Skip to main content

டாஸ்மாக் பாரில் மது பாட்டிலால் குத்தி ரவுடி கொலை!

Published on 11/04/2021 | Edited on 11/04/2021

 

salem district tasmac bar incident police investigation

 

சேலத்தில், முன்விரோதத்தில் இரு கோஷ்டிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மது பாட்டிலால் குத்தி ரவுடி கொல்லப்பட்டார். இவ்வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 40). ரவுடியான இவர், சேலம் ஆனந்தா பாலம் அருகில் உள்ள காய்கறி சந்தையில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். 

 

சனிக்கிழமை (ஏப். 10) இரவு, ஆனந்தா பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் அமர்ந்து கிருபாகரன் மது குடித்துக் கொண்டிருந்தார். அவருடைய நண்பர்களான மேட்டுத்தெருவைச் சேர்ந்த அஹமதுஹூசேன் (வயது 30), பட்டைக்கோயில் அருகில் வசிக்கும் சீனிவாசன் (வயது 27) ஆகியோரும் அவருடன் ஒன்றாக மது அருந்தினர்.

 

அதே மதுக்கூடத்தில் மேட்டுத்தெருவைச் சேர்ந்த மோகன் (வயது 27), அவருடைய நண்பர்களான கோகுலகிருஷ்ணன், பூலை மோகன், சுரேஷ் ஆகியோரும் மது குடித்துக் கொண்டிருந்தனர். இவர்களில் மோகன், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிருபாகரனின் நண்பர் ஒருவரின் மனைவியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார்.

 

இதையறிந்த கிருபாகரன், மோகனை கண்டித்ததுடன், இனிமேல் அந்தப் பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். இதனால் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

 

இந்நிலையில், ஏப். 10- ஆம் தேதி மதுக்கூடத்தில் வைத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு வெடித்ததில் மோகனும், அவருடைய கூட்டாளிகளும் மது புட்டிகளை உடைத்து திடீரென்று கிருபாகரன், அஹமது ஹூசேன், சீனிவாசன் ஆகியோரை சரமாரியாக குத்தினர். கிருபாகரனின் வயிற்றில் கத்தியாலும் குத்தியுள்ளனர். தகராறை விலக்கிவிட முயன்ற பட்டைக்கோயில் தெருவைச் சேர்ந்த அம்ஜத் (வயது 30) என்பவருக்கும் மது புட்டியால் குத்து விழுந்துள்ளது.

 

இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. சேலம் நகர காவல் உதவி ஆணையர் மணிகண்டன், காவல் ஆய்வாளர் சிவகுமார் (பொ) மற்றும் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்தனர். அதற்குள் தாக்குதலில் ஈடுபட்ட மோகனும், கூட்டாளிகளும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

 

பலத்த காயம் அடைந்த கிருபாகரன், அஹமது ஹூசேன், சீனிவாசன், அம்ஜத் ஆகியோர் மீட்கப்பட்டு, உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிருபாகரன் உயிரிழந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இச்சம்பவம் தொடர்பாக மோகனை காவல்துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர். பெண் விவகாரத்தில் இரு கோஷ்டிகளுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளதும், அதனால் ஏற்பட்ட கைகலப்பில் கொலை நடந்துள்ளதும் தெரிய வந்தது. இந்த வழக்கில் மோகன் கூட்டாளிகள் மேலும் 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

கொலையுண்ட கிருபாகரன் மீது கிச்சிப்பாளையம் காவல்நிலையத்தில் அடிதடி தொடர்பாக 5 வழக்குகளும், ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் ஒரு கொலை வழக்கும் நிலுவையில் உள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.