Skip to main content

சேலம் மாவட்டத்தில் 2142 உள்ளாட்சிப் பதவிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 27/12/2019 | Edited on 27/12/2019

சேலம் மாவட்டத்தில் முதல்கட்டமாக இன்று (டிச. 27, 2019) 2142 ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. சரியாக காலை 07.00 மணிக்குத் தொடங்கி, மாலை 05.00 மணிக்கு முடிகிறது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.


தமிழகம் முழுவதும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக, 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் இன்று (டிசம்பர் 27) நடந்து வரும் நிலையில், இண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் வரும் 30ம் தேதியும் நடக்கிறது. பதிவாகும் வாக்குகள் ஜனவரி 2ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிப்பட இருக்கிறது.

salem local body election peoples votes


சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரையில், மொத்தம் 20 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி மன்றத் தலைவர், கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் என மொத்தம் 4299 பதவிகள் உள்ளன. 


இப்பதவிகளுக்கு மொத்தம் 17217 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவற்றில் 17003 மனுக்கள் ஏற்கப்பட்டு, 214 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 2677 பேர் வேட்புமனுக்கள் திரும்பப் பெற்றனர். 403 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து 13923 பேர் தேர்தல் களத்தைச் சந்திக்கின்றனர்.


முதல்கட்டமாக, இடைப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி மற்றும் ஏற்காடு ஆகிய 12 ஒன்றியங்களுக்கு இன்று (27.12.2019) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.


வாக்குப்பதிவு காலை 07.00 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 05.00 மணிக்கு முடிகிறது. மேலும், 17 மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், 169 ஒன்றியக்குழு உறுப்பினர், 194 கிராம ஊராட்சி மன்றத் தலைவர், 1914 கிராம ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர் என 2294 பதவிகளுக்கும் வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது. இவற்றில் 152 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர் என்பதால், 2142 பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்று வருகிறது. இப்பதவியிடங்களுக்கு கிட்டத்தட்ட 11 ஆயிரம் பேர் போட்டியிடுகின்றனர்.


முதல்கட்ட வாக்குப்பதிவில் 482652 ஆண் வாக்காளர்களும், 455758 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 938445 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். முதல்கட்ட வாக்குப்பதிவுக்காக 1568 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.


தேர்தல் பணியில் வாக்குச்சாவடி அலுவலர், நிலை அலுவலர்கள், உதவியாளர்கள் என 18 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். அசம்பாவிதங்களைத் தடுக்க சேலம் மாவட்ட, மாநகர காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் என மொத்தம் 3000 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.