Skip to main content

சேலம்: லட்சம் ரூபாய்க்கு 40 ஆயிரம் வட்டி தருவதாக மோசடி; 1500 பேரிடம் 16 கோடி சுருட்டிய மூவர் கைது!

Published on 20/02/2020 | Edited on 20/02/2020

சேலத்தில், ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 40 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக பொய்யான வாக்குறுதி அளித்து, 1500 முதலீட்டாளர்களிடம் 16 கோடி ரூபாய் சுருட்டிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


சேலம் மெய்யனூர் தாயங்காடு பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (43). சேலம் மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமாரிடம் புகார் அளித்தார். அதில், ''சேலம் 5 சாலை பகுதியில் டிஎன்ஏ எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை கொண்டப்பநாயக்கன்பட்டி மாருதி நகரைச் சேர்ந்த தினகரன் அன்பரசு (30), குரங்குசாவடியைச் சேர்ந்த கந்தகுமார் (30), நாராயண நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (54) ஆகியோர் நடத்தி வந்தனர். 

salem high interest one lakhs 40 thousand interest per month peoples investing money

அவர்களுடைய நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தால், மாதம் 40 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக உறுதி அளித்தனர். இதை நம்பிய நான், எனது நண்பர்களிடமும் கூறினேன். நாங்கள் அனைவரும் சேர்ந்து, அவர்கள் நடத்தி வந்த நிறுவனத்தில் 2.27 கோடி ரூபாய் முதலீடு செய்தோம். ஆனால் அவர்கள் உறுதியளித்தபடி, முதலீட்டுத் தொகைக்கு வட்டித்தொகை தரவில்லை. இதுகுறித்து கேட்டபோது கொலைமிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கூறியிருந்தார்.


இந்தப் புகார் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு, சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கு ஆணையர் உத்தரவிட்டார். ஆய்வாளர் அமுதா வழக்குப்பதிவு செய்து, தினகரன் அன்பரசு, கந்தகுமார், கோவிந்தராஜ் ஆகிய மூவரையும் கைது செய்தார். 


இதுகுறித்து குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''கைது செய்யப்பட்ட மூன்று பேரும் மோசடி செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் நிறுவனத்தைத் தொடங்கி உள்ளனர். அவர்களின் போலி வாக்குறுதியை நம்பிய 1500 முதலீட்டாளர்களிடம் இருந்து 31.47 கோடி ரூபாய் வசூலித்து உள்ளனர். அதில், 15 கோடி ரூபாய் வரை முதலீட்டாளர்களுக்கு வட்டித்தொகை பிரித்துக் கொடுத்துள்ளனர். 16 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருக்கிறார்கள். 


பேராசை பெரு நஷ்டம் என்ற பழமொழிக்கு ஏற்ப, அதிக வட்டிக்கு ஆசைப்பட்டதால் மக்கள் ஏமாந்துள்ளனர். சேலத்தில் தொடர்ந்து இதுபோன்ற குற்றங்கள் நடந்து வருகிறது. மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.