
சேலத்தில் சாலையோர வியாபாரிகள் சமூக பொருளாதார மேம்பாட்டினைக் கருத்தில் கொண்டு, தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு, மாநகராட்சியால் 2883 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.
அனைத்து சாலையோர வியாபாரிகளும் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், மத்திய அரசின் திட்டத்தின் மூலம் 10 ஆயிரம் ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.
கடன் பெற விருப்பம் உள்ள வியாபாரிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய சேலம் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்து வருகிறது.
இங்கு காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை கடனுதவி பெற விருப்பமுள்ள சாலையோர வியாபாரிகள் தங்களின் ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றின் நகலுடன் விண்ணப்பித்து பயனடையலாம் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.