Skip to main content

சேலம் சூரியூரில் ஆக்கிரமிப்பு குடிசைகள் இடித்து அகற்றம்; வன கிராம மக்கள் எதிர்ப்பு! 

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி அருகே உள்ள ஜல்லூத்துமலை, ஜருகுமலை ஆகியவற்றுக்கு இடைப்பட்ட பகுதியில் சூரியூர் பள்ளக்காடு என்ற மலைக்கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம மக்கள், வனத்துறையினரால் காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட பகுதிகளை ஆக்கிரமித்து குடிசைகளை அமைத்து வசித்து வருகின்றனர்.


ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ளுமாறு வனத்துறை சொல்லி வந்தபோதெல்லாம், காலங்காலமாக வசித்து வரும் எங்கள் பூர்வீக நிலத்தை விட்டு வேறு எங்கும் செல்ல மாட்டோம் என்று மலைவாழ் மக்களும் பதிலடி கொடுத்து வந்தனர். 

salem forest area Cottages court order officers peoples

இது தொடர்பாக சூரியூர் மக்களும், வனத்துறையினரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 15 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம், உயர்நீதிமன்றம் ஓர் உத்தரவை பிறப்பித்தது. அதில், வனத்துறைக்குச் சொந்தமான நிலப்பகுதிக்குள் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது.


இது ஒருபுறம் இருக்க, வனஉரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தங்களுக்கு வனப்பகுதியில் குடியிருக்க பட்டா வழங்க வேண்டும் என்று சூரியூர் பள்ளக்காட்டைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தலைமையில் 50- க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், சூரியூர் பள்ளக்காடு பகுதி முழுவதும் வனத்துறைக்குச் சொந்தமான காப்புக்காடு பகுதியாகும். அதனால் அங்கே யாருக்கும் பட்டா வழங்க முடியாது என்று ஆட்சியரகம் சொல்லி விட்டது. அதனால், ஆக்கிரமிப்பாளர்கள் உடனடியாக குடிசைகளை காலி செய்ய வேண்டும் என்றும் சொல்லப்பட்டது.


அதைத் தொடர்ந்து வனத்துறையினர், சூரியூர் பள்ளக்காட்டைச் சேர்ந்த 14 பேருக்கு ஜன. 27ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்யும்படி நோட்டீஸ் அளித்தது. அதையும் மீறி யாரும் குடிசைகளை காலி செய்யாததால், திங்கள்கிழமை (ஜன. 27) வனத்துறை, வருவய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் சூரியூருக்கு படையெடுத்தனர்.

salem forest area Cottages court order officers peoples

தயாராக கொண்டு செல்லப்பட்ட பொக்லின், புல்டோசர் வாகனங்கள் மூலம் ஏழு குடிசைகள், 7 தகர கொட்டகைகளை அதிரடியாக இடித்து அப்புறப்படுத்தினர். சேலம் வருவாய் கோட்டாட்சியர் மாறன், சேர்வராயன் தெற்கு வனச்சரகர் சரவணன் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் ஊரக டிஎஸ்பி உமாசங்கர் தலைமையில் நூறுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புக்கு குவி க்கப்பட்டனர்.


இதுகுறித்து சூரியூர் பள்ளக்காட்டைச் சேர்ந்த முருகேசன் கூறுகையில், ''காலங்காலமாக நாங்கள் இந்த மலைக்கிராமத்தில்தான் வசித்து வருகிறோம். எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும். எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம்.

salem forest area Cottages court order officers peoples

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வன உரிமைச்சட்டத்தின்படி, சூரியூர் பள்ளக்காடு கிராம மக்களுக்கு பட்டா வழங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக நாங்கள் அளித்த கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாகம் ஏற்கவும் இல்லை. அதேநேரம் நிராகரிக்கவும் இல்லை. இந்த நிலையில், எங்கள் குடிசைகளை இடித்து அகற்றுகின்றனர். எங்களின் கோரிக்கையை அதிகாரிகள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்,'' என்றார்.


இதுகுறித்து சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமியிடம் கேட்டபோது, ''வனத்துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனர். கடந்த 2008ம் ஆண்டு, ஒருமுறை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. அதன்பின் மீண்டும் அதே இடத்தில் ஆக்கிரமித்து குடிசைகளை போட்டுள்ளனர். தற்போது, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, சூரியூர் பள்ளக்காட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்கிறோம். இந்த காப்புக்காட்டில் மரக்கன்றுகள் நடப்படும்,'' என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.