சேலம், சூரமங்கலம் திருவாக்கவுண்டனூர் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (36). இவருடைய மனைவி காவியா (30 பெயர் மாற்றப்பட்டுள்ளது). டிச. 1 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அதன் பின் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பூபதி, மனைவியைக் காணவில்லை என்று சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வீட்டில் நடத்திய சோதனையில், அங்கிருந்து காவியா எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தைக் கைப்பற்றினர்.
அந்தக் கடிதத்தை காவியா தன்னுடைய கணவருக்கு எழுதி இருந்தார். அதில், “உன்னை எனக்குப் பிடிக்கவில்லை. நான் செல்கிறேன். என்னை தேட வேண்டாம்” என்று மட்டும் எழுதியிருந்தார். விசாரணையில், காவியாவுக்கும், பூபதியின் நண்பரான சேலம் அம்மாபேட்டை மிலிட்டரி சாலையைச் சேர்ந்த கண்ணன் (32) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்து வருவதும், அவருடன் சரண்யா சென்றுவிட்டதும் தெரிய வந்தது.
பூபதியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதில் கண்ணனுக்கும் காவியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் நெருக்கமான உறவாக மாறியிருக்கிறது. டிச. 1 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய காவியா, கண்ணனுடன் ஒரு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து காவியாவை மீட்ட காவல்துறையினர் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர், இனிமேல் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்றும், கண்ணனுடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறினார். காவல்துறையினர் அறிவுரை வழங்கியும் அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தார். இதையடுத்து இரு தரப்பினரிடமும் எழுதி வாங்கிவிட்டு அனுப்பி விட்டனர்.
இந்நிலையில், டிச. 7 ஆம் தேதி மாலை பூபதியும் கண்ணனும் அலைபேசியில் பேசியுள்ளனர். அப்போது சமாதானம் பேசிக்கொள்ளலாம் என கண்ணனிடம் பூபதி தெரிவித்துள்ளார். அதன்பேரில் திருவாக்கவுண்டனூரில் உள்ள ஒரு கோயில் திடலில் வைத்து இருவரும் பேசியுள்ளனர். பின்னர் நண்பர்கள் இருவரும் ஒன்றாக மதுபானம் குடித்துள்ளனர். போதை தலைக்கேறிய நிலையில் இருந்த பூபதி திடீரென்று, என்னுடன் நண்பனாக பழகிவிட்டு எனக்கே துரோகம் செய்து விட்டாய். என் மனைவியையே அபகரித்து விட்டாயே என்று கூறி கண்ணனிடம் தகராறு செய்தார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.
ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற பூபதி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கண்ணனை சரமாரியாக வெட்டினார். இதில் கண்ணனுக்கு கழுத்து, நெஞ்சு, தலை, கை ஆகிய இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது. ஒருவழியாக அவரிடம் இருந்து தப்பிய கண்ணன், அங்கிருந்த தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாக ஓட்டிச்சென்றார்.
கத்தி வெட்டில் பலத்த காயம் அடைந்திருந்த கண்ணன், கொண்டலாம்பட்டி அருகே வேகமாக சென்றபோது அவர் மீது எதிரில் வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மேலும் பலத்த காயம் அடைந்தார். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அவரை மீட்டு, '108' ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் கொண்டு சென்று சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் பூபதி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையே பூபதி தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர்.