Skip to main content

சேலம் மருத்துவர் சீனா நாட்டுப் பெண்ணை மணந்தார்! திரைகடலோடியும் மணப்பெண் தேடும் தமிழர்கள்...

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், சீனா நாட்டைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பரசுரமன். கால்நடைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி பழனியம்மாள். பதிவுத்துறையில் சார் பதிவாளராக உள்ளார். இவர்களுடைய மகன் அருண்பிரசாத். மருத்துவர். எம்பிபிஎஸ் முடித்துள்ள இவர், கடந்த பத்து ஆண்டுகளாக ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள ஒரு முன்னணி தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

 

 Salem doctor married Chinese woman!

 

அங்குள்ள ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தில் சீனா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டல் ஜியாங் என்ற இளம்பெண், தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அருண்பிரசாத், கிறிஸ்டல் ஜியாங்கும் பகுதி நேரமாக வேறு ஒரு நிறுவனத்திலும் ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். அப்போது இருவரும் நெருங்கிப் பழகத் தொடங்கினர். இந்தப் பழக்கம் காதலாக கனிந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். அருண்பிரசாத்தான் தனது காதலை முதலில் கிறிஸ்டலிடம் கூறியிருக்கிறார். இதற்கு ஆரம்பத்தில் அவர் மறுப்பு தெரிவித்தாலும், பின்னர் ஏற்றுக்கொண்டார். அன்னலும் நோக்கினான்... அவளும் நோக்கினாள். இரு மனங்கள் ஒன்றானபின் அடுத்து திருமணம்தானே? என்னதான் வெளிநாட்டில் பணி, அந்நிய நாட்டுப் பெண்ணைக் காதலித்தாலும் மருத்துவர் அருண் பிரசாத், பெற்றோர் சம்மதத்துடன் காதலியைக் கரம் பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து அவர், தான் விரும்பும் பெண்ணையே மணம் முடித்து வைக்குமாறு சேலத்தில் உள்ள பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆரம்பத்தில் அவருடைய பெற்றோர் இதைக்கேட்டு திகைப்படைந்தாலும், பின்னர் ஒப்புக்கொண்டனர். கிறிஸ்டல் ஜியாங்கும் தனது பெற்றோரிடம் அருண்பிரசாத்தை மணம் முடிக்க சம்மதம் பெற்றார்.

காதல் கல்யாணத்தில் கைகூடும் வேளை நெருங்கி வந்தது. இந்நிலையில்தான் சேலம் ஜான்சன் பேட்டையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில் அவர்களுக்கு கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. சேலம் பேராயர் சிங்கராயன் தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்து, வாழ்த்தினார்.

பின்னர், அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஏற்காடு அடிவாரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 3) நடந்தது. அருண்பிரசாத்தின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். மணப்பெண் கிறிஸ்டல் ஜியாங் தரப்பில் அவருடைய பெற்றோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இதுகுறித்து மருத்துவர் அருண்பிரசாத் கூறுகையில், ''நாங்கள் இருவரும் மனப்பூர்வமாக காதலித்தோம். இருவரின் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தோம். தமிழர்களின் கலாச்சாரத்தின் மீது கிறிஸ்டல் ஜியாங் மட்டுமின்றி அவருடைய பெற்றோருக்கும் ரொம்பவே  மதிப்பு உண்டு,'' என்றார்.

இன்னும் சில நாள்களில் புதுமணத் தம்பதி, ஆஸ்திரேலியா சென்று பணிகளைத் தொடர இருக்கின்றனர். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சீனாவில் இருவருக்கும் பெண் வீட்டார் தரப்பில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திரைகடலோடியும் திரவியம் தேடி வந்த தமிழர்கள் அண்மைக் காலங்களாக மணப்பெண்களையும் தேடி வருவது கணிசமாக அதிகரித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.