Skip to main content

டெங்கு கொசு உற்பத்திக்கூடமான மாநகராட்சி அலுவலக வளாகம்!

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

'ஊரெல்லாம் சகுனம் சொல்லுமாம் பல்லி... கழுநீர் பானையில் விழுந்துச்சாம் துள்ளி' என்ற பழமொழி கணக்காக, காலி மனைகளில் கழிவுநீரை தேங்கவிட்டால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கும் சேலம் மாநகராட்சி, தன்னுடைய அலுவலக வளாகத்தையே டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக மாற்றி இருப்பது முரணாக உள்ளதாக பொதுமக்கள் பகடி செய்கின்றனர்.

SALEM Municipal office complex for dengue mosquito production



சேலத்தில் கடந்த சில நாள்களாக குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. சில இடங்களில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெங்குவை பரப்பும் ஏடிஸ் ஈஜிப்ட் என்ற வகை கொசுக்கள், தேங்கி நிற்கும் சுத்தமான தண்ணீரில்தான் உற்பத்தி ஆகின்றன. ஓடும் நீரிலோ, சாக்கடையிலோ இவை வளர்வதில்லை. அதனால் வீடுகள், அலுவலகங்களில் நீர் தேங்காவண்ணம் பராமரிக்கும்படி சேலம் மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. 

குடியிருப்புகள், பொது இடங்களில் டயர்கள், தேங்காய் சிரட்டைகள், பிளாஸ்டிக் குவளைகள், ஆட்டுரல்கள் உள்ளிட்டவற்றில் நீர் தேங்கியிராத வண்ணம் தூய்மையாக வைத்துக்கொள்ளும்படி தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறது, மாநகராட்சி நிர்வாகம். 


இந்நிலையில், செப். 18ம் தேதியன்று, 'காலி மனைகளில் முள்புதர்கள் இருந்தாலோ, குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தாலோ அவற்றை ஒரு வார காலத்திற்குள் அகற்றி சுத்தமாக பராமரிக்க வேண்டும். இல்லாவிட்டால், அந்த நிலத்தை மாநகராட்சி நிர்வாகமே சொந்த செலவில் சுத்தப்படுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ப சமுதாய க்கூடம், பொழுதுபோக்கு பூங்கா, மைதானம் அமைக்கப்படும்,' என்று சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ் கடுமையாக எச்சரித்து ஓர் அறிக்கை விடுத்திருந்தார். காலி நிலங்களில் தண்ணீர் தேங்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

SALEM Municipal office complex for dengue mosquito production


டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லாம் வரவேற்கப்படக்கூடியது தான் என்றாலும், சரிவர பராமரிக்கப்படவில்லை என்பதைக் காரணம் காட்டி, தனியார் பட்டா நிலத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்த முடியுமா என்பது கடும் சர்ச்சையாகி இருக்கிறது. தவிர, மாநகராட்சி நிர்வாகமே தனக்குச் சொந்தமான இடங்களில் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்காமல் இருப்பதுதான் ஆகப்பெரும் முரணாக இருக்கிறது. 


சேலம் மாநகராட்சியின் அம்மாபேட்டை மண்டல அலுவலக வளாகத்தில் அண்ணா மகப்பேறு மருத்துவமனை, பெண்களுக்கான ஆலோசனை மையம், கர்ப்பிணிகளுக்கான நல வாழ்வு மையம், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மருத்துவமனை ஆகியவையும் செயல்பட்டு வருகின்றன. மண்டல அலுவலகத்தின் கழிவுநீர்த் தொட்டி நிரம்பி அதிலிருந்து வழிந்தோடும் நீர், மகப்பேறு மருத்துவமனை எதிரில் திறந்தவெளி குட்டைபோல் தேங்கியுள்ளது. மேலும், மழைநீரும் அதில் கலந்து சிறு குளம்போல் காட்சி அளிக்கிறது.

SALEM Municipal office complex for dengue mosquito production


நாள் கணக்கில் தேங்கியுள்ள இந்த நீரில் டெங்கு பரப்பும் கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. கர்ப்பிணிகள், குழந்தைகள் வந்து செல்லும் மாநகராட்சி மருத்துவமனைக்கு எதிரிலேயே நோய் பரப்பும் கொசுக்களை உற்பத்தி செய்யும் திறந்தவெளி தொழிற்சாலை உள்ளதை மாநகராட்சி நிர்வாகம் கண்டும் காணாமலும் இருக்கிறது. மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை இப்படியும் செயல்படுத்தலாமோ என்ற அய்யத்தையும் மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி இருக்கிறது. இதே வளாகத்தில், குப்பைத் தொட்டியும் மருத்துவக்கழிவுகளால் நிரம்பி வழிந்து காணப்பட்டது. பகல் 1 மணி ஆகியும்கூட குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது.


மருத்துவமனைக்காக தார் சாலை அமைக்கப்பட்டபோது, அந்த இடம் மேடாகவும், காலி நிலப்பரப்பு பள்ளமாகவும் ஆகிப்போனதில் மழைக்காலங்களில் நாள் கணக்கில் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது. தானாகவே வெயிலில் வற்றிப்போனால்தான் உண்டு. சாலையின் மட்டத்திற்கு காலி நிலப்பரப்பை உயர்த்தி, வடிகால் வசதிகள் செய்வதன் மூலம் மழைநீர் தேங்காவண்ணம் பராமரிக்க முடியும். மக்கள் நலன் விரும்பும் நிர்வாகம், நிச்சயமாக அதைத்தான் செய்திருக்கும். ஆனால், சேலம் மாநகராட்சி நிர்வாகம் மக்கள் நலன் என்ற மைய நோக்கில் இருந்து விலகி பலகாலம் ஆகிவிட்டது என்றே சொல்லலாம்.
 

SALEM Municipal office complex for dengue mosquito production


கழிவுநீர் தொட்டி நிரம்பி வழிவது குறித்தும், திறந்தவெளியில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பது குறித்தும் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் நேரில் நாம் புகார் அளித்தோம். அவர்களோ, 'இந்த புகார்களைக் கவனிப்பதற்கென இன்ஜினியர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் சொல்லுங்கள்,' என்றனர். அவர்கள், இன்ஜினியர்கள் இருக்கும் அறைக்கும் வழிகாட்டினர். ஆனால், நாம் சென்றபோது அந்த அறையில் ஒருவர்கூட இல்லை. இதையடுத்து, உதவி ஆணையரின் அலுவலக அறையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த கடைநிலை பெண் ஊழியர் ஒருவரிடம் கேட்டதற்கு, எல்லோரும் கேம்ப்பிற்குச் சென்றுவிட்டதாகக் கூறினார்.


இதுகுறித்து மகப்பேறு மருத்துவமனைக்கு வந்த பொதுமக்கள் சிலர் கூறுகையில், ''காலி மனைகளில் தண்ணீர் தேங்கினாலோ, அசுத்தமாக இருந்தாலோ மாநகராட்சி அந்த நிலத்தைக் கைப்பற்றிக்கொள்ளும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், மாநகராட்சிக்குச் சொந்தமான காலி நிலத்திலேயே கழிவுநீரும், மழைநீரும் நோய் பரப்பும் வகையில் தேங்கி இருக்கிறது. இந்த நிலத்தை மாநகராட்சி ஆணையர் மக்களுக்கு பட்டா போட்டு கொடுத்துவிடுவாரா?,'' என நக்கலாகக் கேட்டுவிட்டுச் சென்றனர்.




 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.