Skip to main content

குடிபோதையில் தகராறு; பெரியப்பாவை கட்டையால் அடித்துக்கொன்ற சிறுவன்!

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

சேலத்தில், குடிபோதையில் தகராறு செய்த பெரியப்பாவை தம்பி மகன் உருட்டுக் கட்டையால் அடித்துக்கொன்ற நிகழ்வு குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


சேலம் சூரமங்கலம் ஜாகீர் ரெட்டிப்பட்டி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் சரவணன் (40). கட்டடத் தொழிலாளி. இவருக்கு திருமணாகி இரண்டு மகள்கள் உள்ளனர்.


கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் தனது தாயார் மாதம்மாளுடன் வசித்து வந்தார். சரவணனின் தம்பி முருகேசன். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் இருக்கின்றனர். இவருடைய மனைவி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். அவர், தற்போது நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தனது இரண்டாவது மகனுடன் வசித்து வருகிறார். 


இதனால் முருகேசன், தனது மூத்த மகன் செல்வத்துடன் (வயது 15, பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனி வீட்டில் வசிக்கிறார். சரவணன், முருகேசன், அவருடைய மகன் செல்வம் ஆகிய மூவரும் கட்டட வேலைக்குச் சென்று வந்துள்ளனர்.

SALEM INCIDENT POLICE INVESTIGATION

                                                                                                           (சரவணன்)                

கடந்த சில நாள்களுக்கு முன், அண்ணன், தம்பிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த சரவணன் ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முருகேசன், தனது அண்ணன் சரவணனை தாக்கியுள்ளார். இதையறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை சமாதானம் செய்து விலக்கி வைத்தனர்.


இந்நிலையில், சரவணன் நேற்று இரவு (அக். 13) மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது தம்பி வீட்டில் அவருடைய மகன் செல்வம் (சிறுவன்) மட்டும் தனியாக இருந்துள்ளார். இதைப்பார்த்த சரவணன், அவரிடமும் தகராறில் ஈடுபட்டு, ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன், உருட்டுக்கட்டையால் தனது பெரியப்பா சரவணனை தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், சரவணன் மண்டை உடைந்து, நிகழ்விடத்திலேயே இறந்தார். 


இதுகுறித்து அப்பகுதியினர், சூரமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். ஆய்வாளர் செந்தில் தலைமையிலான காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சடலம், உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சரவணனை அடித்துக் கொன்றதாக பதினைந்து வயது சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பெற்றோரை அவதூறாக பேசியதால் ஆத்திரத்தில் சிறுவன் செல்வம், தனது பெரியப்பாவைக் கொன்று இருப்பது தெரிய வந்தது. குடிபோதையில் தகராறு செய்த பெரியப்பாவை தம்பி மகனே அடித்துக்கொன்ற நிகழ்வு, ஜாகீர்ரெட்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



 

சார்ந்த செய்திகள்

Next Story

இளைஞனால் பெரியம்மாவிற்கு நேர்ந்த கொடூரம்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 young man who stabbed Periyamma to passed away

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ளது கனகவல்லிபுரம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மனைவி சரஸ்வதி. இவருக்கு 55 வயது ஆகிறது. இந்தத் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதன் காரணமாக பொன்னேரியில் உள்ள வீட்டில் குமார் மற்றும் சரஸ்வதி இருவரும் தனியாக வசித்து வந்துள்ளனர். அவ்வப்போது மகள்கள் பொன்னேரிக்கு சென்று பெற்றோர்களை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குமார் வீட்டிற்கு தேவையான பொருள்கள் வாங்க, பொன்னேரி கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அவரின் மனைவி சரஸ்வதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். கடைக்கு சென்றவர், பொருள்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்தபடி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியான குமார், சற்று வேகமாக வீட்டின் உள்ளே நுழைந்து பார்த்துள்ளார். 

அப்போது அவரது மனைவி சரஸ்வதி, வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்ததும் குமார் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார். குமாரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். அப்போது குமாரின் வீட்டுக்குள் சென்று பார்க்கும் போது சரஸ்வதி ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அவர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பின்னர், அங்கிருந்த சிலர் சரஸ்வதியைத் தூக்கி முதலுதவி செய்ய முற்பட்டுள்ளனர். அப்போதுதான் தெரிந்துள்ளது சரஸ்வதி இறந்துவிட்டார் என்று. இதனைக் கேட்டதும் குமார் கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, அங்கிருந்த சிலர் இது குறித்து பொன்னேரி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சரஸ்வதியின் உடல் மற்றும் அவரின் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர். அப்போது சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலி மாயமாகி இருந்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர், அவரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து இந்தக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், சரஸ்வதியின் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலி மாயமாகி இருந்த காரணத்தால் இந்தக் கொலை, சங்கிலிக்காக நடந்திருக்கலாம்.... என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர். இதற்காக, குமார் உட்பட அவரின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் என அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து குமாரிடம் விசாரணை செய்த போது, தனக்கு இந்தப் பகுதியில் சொத்து தொடர்பாகவோ அல்லது வேறு விஷயங்கள் தொடர்பாக எதிரிகள் யாருமே இல்லை எனக் கூறியிருக்கிறார். இதனையடுத்து, குமாரின் வீட்டிற்கு யாரேனும் வந்து சென்றார்களா?... என அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் விசாரித்துள்ளனர். அப்போது சம்பவத்தன்று சரஸ்வதியின் சகோதரி மகனான அசோக்குமார் வந்து சென்றதாக சிலர் கூறியுள்ளனர். உடனே அசோக்குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். முதலில் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய அசோக்குமார், பின்னர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியிருக்கிறார். இதனால், மேலும் சந்தேகமடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அவசர தேவைக்கு பணம் தேவைப்பட்டதால் தனது பெரியம்மாவான சரஸ்வதிடம் சென்று கேட்டதாகவும், அவர் அப்போது பணம் கொடுக்க மறுத்த காரணத்தால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது. வாக்கு வாதத்தின் போது திடீரென ஆத்திரமடைந்த அசோக்குமார், வீட்டில் இருந்த கத்தியைக் கொண்டு சரஸ்வதியை சரமாரியாக குத்தியதும், பின்னர் அவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் பொன்னேரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

எல்.முருகன் மீது வழக்குப் பதிவு

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Case registered against L. Murugan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், தேர்தல் நடத்தை வழிமுறைகளை மீறியதாக நீலகிரி பாஜக வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த மத்திய இணை அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் பல்வேறு கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியதுடன் உதகை அருகே உள்ள கிராமம் ஒன்றுக்குச் சென்று எந்த அனுமதியும் பெறாமல் 100க்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையின் தலைவராக உள்ள துணை வட்டாட்சியர் தனலட்சுமி தேனாடுகம்பை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் நடத்தைகளை மீறியதாக எல்.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.