Skip to main content

கரோனா பீதியில் சேலம் அரசு மருத்துவர்கள்! ஜி.ஹெச். பணியாளர்கள் 6 பேருக்கு நோய்த்தொற்று!!

Published on 08/07/2020 | Edited on 08/07/2020

 

SALEM GOVERNMENT HOSPITAL DOCTORS, WORKERS CORONAVIRUS PEOPLES


சேலம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் பணியாளர்கள் 6 பேருக்கு ஒரே நேரத்தில் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்கள் மூலம் தங்களுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்குமோ என மற்ற மருத்துவர்களும் கலக்கம் அடைந்துள்ளனர். 

 

சேலம் மாவட்டத்தில், நேற்று (ஜூலை 7- ஆம் தேதி) வரை மொத்தம் 1340 பேர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் வெளிமாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு வந்தவர்களைப் பரிசோதனை செய்ததில் மட்டும் இதுவரை 301 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நேற்று வரை சேலம் அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் என மொத்தம் 869 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

செவ்வாய்க்கிழமை அன்று ஒரே நாளில் 52 பேருக்கு புதிதாக கரோனா உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நோய் குணமடைந்த 52 பேர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இம்மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்த ஐந்து பேருக்கும் நீரிழிவு, சிறுநீரக பாதிப்பு, இருதய நோய் என வேறு சில நோய்களின் தாக்கமும் இருந்தது. 

 

கரோனா நோயாளிகளுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் தனிமை வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'மெடிக்கல் பிளாக்' கட்டடத்தில் நான்கு தளமும் கரோனா வார்டாக மாற்றப்பட்டு உள்ளன. கூடுதல் படுக்கை வசதிக்காக தரை தளத்தில் இருந்த மருத்துவமனை முதல்வர் அலுவலகமும் பி.எம்.எஸ்.எஸ்.ஒய் கட்டடத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது. 

 

கரோனா சிகிச்சை பணியில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு முதல் 7 நாள்களுக்கு கரோனா வார்டில் பணி ஒதுக்கப்படுகிறது. இரண்டாவது ஏழு நாள்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இந்த இரு சுழற்சியின்போதும் அவர்கள் எக்காரணம் கொண்டு வீட்டுக்குச் செல்ல அனுமதி கிடையாது. மூன்றாவது ஏழு நாள்கள், கரோனா தவிர்த்த பிற மருத்துவப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவ்வாறு சுழற்சி முறையில் மருத்துவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தலுக்குப் பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பும் மருத்துவர்களுக்கு அப்போதும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

 

துறைத்தலைவர்களுக்கு வழக்கம்போல் நிர்வாகப் பணிகள் மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. உதவி / இணை பேராசிரியர் அந்தஸ்திலான மருத்துவர்கள், முதுநிலை பட்டப்படிப்பு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மட்டுமே கரோனா பணி ஒதுக்கப்படுகிறது. கரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர்கள் மூலம் மற்றவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு சேலம் குரங்குசாவடி அருகே உள்ள ஜி.ஆர்.டி. மற்றும் ராமகிருஷ்ணா காந்தி சாலையில் உள்ள விண்சர் கேஸில் ஆகிய தனியார் விடுதிகளில் தனிமைப்படுத்திக் (குவாரண்டைன்) கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீவாரி உணவகத்தில் இருந்து உணவுப் பொருள்கள் தருவித்து வழங்கப்படுகிறது.

 

இது ஒருபுறம் இருக்க, சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் பணியில் இருந்த 6 மருத்துவமனைப் பணியாளர்களுக்கு ஒரே நேரத்தில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இது, ஒட்டுமொத்த அரசு மருத்துவமனை வட்டாரத்திலும் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தொற்று கண்டறியப்பட்ட மருத்துவமனை பணியாளர்கள் மட்டுமின்றி, அதே காலக்கட்டத்தில் கரோனா வார்டில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். இது, மற்ற மருத்துவர்களிடையே உள்ளூர ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

http://onelink.to/nknapp

 

''சென்னையில் எம்.எம்.சி., ராஜிவ்காந்தி, ஸ்டான்லி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் ஆரம்பத்தில் மருத்துவமனை பணியாளர்களுக்குதான் முதன்முதலில் கரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின்னர்தான் மருத்துவர்களுக்கும் தொற்று உறுதியானது. 20- க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். மூன்று அரசு மருத்துவர்கள் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

 

கரோனா வார்டில் பணியாற்றும் மருத்துவர் மற்றும் இதர பணியாளர்களுக்கு மட்டுமின்றி கரோனா தவிர்த்த வழக்கமான மருத்துவப் பணிகளில் ஈடுபடும் அனைத்து மருத்துவர்கள், இதர பணியாளர்களுக்கும் என்- 95 மாஸ்க் மற்றும் பேஸ் ஷீல்டு வழங்க வேண்டும். அதேபோல், சேலம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதுமே அரசு மருத்துவமனைகளில் இப்போதுவரை கரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மட்டுமே சளி தடவல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேறு உடல்நலப் பிரச்னைக்கு வரும் அனைத்து நோயாளிகளுக்கும் சளி தடவல் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். 

 

இன்றைய நிலையில் மருத்துவமனைக்கு வரக்கூடிய எல்லோரையுமே நாம் கரோனா பாசிட்டிவ் உள்ளவர் போல கருதி அதற்குரிய பரிசோதனைகளைச் செய்தால்தான் நோய்த்தடுப்புப் பணிகளை இன்னும் வேகமாகச் செய்ய முடியும்,'' என்கிறார்கள் அரசு மருத்துவர்கள்.

 

ஒரு சிறு கவனக்குறைவும் பெரும் சேதாரங்களை ஏற்படுத்தி விடக்கூடும் அபாயம் இருப்பதால் சேலம் அரசு மருத்துவமனை நிர்வாகம் மட்டுமின்றி, தமிழக அரசும் கரோனா பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், இதர பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.