சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள வெடிக்காரன்புதூர் நாய்க்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி (40). மரம் அறுக்கும் கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி தங்கமணி (37). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாலசுப்ரமணிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. பெற்றோர் வீட்டில் இருந்து பணம் கொண்டு வரும்படியும் அடிக்கடி மனைவியை அடித்துச் சித்ரவதை செய்துள்ளார்.

Advertisment

m

கணவரின் தொல்லை தாங்காமல், கோபித்துக்கொண்டு தங்கமணி அடிக்கடி பெற்றோர் வீட்டுக்குச் சென்று விடுவார் எனக்கூறப்படுகிறது. இதனாலும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன், கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தங்கமணி, மல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் அவர்களை நேரில் அழைத்து சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Advertisment

கடந்த இரு நாள்களுக்கு முன்பும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதை அடுத்து, தங்கமணி தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) காலை, மனைவியைத் தேடி மாமனார் வீட்டுக்குச் சென்ற பாலசுப்ரமணி, குடும்பம் நடத்த வருமாறு தங்கணியை அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாலசுப்ரமணி, வீட்டில் இருந்த அரிவாளால் தங்கமணியின் கழுத்தை அறுத்துள்ளார். உயிருக்குப் போராடிய நிலையில் தங்கமணி ரத்தம் சொட்ட சொட்ட வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடி வந்துள்ளார்.

Advertisment

அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில், வரும் வழியிலேயே தங்கமணி இறந்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மல்லூர் காவல்துறையினர் தங்கமணியின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய பாலசுப்ரமணியை பிடித்து விசாரித்து வருகின்றனர். கணவனே, மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.