Skip to main content

சேலத்தில் பெண்களை ஆபாசப்படம் எடுத்து பாலியல் வன்புணர்வு!; ஆளும் தரப்புக்காக மூடி மறைக்கிறதா காவல்துறை? 

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

 

சேலத்தில், காதலர்களுடன் தனிமையில் வரும் இளம்பெண்களை மிரட்டி ஆபாசப்படம் எடுத்து, அவர்களை பாலியல் வன்புணர்வு செய்து வந்த கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க சேலம் மாநகர காவல்துறை முடிவு செய்துள்ளது.

k


ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்தவர் இளவரசி (25). பெங்களூருவில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய உறவினர், மூர்த்தி. சேலம் அஸ்தம்பட்டியில் வசிக்கிறார். (பெண் மற்றும் உறவினர் ஆகிய இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன).


கடந்த 22.3.2019ம் தேதி சேலம் வந்திருந்த இளவரசி, மூர்த்தியை சந்தித்துப் பேசியுள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் அன்று இரவு, சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பவானிக்கு சென்று கொண்டிருந்தனர். மூர்த்தி, மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார்.


சேலம் கொண்டலாம்பட்டி அருகே, கோவை பிரதான சாலையில் பட்டர்பிளை மேம்பாலம் அருகே சென்றபோது, பாலத்துக்கு அடியில் இருட்டுப் பகுதியில் மறைந்து இருந்த ஒரு கும்பல், அவர்களை வழிமறித்தது. அந்த கும்பல் கத்தி முனையில், இளவரசி அணிந்திருந்த நான்கரை பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டது. 


இதுகுறித்து இளவரசி அளித்த புகாரின்பேரில் கொண்டலாம்பட்டி காவல்துறையினர், கொண்டலாம்பட்டி புத்தூரைச் சேர்ந்த மணிகண்டன் (21), அவருடைய கூட்டாளிகள் சுபாஷ் (27), இளங்கோ (28), தினேஷ் (27) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து 40 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.


இதற்கிடையே, பிடிபட்ட கும்பல் மேலும் பல பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும், அவர்களை செல்போனில் ஆபாசப்படம் எடுத்து மிரட்டி, பலமுறை பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகின. எனினும், இதுகுறித்து காவல்துறையினர் வெளிப்படையாக பேசாமல் தொடர்ந்து கள்ள மவுனம் காத்து வருகின்றனர்.


இந்நிலையில் காவல்துறையில் உள்ள நம் சோர்ஸ்கள் சிலரிடம் பேசினோம்.


பிடிபட்டவர்களில் மணிகண்டனும், சுபாஷூம்தான் அதிமுக்கிய குற்றவாளிகள் என்கிறது காவல்துறை. இவர்களில் மணிகண்டன் மீது ஏற்கனவே மல்லூர் காவல்துறையினர் பலமுறை செயின் பறிப்பு வழக்கு பதிவு செய்திருப்பதும், அதில் அவரை குண்டாஸ் சட்டத்தின் கீழும் கைது செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. மூன்று ஆண்டுக்கு முன், மல்லூர் சரகத்தில் ஒரு பெண்ணும், ஆணும் நள்ளிரவுக்கு மேல் சாலையோரத்தில் இருட்டுப் பகுதியில் 'ஒதுங்கிய போது', அவர்களை நெருங்கிய மணிகண்டன், பெண்ணுடன் வந்த இளைஞரை அடித்து விரட்டிவிட்டு, பெண்ணுடன் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார். 


தீவிர விசாரணையில் அப்படி சாலையோரம் ஒதுங்கிய பெண், பலான தொழிலில் கொடிக்கட்டி பறந்தவர்தான் என்று கூறும் காவல்துறை தரப்பு, அவரையும் கட்டாயப்படுத்தி உறவு கொள்வதும் குற்றம்தான் என்றும் கூறினர். என்றாலும், கொண்டலாம்பட்டி காவல்துறையினர் இப்போது நடந்த வழக்கில் அந்தப்பழைய குற்றப்பின்னணிகளை பதிவு செய்யவில்லை. தொடர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு காவல்நிலையத்தில் பராமரிக்கப்படும் 'ஹிஸ்டரி ஷீட்' பதிவேடு, மணிகண்டன் மீதும் கொண்டலாம்பட்டி மற்றும் மல்லூர் காவல்நிலையங்களில் பதியப்பட்டுள்ளது. அந்தப் பதிவேட்டை வைத்துதான் இளவரசி அளித்த புகாரில், உடனுக்குடன் மணிகண்டனையும் அவருடைய ஆள்களையும் காவல்துறையால் தூக்க முடிந்திருக்கிறது.


காவல்துறையில் உள்ள மற்ற சில சோர்ஸ்களிடம் விசாரித்தபோது, இப்போது புகார் அளித்திருக்கும் இளவரசியும், அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச்சென்ற உறவுக்கார வாலிபரும்கூட தனிமையில் 'ஒதுங்கிய' போதுதான், மணிகண்டன் கும்பலிடம் சிக்கிக்கொண்டனர் என்றனர். அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்ட மணிகண்டன், இருவரிடமும் நீண்ட நேரம் விசாரித்துள்ளான். முதலில் அவர்கள் தங்களை நண்பர்கள் என்றும், உறவுக்காரர்கள் என்றும், பிறகு காதலர்கள் என்றும் மாற்றி மாற்றி கூறியுள்ளனர். 


அதன்பிறகு, அவர்கள் இருவரையும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து உதடுகளில் முத்தம் கொடுக்கச்சொல்லி, அதை தன்னுடைய செல்போனில் படம் பிடித்துக்கொண்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நகைப்பறிப்பு குறித்து காவல்துறையில் சொன்னால், உங்கள் இருவரின் 'லிப்லாக் கிஸ்' படத்தை இணையத்தில் பரவச்செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். எனினும், இளவரசி அளித்துள்ள சிஆர்பிசி பிரிவு 161 வாக்குமூலத்தில், தன்னை மணிகண்டன் மற்றும் கூட்டாளிகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தவில்லை என்றே தெரிவித்துள்ளார். இந்த கும்பல் மீது வழக்கமான வழிப்பறி குற்றம் மட்டுமின்றி தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் பெண்களிடம் பாலியல் வன்முறையில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டப்பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


மேலும், பலான தொழிலில் உள்ள நான்கு பெண்களிடம் மணிகண்டன் செல்போனில் ஆபாசப்படம் எடுத்து வைத்துக்கொண்டு, பலவந்தமாக உறவு கொண்டிருப்பதாகவும் சொல்கிறது காவல்துறை. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு முக்கிய குற்றவாளியான வெங்கடேசன் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் சம்பவத்துடன் இதையும் முடிச்சுப்போட்டு சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், மணிகண்டன் மற்றும் சுபாஷ் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க கொண்டலாம்பட்டி காவல்துறை முடிவு செய்துள்ளது.


இது தொடர்பாக நாம் கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் புஷ்பராணியிடம் கேட்டபோது, ''பிடிபட்ட கும்பல் 50 பெண்கள், 100 பெண்களை ஆபாசப்படம் எடுத்து பாலியல் வன்புணர்வு செய்ததாக ஊடகங்களில்தான் செய்திகள் வருகின்றன. எங்கள் விசாரணையில் அப்படிப்பட்ட தகவல்கள் கிடைக்கவில்லை. அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக செயின்பறிப்பு போன்ற குற்றங்களில்தான் ஈடுபட்டு வந்துள்ளனர். மல்லூர் காவல் சரகத்தில் மட்டும் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்ததாக தெரிய வந்துள்ளது,'' என்றார். 


இது ஒருபுறம் இருக்க, தேர்தல் நேரம் என்பதாலும், ஆளுதரப்பு மீது கெட்டப்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் காவல்துறையினர் திட்டமிட்டே இந்த பட்டர்பிளை பாலியல் குற்ற விவகாரத்தில் பல உண்மைகளை மூடி மறைப்பதாகவும் கூறப்படுகிறது. காவலில் எடுத்து விசாரிக்கும்போது திடுக்கிடும் தகவல்கள்  வெளியாகலாம் எனத்தெரிகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.