Skip to main content

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயமான இளம்பெண் எலும்புக்கூடாக கண்டெடுப்பு... கொடூர கொலையாளி கைது!  

Published on 17/12/2021 | Edited on 17/12/2021

 

Salem girl missing case! culprit arrested

 

நாமக்கல் அருகே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம்பெண், எலும்புக்கூடாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரைப் பாலியல் வன்கொடுமை செய்த பின்னர், கொடூரமாக கொலை செய்துவிட்டு சடலத்தைப் புதருக்குள் வீசிச்சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

 

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட அரியூர்நாடு அருகே உள்ள பரவாத்துப்பட்டியைச் சேர்ந்தவர் பங்காரு. விவசாயியான இவருடைய மூத்த மகள் ரேணுகா (21). ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்ட இவர், பெற்றோருக்கு உதவியாக விவசாயப் பணிகளைச் செய்துவந்தார். திருமணம் ஆகாமல் இருந்த ரேணுகா, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று காணாமல் போனார். பல இடங்களில் தேடிப் பார்த்தும் அவர் சென்ற இடம் தெரியவில்லை. ஆனாலும், என்றாவது மகள் திரும்பி வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் பெற்றோர், இதுபற்றி காவல்துறையிலும் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர். 

 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேணுகாவின் மாமா பால்ராஜ், பரவாத்துப்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த தனது கால்நடைகளை ஓட்டிவருவதற்காகச் சென்றிருந்தார். அங்கு ஒரு அடர்ந்த புதர் பகுதியில் எலும்புக்கூடு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இத்தகவல் ஊர் முழுக்க காட்டுத்தீப் போல பரவ, சுற்றுவட்டார பொதுமக்கள் எலும்புக்கூடு இருந்த இடத்திற்குச் சென்றனர். தகவல் அறிந்த வாழவந்திநாடு காவல் நிலைய காவல்துறையினர், எலும்புக்கூட்டைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். 

 

அந்த எலும்புக்கூட்டுடன் துப்பட்டா, சுடிதார் உடையின் சில பகுதிகள் கிழிந்த நிலையில் கிடந்தன. அதனால், மர்ம நபர்கள் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தபிறகு, கொலை செய்துவிட்டு சடலத்தை புதருக்குள் வீசியிருக்கலாம் என சந்தேகித்தனர். இதையடுத்து, வாழவந்திநாடு சுற்றுவட்டாரத்தில் காணாமல் போன பெண்கள் குறித்து விசாரித்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரேணுகா மாயமான விவரங்களைப் பங்காரு கூற, அவரிடம் எலும்புக்கூட்டுடன் கைப்பற்றப்பட்ட துணிகளைக் காண்பித்தனர். பங்காருவும், அவருடைய மனைவியும் அந்தத் துணி தங்கள் மகளுடையதுதான் என்று உறுதிப்படுத்தினர். இதையடுத்து, அந்த எலும்புக்கூடு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

 

காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், பரவாத்துக்காடு பகுதியைச் சேர்ந்த பிடாரன் மகன் ரஜினி (23) என்பவரும், ரேணுகாவும் காதலித்துவந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 

விசாரணையில் குற்றவாளி கூறியது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, “என்னைவிட ரேணுகா இரண்டு வயதுதான் சிறியவர். அவருக்கு நான் சித்தப்பா உறவுமுறை ஆகிறேன். இந்த உறவுமுறை மீறி நாங்கள் இருவரும் காதலித்துவந்தோம். ஆனால் நான் அவருக்கு உறவுக்காரர் என்றுதான் தெரியுமே தவிர, சித்தப்பா உறவுமுறை என்றெல்லாம் தெரியாது. எங்கள் காதலுக்கு எப்படியும் இரு தரப்பு பெற்றோரும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால், பெற்றோர்களுக்குத் தெரியாமல் வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தோம்.

 

இதையடுத்து ரேணுகா, அவருடைய வீட்டிலிருந்து 5 பவுன் நகையை எடுத்துவந்து திருமணச் செலவுகளுக்காக என்னிடம் கொடுத்தார். இந்நிலையில், வீட்டில் இருந்த நகையைக் காணவில்லை என ரேணுகாவின் பெற்றோர் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது வேறு வழியின்றி எல்லா உண்மைகளையும் ரேணுகா அவருடைய பெற்றோரிடம் கூறிவிட்டார். அவர்களோ, எங்கள் இருவருக்கும் என்ன உறவுமுறை என்பதையும் சொன்னதோடு, நாலு பேருக்குத் தெரிந்தால் குடும்பத்திற்கு அவமானம் என்றும் கூறி கதறி அழுதுள்ளனர். 

 

இதனால் பயந்துபோன ரேணுகா, நான் கூலி வேலை செய்துவரும் தோட்டத்திற்கே என்னைத் தேடிவந்து, நகையைத் திருப்பிக் கொடுத்துவிடும்படி கேட்டார். மேலும், ‘நீங்கள் எனக்கு சித்தப்பா உறவுமுறை ஆகிறதாம். அதனால் நம் காதலையும், கல்யாண முடிவையும் இப்போதே கைவிட்டுவிடுவோம். என்னுடைய நகையைத் திருப்பிக்கொடுத்துவிடுங்கள்’ என திட்டவட்டமாகக் கூறினார். 

 

ஆனால் அவரை ஆசை வார்த்தை கூறி, பரவாத்துப்பட்டி அருகே உள்ள வனப்பகுதிக்குள் ஒரு மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றேன். அப்போது ரேணுகாவை திடீரென்று கட்டிப்பிடித்து பாலியல் உறவு வைத்துக்கொள்ள முயன்றேன். அதற்கு அவர் மறுத்தார். அங்கிருந்து தப்பி ஓடவும் முயன்றார். ஆனால் அவருடன் உறவு வைத்துக்கொண்டால் வேறு வழியின்றி எனக்குத் திருமணம் செய்துகொடுத்துவிடுவார்கள் என்ற எண்ணத்தில் அவரை தாக்கி, மயக்கம் அடையச் செய்தேன். 

 

மயங்கிய நிலையில் கிடந்த அவருடன் உறவு கொண்டேன். ஒருவேளை, அவள் ஊருக்குள் சென்று என்னைப்பற்றி தப்புத் தப்பாகச் சொல்லிவிட்டால் என்னாவது என்று யோசித்தேன். அதனால், மயங்கிய நிலையில் கிடந்த ரேணுகாவை தூக்கிச்சென்று ஒரு பாறையில் தலையை மோதச் செய்து கொலை செய்துவிட்டு, புதருக்குள் சடலத்தை வீசிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.” இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

 

இதையடுத்து, காவல்துறையினர் ரஜினியை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பெண்ணின் எலும்புக்கூட்டை வைத்து, குற்றவாளியைக் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்