Skip to main content

கூலித் தொழிலாளியைக் கிணற்றில் தள்ளி கொலை; மனைவி, ஆண் நண்பர் கைது!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

salem husband wife incident police investigation

 

சேலம் அருகே, தவறான உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை மனைவியும், ஆண் நண்பரும் கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள சம்பா நகரைச் சேர்ந்தவர் ரவி (32). மூட்டை தூக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி உதயா (28). இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர்.

 

இந்நிலையில், அக். 6- ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ரவி, இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். கிடைக்கவில்லை.

 

அக்.8- ஆம் தேதியன்று, சம்பா நகரில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஏரிக்கரை அருகே உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் ரவியின் சடலம் மிதப்பது தெரிய வந்தது. அந்தக் கிணறு சுமார் 60 அடி ஆழம் கொண்டது. ஏத்தாப்பூர் காவல்துறையினர் சடலத்தை மீட்டு, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

ரவி, கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து சடலத்தைக் கிணற்றில் வீசி எறிந்தார்களா? எனப் பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரிக்கத் தொடங்கினர்.

 

இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் இளங்கோ நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் சதீஷ்குமார் (24) என்பவருக்கும், ரவிக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. 

 

இது ஒருபுறம் இருக்க, ரவியின் மனைவியுடன் சதீஷ்குமாருக்குத் தவறான தொடர்பு இருந்து வந்தது. இதை அறிந்த ரவி, தனது மனைவி உதயாவை கண்டித்தார். அவர்களுக்குள் இது தொடர்பாக அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது.

 

கணவர் தன்னுடன் தகராறு செய்வதை உதயா, சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, ரவியை தீர்த்துக் கட்டினால்தான் உதயாவுடன் தொடர்பில் இருக்க முடியும் என சதீஷ்குமார் திட்டம்போட்டார். 


அவருடைய திட்டப்படி, கடந்த 6- ஆம் தேதி ரவியை பணம் பாக்கி தொடர்பாகப் பேச வேண்டும் என்று ஏரிக்கரை பகுதிக்கு சதீஷ்குமார் அழைத்துள்ளார். அங்கு வந்த ரவியிடம் சதீஷ்குமார் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

 

cnc

 

ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார், ரவியை அங்குள்ள கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

இதையடுத்து, சதீஷ்குமார், கொலைக்கு உடந்தையாக இருந்த ரவியின் மனைவி உதயா ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இருவரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.