Skip to main content

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்டிய மனைவி! வீட்டுக்குள்ளேயே சடலம் புதைப்பு; திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!!

Published on 26/06/2020 | Edited on 26/06/2020

 

salem rajagiri house

 

தவறான தொடர்பில் உள்ள ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனின் கழுத்தை நெரித்துத் தீர்த்துக்கட்டிய மனைவி, சடலத்தைக் கழிவு நீரோடை அருகே குழி தோண்டி புதைத்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் கந்தம்பட்டி செஞ்சிக்கோட்டையைச் சேர்ந்தவர் சேட்டு என்கிற ராஜகிரி (45). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பூங்கொடி (37). இவர்களுக்கு பிளஸ்1 படிக்கும் வயதில் ஒரு மகளும், 9ஆம் வகுப்புப் படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். 

 

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு ராஜகிரியை விட்டு பூங்கொடி தனியாக பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மகள், மகன் இருவரையும் ராஜகிரி தனியாக வளர்த்து வந்தார் என்றாலும், அவ்வப்போது பூங்கொடி பிள்ளைகளை நேரில் வந்து பார்த்துச் சென்றுள்ளார்.

 

இந்நிலையில், தன் மகள் 'பெரியவளாகி' விட்டாள் என்பதை அறிந்த பூங்கொடி, நான்கு மாதங்களுக்கு முன் மகள், மகனைக் காண கந்தம்பட்டிக்கு வந்தார். மகளுக்காக தான் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். ராஜகிரியும், மனைவியின் தவறை மன்னித்து ஏற்றுக்கொண்டதை அடுத்து, இருவரும் குடும்பத்துடன் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

 

இந்நிலையில், ஜூன் 8ஆம் தேதி, கணவர் ராஜகிரி வெளியூருக்கு வேலைக்குச் சென்றுவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். மேலும், ஜூன் 16ஆம் தேதி, தன் பிள்ளைகள் இருவரிடமும் தலா 200 ரூபாயைக் கொடுத்து கைச்செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு, தானும் வெளியூர் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றுவிட்டார். அதன்பின் பூங்கொடியும் எங்குச் சென்றார் எனத் தெரியவில்லை.


ராஜகிரியின் தம்பி ராஜேந்திரன் என்பவரும் அதே பகுதியில்தான் வசித்து வருகிறார். வெளியூர் சென்றதாகச் சொல்லப்பட்ட அண்ணனிடம் இருந்தும் எந்தத் தகவலும் இல்லை; அண்ணியையும் காணவில்லை என்பதால் சந்தேகம் அடைந்தார். அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, இருவரின் செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

 

இதையடுத்து ராஜேந்திரன், தனது அண்ணனும், அண்ணியும் காணவில்லை என்று சூரமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் செந்தில் மற்றும் காவலர்கள் ராஜகிரியின் வீட்டிற்குச் சென்று நேரில் விசாரித்தனர். அப்பகுதி மக்களும் ராஜகிரியின் வீட்டுப் பின்பக்கத்தில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகக் கூறியதால் அந்த இடத்தையும் பார்வையிட்டனர்.

 

அங்கே சென்று பார்த்தபோது, பழைய பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கே ரத்தக்கறைகள் மண்ணில் படிந்திருந்தன. குழி தோண்டப்பட்டதற்கான தடயமும் இருந்தது. இதனால், ராஜகிரியைக் கொன்று சடலத்தை அங்கே புதைத்திருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து, வட்டாட்சியர் முன்னிலையில் வியாழக்கிழமை (ஜூன் 25) சந்தேகத்திற்குரிய இடம் தோண்டப்பட்டது. அங்கே அழுகி, சிதைந்த நிலையில் ராஜகிரியின் சடலம் கிடந்தது. சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

கணவன், பிள்ளைகளைப் பிரிந்து பத்தாண்டுகள் கழித்து மீண்டும் பூங்கொடி வீடு திரும்பியதும், திடீரென்று அவர் தலைமறைவாகிவிட்டதும் காவல்துறைக்கு பூங்கொடி மீது பலத்த சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே, பூங்கொடியைத் தேடி, அவருடைய சொந்த ஊரான தர்மபுரி மாவட்டம் பெரும்பாலைக்கு காவல்துறையினர் சென்றனர். ஆனால் அவர் அங்கு இல்லை.

 

பூங்கொடி, சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சோளம்பள்ளத்தில் தனது ஆண் நண்பரான புருஷோத்தமன் என்பவர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

 

இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சோளம்பள்ளம் புருஷோத்தமனுடன் பூங்கொடிக்கு தகாத உறவு இருந்து வந்தது. அதனால்தான் கணவன், பிள்ளைகளை விட்டு பத்தாண்டுக்கு முன்பு பிரிந்து சென்றதும், அதன்பின் புருஷோத்தமனுடன் தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில்தான், நான்கு மாதங்களுக்கு முன்பு மனம் திருந்திவிட்டதாகக் கூறி, கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

 

அப்போதும் அவர்கள் இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ஜூன் 8ஆம் தேதியன்று, பிள்ளைகள் இருவரும் உறவினர் வீட்டுத் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகச் சென்றுவிட்டனர். அப்போது கணவன், மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த புருஷோத்தமன், அங்கு வந்துள்ளார். அப்போது பூங்கொடி, 'அவன் ஒழிந்தால்தான் எனக்கு நிம்மதி கிடைக்கும்' என்று அழுது புலம்பியுள்ளார். இதையடுத்து பூங்கொடியும், புருஷோத்தமனும் ராஜகிரியைக் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளனர். 

 

கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் சடலத்தை வெளியே சென்று புதைப்பதில் சிக்கல் ஏற்படும் எனத் திட்டம் போட்ட அவர்கள், வீட்டுக்குப் பின்பக்கத்தில் குழிதோண்டி சடலத்தைப் புதைத்துவிட முடிவு செய்தனர். அதன்படியே இரவோடு இரவாக ராஜகிரியின் சடலத்தை, குழி தோண்டி புதைத்துள்ளனர். இதுகுறித்து யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக பூங்கொடியும் அதே வீட்டில் பத்து நாள்களாக இருந்துள்ளார்.

 

http://onelink.to/nknapp

 

வெளியே சென்று வீடு திரும்பிய குழந்தைகள் அப்பா எங்கே கேட்டபோதும், வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டதாகக் கூறி நம்ப வைத்திருக்கிறார். அதன்பிறகு, ஜூன் 18ஆம் தேதி, பூங்கொடியும் வெளியூர் செல்வதாக தன் பிள்ளைகளிடம் பொய்ச் சொல்லிவிட்டு, அந்த வீட்டில் இருந்து கிளம்பி புருஷோத்தமன் வீட்டுக்குச் சென்றுவிட்டது விசாரணையில் தெரிய வந்தது. 

 

தவறான தொடர்பு வைத்திருந்த ஆணுடன் சேர்ந்து மனைவியே கணவனை தீர்த்துக்கட்டியதுடன், சடலத்தை வீட்டுக்குள்ளேயே குழிதோண்டி புதைத்த சம்பவம் கந்தம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.