Skip to main content

மாவோயிஸ்ட் மணிவாசகம் உடல் சேலம் வந்தது! கேரள அரசை கண்டித்து போராளிகள் கண்டன முழக்கம்!!

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

கேரள மாநிலக் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் போராளி மணிவாசகத்தின் உடல், கேரளாவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் புதன்கிழமை (நவ. 13, 2019) சேலம் கொண்டு வரப்பட்டது.

manivasakam


சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மணிவாசகம் (55). மாவோயிஸ்ட் போராளியான இவர், கேரளாவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பதுங்கி இருந்து மாவோ இயக்க போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து மத்திய உளவுத்துறை அளித்த தகவலின்பேரில், கேரளாவில் செயல்பட்டு வரும் தண்டர்போல்ட் தனிப்படை காவல்துறையினர் கடந்த அக். 29ம் தேதி, அட்டப்பாடி அருகே வைத்து மாவோ போராளிகள் சிலரை சுற்றி வளைத்தனர்.


அப்போது ஏற்பட்ட மோதலில், மணிவாசகம், சென்னையைச் சேர்ந்த கார்த்திக், அரவிந்த் என்கிற சீனிவாசன், கன்னியாகுமரியைச் சேர்ந்த அஜிதா ஆகிய நான்கு போராளிகளை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். இவர்களை பிடித்து வைத்துக்கொண்டு திட்டமிட்டு சுட்டுக்கொன்றுவிட்டு என்கவுன்டர் செய்ததாக கதை விடுவதாக  ஆளும் பினராயி விஜயன் அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பி உள்ளன. 

salem manivasakam incident kerala govt against fighters strike


இது ஒருபுறம் இருக்க, கொல்லப்பட்ட நால்வரின் சடலங்களும் உடற்கூறாய்வு செய்து முடிக்கப்பட்டது. மணிவாசகத்தின் உடலை சொந்த ஊரில் அடக்கம் செய்ய கேரளா நீதிமன்றமும் அனுமதி அளித்தது. மணிவாசகத்தின் உடலை அடையாளம் காண்பதற்காக தீவட்டிப்பட்டியில் வசிக்கும் அவருடைய தங்கை லட்சுமி சென்றபோது, சடலத்தை பார்ப்பதற்கே அனுமதிக்காமல் கேரளா காவல்துறை நிறைய முட்டுக்கட்டைகளை போட்டுள்ளது. 


பின்னர் நீதிமன்ற உத்தரவு மூலம் சடலம் அடையாளம் காணப்பட்டது. அதன் பிறகு தான் உடற்கூறாய்வு செய்து முடித்துள்ளனர். இந்நிலையில் மணிவாசகத்தின் உடல், சொந்த ஊரில் அடக்கம் செய்வதற்காக, கேரளாவில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் புதன்கிழமை (நவ. 13, 2019) இரவு 7.55 மணியளவில் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. 


இதுகுறித்து முன்கூட்டிய தகவல் அறிந்திருந்த மாவோவிய செயல்பாட்டாளர்களான விவேக், வளர்மதி, சுரேஷ்ராஜன், மாரியப்பன், வெங்கடேஷ், தமயந்தி, ஈஸ்வரி, வின்சென்ட் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். சடலம் பாதுகாப்பாக, பிணவறையில் வைக்கப்பட்டது. பிணவறைக் கிடங்கு முன்பு கூடிய மாவோவிய போராளிகள், மணிவாசகம், சுரேஷ், கார்த்திக், அஜிதா ஆகியோரின் உருவப்படங்கள் அச்சிட்ட பதாகைகளை ஏந்தி க்கொண்டும் செவ்வணக்கம், இன்குலாப் ஜிந்தாபாத் எனக்கூறி முழக்கமிட்டனர்.

salem manivasakam incident kerala govt against fighters strike


மேலும், மாவோயிஸ்டுகள் வர்க்கப் போராளிகளே; தீவிரவாதிகள் அல்ல என்றும், மாவோவிய போராளிகள் நால்வரும் கொல்லப்பட்டதற்கு பினராயி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் எழுதப்பட்ட பதாகைகளையும் தாங்கி வந்திருந்தனர். குறிப்பாக கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூ., அரசைக் கண்டித்தும், முதல்வர் பினராயி விஜயனைக் கண்டித்தும் முழக்கமிட்டனர். 


மணிவாசகத்தின் தங்கை சந்திரா, அவருடைய மனைவி கலா ஆகியோரும் மாவோவிய இயக்கங்களில் சேர்ந்து செயல்பட்டு வந்தனர். அவர்கள் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் ஓராண்டுக்கும் மேலாக அடைக்கப்பட்டு உள்ளனர். மணிவாசகத்தின் இறுதிச்சடங்கில் அவர்களும் கலந்து கொள்ள, நீதிமன்றம் ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. 


அவர்கள் இருவருக்கும் வியாழக்கிழமை (நவ. 14) அல்லது வெள்ளிக்கிழமைக்குள் பரோல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் வந்த பிறகு, மணிவாசகத்தின் உடல், சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட உள்ளது.


இதையொட்டி அசம்பாவிதங்களைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் லத்தி மற்றும் தடுப்பு உபகரணங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நுண்ணறிவுப்பிரிவு, கியூ பிரிவு, எஸ்பிசிஐடி, ஐபி என பல்வேறு உளவுப்பிரிவு காவல்துறையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். மாவோயிஸ்டு ஆதரவாளர்கள், காவல்துறையினர், ஊடகத்தினர் குவிந்ததால் அரசு மருத்துவமனை வளாகமே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.