Skip to main content

சேலத்தில் அரசுப்பள்ளியில் மதுபான டோக்கன்! கல்வித்துறை விசாரணை!!

Published on 08/05/2020 | Edited on 08/05/2020
 Salem: Liquor token at Government School! ;Academic Inquiry !!

 

சேலம் அருகே, அரசுப்பள்ளியில் மதுபானங்கள் வாங்க டோக்கன் விநியோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று அபாயம் காரணமாக தமிழகம் முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு வரும் 17ம் தேதி வரை அமலில் இருக்கும். இதையொட்டி அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் தவிர, டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன.


இந்நிலையில், தமிழகத்தில் 43 நாள்களாக மூடப்பட்டு இருந்த டாஸ்மாக் கடைகள் வியாழக்கிழமை (மே 7) திறக்கப்பட்டன. மதுபானங்கள் வாங்க டோக்கன் முறை கொண்டு வரப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரத்தில் ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மது வாங்குவதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முண்டியடித்தனர். நெரிசலை தவிர்ப்பதற்காக அருகில் உள்ள அரசுத் தொடக்கப்பள்ளி வளாகத்தில் வைத்து மது பிரியர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. 

மது பிரியர்கள் வரிசையில் நின்று டோக்கன் பெற்றுச்சென்றனர். டாஸ்மாக் ஊழியர்கள் அனைவருக்கும் டோக்கன் விநியோகம் செய்தனர். மதுபானங்களுக்காக பள்ளிக்கூடத்தில் டோக்கன் விநியோகம் செய்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வேடியப்பனிடம் கேட்டபோது, ''காமலாபுரம் டாஸ்மாக் கடையில் மது வாங்க ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களை வரிசையாக நிறுத்தி வைத்து டோக்கன் விநியோகம் செய்யும் அளவுக்கு அங்கே இடவசதி இல்லாததால், அருகில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் வைத்து டோக்கன் வழங்கலாம் என காவல்துறையினர்தான் அதற்காக ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். டோக்கன் மட்டும்தான் அங்கே விநியோகம் செய்யப்பட்டது,'' என்றார். 

இதுபற்றி பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ''டாஸ்மாக் மதுபானத்திற்காக அரசுப்பள்ளியில் டோக்கன் வழங்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்படும்,'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

மக்களவைத் தேர்தல்; மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Lok Sabha elections; Orders to close liquor shops!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

இந்த நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்த சுற்றறிக்கை, அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் மதுக்கடைகளை மூட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.