Skip to main content

சிறுமியுடன் குடும்பம் நடத்திய பூ வியாபாரி போக்சோவில் கைது!! 

Published on 31/12/2021 | Edited on 31/12/2021

 

 

salem district women child incident police arrested and investigation


சேலத்தில், தனது கடைசி மகனுக்கே 17 வயது ஆகும் நிலையில், 13 வயது சிறுமியை கடத்திச் சென்று குடும்பம் நடத்தி வந்த பூ வியாபாரியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

 

சேலத்தை அடுத்த வீராணம் அருகே உள்ள மோட்டூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 47). பூக்களை மொத்தமாக கொள்முதல் செய்து, மாலையாக கட்டி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வராணி. இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகள், 19 மற்றும் 17 வயதில் இரு மகன்களும் உள்ளனர். 

 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஈஸ்வரன் திடீரென்று மாயமானார். அதே பகுதியைச் சேர்ந்த 7ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமியும் காணாமல் போனார். சிறுமியுடன் பூ வியாபாரி ஈஸ்வரன் அடிக்கடி பேசி வந்ததை சிறுமியின் பெற்றோர் பார்த்துள்ளனர். 

 

இதனால் மகளை அவர்தான் கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்று சந்தேகம் அடைந்த பெற்றோர், அம்மாபேட்டை மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

 

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். ஈஸ்வரன் கொள்முதல் செய்து வரும் பூக்களை, மாலையாக கட்டிக்கொடுக்குமாறு மேற்படி சிறுமியின் தாயாரிடம் கொடுத்து வந்துள்ளார். அதனால் அடிக்கடி அவருடைய வீட்டுக்குச் சென்று வந்ததில், சிறுமியுடனும் நெருங்கிப் பழகி வந்துள்ளார். 

 

கடந்த மாதமாக காவல்துறையினர், உறவினர்கள் ஆகியோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

 

இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் இருவரும் வேலை செய்து வருவதாக அம்மாபேட்டை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சிவகாமிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, ஆய்வாளர் சிவகாமி தலைமையில் காவல்துறையினர் வளையப்பட்டிப்பட்டிக்கு விரைந்தனர். 

 

அங்கு கோழிப்பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த இருவரையும் அம்மாபேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தாங்கள் இருவரும் கணவன், மனைவி என்று பொய் சொல்லி கோழிப்பண்ணையில் வேலைக்குச் சேர்ந்திருப்பதும், ஒரே வீட்டில் இருவரும் தம்பதி சகிதமாக குடும்பம் நடத்தி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.  

 

இதையடுத்து, சிறுமியை கடத்திச்சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஈஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். மீட்கப்பட்ட சிறுமியை அரசு காப்பகத்தில் சேர்த்தனர். 

 

சிறுமியை அவருடைய பெற்றோர் வீட்டிற்கு அழைத்தும் அவர் செல்ல மறுத்துவிட்டார். தன்னை ஈஸ்வரன் கடத்திச்செல்லவில்லை என்று அவர் கூறினாலும் சிறுமி என்பதால் அவரை பாதிக்கப்பட்டவராகக் கருதி, ஈஸ்வரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மருத்துவம் பார்ப்பது போல் வந்து தம்பதியைக் கழுத்தறுத்து படுகொலை; அதிரவைத்த கொடூரச் சம்பவம்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Shocking incident on strangled the couple in chennai

ஆவடி அருகே மிட்டனமல்லி காந்தி மெயின் ரோடு இரண்டாவது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சித்த மருத்துவர் சிவன் நாயர். இவர், தனது வீட்டிலேயே மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி பிரசன்னா குமாரி. இவர் மத்திய அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கிறார்கள். இவர்களது மகன், இதே பகுதியில் சித்த மருத்துவம் பார்த்து வருகிறார். இவர்களது மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வழக்கம் போல், இன்று சிவன் நாயர் தனது வீட்டில் சிகிச்சை பார்த்து வந்துள்ளார். அப்போது, சிகிச்சை பார்ப்பது போல வந்த மர்ம நபர்கள் சிவன் நாயர் மற்றும் அவரது மனைவி பிரசன்னா குமாரி ஆகியோரை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் முத்தாபுதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாபுதுப்பேட்டை போலீசார், உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மத்திய அரசு நிறுவனங்கள் அமைந்துள்ள பிரதான பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனரா? என்றும், குடும்ப தகராறு காரணமாக கொலை நடத்தப்பட்டு இருக்குமா? என்ற கோணங்களிலும் முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆவடி காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் கொலை, கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்தப் பகுதியில், எங்கும் சி.சி.டி.வி கேமராக்கள் இல்லாததால் குற்றவாளிகளைப் பிடிக்க போலீசாருக்கு சவாலாக உள்ளது எனக் கூறப்படுகிறது. ஆவடியில் கணவன் மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

9 ஆவது உயிரிழப்பு; வெள்ளியங்கிரியில் மீண்டும் பரபரப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
 9th casualty; Again excitement in Velliangiri

வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது ட்ரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர். மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர்.

அண்மையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய வேலூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞரும், சேலம் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞரும் மலையேறும் போதே மூச்சுத்திணறி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 25 ஆம் தேதி தெலுங்கானாவைச் சேர்ந்த சுப்பாராவ் (வயது 68). மருத்துவரான இவர் நான்காவது மலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அதேபோல் சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் குரங்கு பாலம் என்ற பகுதியில் மயங்கி விழுந்து இறந்து போனார். மேலும் 26 ஆம் தேதி நான்கு மணி அளவில் மலையில் ஏறிக் கொண்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரும் மூச்சுத்திணறி உயிரிழந்தார். அதேபோல் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய ரகுராம் (வயது 50) என்பவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இப்படியாக வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் மலையேறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் வனத்துறை சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் வெள்ளியங்கிரியில் மலை ஏறிய புண்ணியகோடி என்ற 46 வயது மதிக்கத்தக்க நபர் உடல் குறைவால் உயிரிழந்துள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வெள்ளியங்கிரியின் ஒன்றாவது மலையில் சென்று கொண்டிருந்த பொழுது புண்ணியகோடி க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்  செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இந்த உயிரிழப்பின் மூலம் இதுவரை வெள்ளியங்கிரி மலை ஏற சென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.