Skip to main content

ஏற்காடு; தங்கும் விடுதியில் இளம்பெண்ணின் சடலம்; தவறான தொடர்பால் விபரீதமா? கொலையா? 

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

salem district yercaud guest house incident police investigation

 

ஏற்காட்டில் தனியார் தங்கும் விடுதியில், ஆடைகள் களைந்த நிலையில் தூக்கில் தொங்கிய இளம்பெண் சடலம் கைப்பற்றப்பட்டுள்ளது. தவறான தொடர்பால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சேலம் மாவட்டம், ஏற்காடு முண்கடம்பாடி பகுதியில் ஒரு தனியார் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் ஆண் ஒருவருடன் தங்கியிருந்த பெண், வியாழக்கிழமை (ஜன. 6) அதிகாலையில் தனது அறைக்குள் நிர்வாண நிலையில் தூக்கில் சடலமாகக் கிடந்தார். 

 

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்ணுடன் தங்கியிருந்த வாலிபர், ஏற்காடு காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டு தனது அண்ணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் அளித்தார். 

 

சேலம் ஊரக டி.எஸ்.பி. தையல்நாயகி தலைமையில் ஏற்காடு காவல்நிலைய காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்தனர். சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

 

விசாரணையில், சடலமாகக் கிடந்த பெண்ணின் பெயர் மஞ்சு (வயது 29) என்பதும், அவருடன் தங்கியிருந்த வாலிபர் பெயர் விஜய் (வயது 30) என்பதும், மஞ்சுவின் கணவர் பிரபுவின் உடன் பிறந்த தம்பிதான் இந்த விஜய் என்பதும் தெரிய வந்தது. 

 

இவர்களின் சொந்த ஊர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமம் ஆகும். பிரபு, சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். அப்போது தனிமையில் இருந்த மஞ்சுவும், அவருடைய கொழுந்தனும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். 

 

இருவரும் ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கு அடிக்கடி சென்று விடுதிகளில் அறை எடுத்து தங்கி, நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். 

 

விஜயைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, பிரபுவும், மஞ்சுவும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்திருக்கிறார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே மஞ்சுவுக்கு, விஜய் மீது காதல் ஏற்பட்டுள்ளது. பிரபு வெளிநாடு சென்றுவிட்டார். பிரபு இல்லாதது அவர்களுக்கு மேலும் வசதியாகப் போய்விட்டது. 

 

இருவரும், வீட்டில் யாரும் இல்லாத நேரங்களிலும், வெளியூர்களுக்குச் சென்றும்  அடிக்கடி தனிமையில் ரொம்பவே நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

 

இந்தநிலையில், விஜய்க்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவருடைய பெற்றோர் பெண் பார்க்கத் தொடங்கினர். சமீபத்தில் ஒரு பெண் நிச்சயிக்கப்பட்டு, அவருடன் வரும் ஜனவரி 23- ஆம் தேதி விஜய்க்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன. 

 

இதையறிந்த மஞ்சு, திருமணம் ஆனால் எங்கே விஜய் நம்மை கைவிட்டு விடுவாரோ என்று எண்ணி, வேறு எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று விஜய்யிடம் முறையிட்டுள்ளார். இது தொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மஞ்சுவுக்கு, வேறு ஒரு ஆணுடனும் தொடர்பு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. 

 

இந்நிலையில், மஞ்சு தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று வருவதாகவும், வேலை விஷயமாக வெளியூர் செல்வதாகவும் கூறிவிட்டு விஜய்யும் வீட்டில் இருந்து கிளம்பியுள்ளனர். 

 

பேருந்து மூலமாக சேலம் வந்திறங்கிய அவர்கள், அங்கிருந்து ஏற்காட்டிற்குச் சென்று தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அன்றிரவு இருவரும் சந்தோஷமாக இருந்துள்ளனர். 

 

அதன்பிறகு வேறு பெண்ணை விஜய் மணக்க இருப்பதை மஞ்சு கண்டிக்க, அவர் வேறு ஆணுடன் தொடர்பில் இருப்பதை விஜய் கண்டிக்க, இருவருக்கும் அதே அறையில் வைத்து தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பிறகு இருவரும் சமாதானமாகி தூங்கிவிட்டனர். 

 

இந்நிலையில், ஜன. 6- ஆம் தேதி அதிகாலையில் குளியறைக்குள் தூக்கிட்டு மஞ்சு சடலமாக தொங்கிக் கொண்டிருப்பதை விஜய் பார்த்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. 

 

எனினும், தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து இருந்தால் எதற்காக மஞ்சு நிர்வாண நிலையில் தூக்கிட்டுக் கொள்ள வேண்டும்? ஒருவேளை தன்னுடைய திருமணத்திற்கு அண்ணி மஞ்சு குறுக்கே நிற்பாரோ என்றெண்ணி அவரை விஜயே கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டாரா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தங்கும் விடுதி உரிமையாளர், ஊழியர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.