்படியாவது இடமாற்றம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார். அதற்காக அவர், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு பெண் ஊழியருக்கும் தணிக்கை அலுவலர் செந்திலுக்கும் தவறான தொடர்பு இருப்பதாக சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸுக்கு மொட்டை பெட்டிஷன் போட்டுள்ளார். ஆனால் செந்தில் குற்றமற்றவர் என்பது தெரிந்ததால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனாலும், சர்ச்சைக்கு இடம் தரக்கூடாது என்பதால் அவரே விருப்பப்பட்டு அம்மாபேட்டை மண்டலத்திற்கு இடமாறுதல் பெற்றுச் சென்றுவிட்டார் என்கிறார்கள், இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வரும் ஊழியர்கள்.

salem municipality corporation employees scam police take custody


கடந்த மூன்று ஆண்டு காலத்தில் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் பணியாற்றிய உதவி ஆணையர் சுந்தர்ராஜன், தற்போது முதன்மை அலுவலகத்தில்  இளநிலை உதவியாளராக உள்ள ரமேஷ், சாய்லட்சுமி ஆகியோரும் முந்தைய காலங்களில் நடந்த வங்கி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதேநேரம்,  இவர்கள் தங்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் வந்து விடுமோ என அஞ்சி மோசடி ஆவணங்களை திருத்தம் செய்யவும் வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.


இது ஒருபுறம் இருக்க, இந்த மோசடியில் முதல் குற்றவாளியான வெங்கடேஷ்குமார், அவருடைய தம்பி மோகன்குமார் ஆகிய இருவரையும் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். செப். 24ம் தேதி அவர்களை காவலில் எடுத்தனர். வெங்கடேஷ்குமார் தயாரித்த போலி சம்பள பட்டியல் ஆவணங்களை கேட்டதற்கு அவர் ஏதேதோ சாக்குபோக்குகளைச் சொல்லி காவல்துறையினரை அலைக்கழித்து வருவதாகச் சொல்கின்றனர். செப். 26ம் தேதியுடன் மூன்று நாள் காவல் முடிந்து, மீண்டும் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளனர். 


இதற்கிடையே, கடந்த மூன்று ஆண்டுகளுக்கான முழுமையான தணிக்கை அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்கும்படி கொண்டாலம்பட்டி மண்டல அலுவலகத்திற்கும் காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தணிக்கை அறிக்கை முடிவில், இந்த மோசடி தொகை மதிப்பு மேலும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.