Skip to main content

சேலம் அருகே மாயமான சூரியூர் கிராமம்! மலைவாசிகள்- வனத்துறையினர் மோதல்!!

Published on 03/02/2020 | Edited on 03/02/2020

சேலம் அருகே, சூரியூர் வனக்கிராமத்தில் வசித்து வந்த 77 மலைவாழ் குடும்பத்தினரை வனத்துறையினர் சட்டத்திற்கு புறம்பாக அப்புறப்படுத்திய விவகாரம் தொடர்பாக சேலம் மாவட்ட ஜே.எம்.1 மாஜிஸ்ட்ரேட் செந்தில்குமார், வெள்ளிக்கிழமையன்று (ஜன. 31) நேரில் பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்.

salem district sooriyur village peoples forest officers

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்டது சூரியூர் வனக்கிராமம். ஜல்லுத்துமலை, ஜருகுமலை ஆகிய இரு மலைகளுக்கு இடையே சூரியூர் எனும் சிறு கிராமம் அமைந்துள்ளது. இந்த வனக்கிராமத்தில் 77 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருவதுடன், மலையடிவாரத்தில் மலர், காய்கறி விவசாயமும் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட, காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், வனப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேறும்படியும் வனத்துறையினர் கூறினர்.

கடந்த 27.1.2020ம் தேதி, வனத்துறையினர் அதிரடியாக பொக்லின் இயந்திரங்களோடு சூரியூர் சென்றனர். அங்கே வனக்கிராமவாசிகள் அமைத்திருந்த சிறு குடிசைகள், கீற்று கொட்டகைகளை இடித்து அப்புறப்படுத்தினர். அரளி பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்கள், மஞ்சள், வெங்காயம் பயிரிட்டிருந்த விளைநிலங்களையும் நாசப்படுத்தினர். இதையடுத்து இந்த விவகாரம் பெரும் விசுவரூபம் எடுத்துள்ளது.

salem district sooriyur village peoples forest officers


வனத்துறையினர் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி குடிசைகளை அகற்றியதாக சூரியூர் வனக்கிராம மக்கள் மீண்டும் சேலம் மாவட்ட நீதிமன்றத்தின் படியேற, இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜாராம் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழுவை அமைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவு வந்த கையோடு, ஓய்வு பெற்ற நீதிபதி ராஜாராம் ஜன. 28ம் தேதி சூரியூரில் நேரில் விசாரணை நடத்திவிட்டுச் சென்றார். அப்போது அவர், ஆக்கிரமிப்புகளை அகற்றலாம்; ஆனால், விளை நிலங்களையும், வீடுகளில் இருந்த பொருள்களையும் நாசப்படுத்தியது விதிமீறல் எனக்கூறினார்.

இது ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்ட முதலாவது குற்றவியல் நீதித்துறை நீதிமன்ற நடுவர் (மாஜிஸ்ட்ரேட், ஜே.எம்.-1) செந்தில்குமார், ஜன. 31ம் தேதி, மாலை 04.00 மணியளவில், சர்ச்சைக்குரிய சூரியூர் வனக்கிராமத்தில் நேரில் பார்வையிட்டார். 

வனத்துறை சார்பில் தெற்கு வனச்சரகர் சுப்ரமணியம், வருவாய்த்துறை சார்பில் சேலம் வட்டாட்சியர் மாதேஸ்வரன் மற்றும் வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், காவல்துறை ஆய்வாளர் அம்சவள்ளி ஆகியோரும் ஆய்வின்போது உடன் இருந்தனர். வனக்கிராம மக்கள் தரப்பில் சூரியூரைச் சேர்ந்த முருகேசன், அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் சந்திரசேகர், ஸாகிர் அஹ்மத், ஷாஜஹான் ஆகியோரும் உடனிருந்தனர்.

salem district sooriyur village peoples forest officers


கடந்த 27ம் தேதி ஆய்வு செய்த ஓய்வு பெற்ற நீதிபதி ராஜாராம், அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் இருக்கக்கூடாது என்று கூறியதால், அவர்கள் தரப்பில் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பிரச்னைக்குரிய மக்கள் சூரியூர் வனக்கிராமத்திற்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்காக இரவோடு இரவாக வனத்துறையினர், நுழைவுப் பகுதியிலேயே சோதனைச் சாவடி ஒன்றையும் அமைத்துள்ளனர். மேலும், ஊருக்குள் செல்லும் வழித்தடத்தில் ஆறு அடி ஆழத்திற்கு குழியும் வெட்டி வைத்துள்ளனர். 


சம்பவ இடங்களை பார்வையிட்ட மாஜிஸ்ட்ரேட் செந்தில்குமார், சூரியூர் வனக்கிராமம், வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் இல்லை என்பது தெரிகிறது என்றார். அதற்கு சூரியூர் மக்கள் தரப்பு வழக்கறிஞர் ஸாகிர் அஹ்மத், 'கடந்த 2001, 2002ம் ஆண்டுகளில் வனத்துறையினரும், இந்த கிராமம் தங்கள் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது இல்லை,' என்று தெரிவித்துள்ளதாக கூறினார். பிறகு, நீதிமன்ற உத்தரவு நகல் ஒன்றை மாஜிஸ்ட்ரேட்டிடம் காட்டினார். 

salem district sooriyur village peoples forest officers

அதைப் படித்துப்பார்த்த மாஜிஸ்ட்ரேட், ''வனக்கிராம மக்கள் விவசாயம் செய்து வருவதற்கோ, வீடுகள் கட்டியிருந்ததற்கோ ஆதாரங்கள் இல்லை. ஆனால் அதற்கான சில குறியீடுகள் இருப்பதாகத்தான் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேநேரம் சர்ச்சைக்குரிய இந்த பகுதி காப்புக்காடு பகுதிதான் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. சட்டத்திற்கு உட்பட்ட இவர்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதை செய்யலாம். அதற்காக 77 குடும்பத்தினருக்கு 257 ஏக்கர் நிலத்தை வழங்க முடியாது,'' என்றார்.  


வழக்கறிஞர் ஷாஜஹான், ''சூரியூர் வனக்கிராமத்தில் வனத்துறையினர் இதுவரை நான்கு முறை ஆக்கிரமிப்புகளை அகற்றி இருக்கின்றனர். ஒவ்வொரு முறையும் நாங்கள் நீதிமன்றத்தில் இதற்கான தடை பெற்று வந்திருக்கிறோம். ஆனாலும் வனத்துறையினர் தொடர்ந்து இவ்வாறு செய்கின்றனர்,'' என்று மாஜிஸ்ட்ரேட்டிடம் கூறினார்.

salem district sooriyur village peoples forest officers


அதற்கு மாஜிஸ்ட்ரேட் செந்தில்குமார், ''நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததாகச் சொல்ல முடியாது. இவ்விவகாரத்தில் உரிய அமைப்பை நாடுங்கள் என்றுதான் சொல்லி இருக்கிறது. மேலும், சூரியூர் வனக்கிராம மக்கள் கிளெய்ம் செட்டில்மெண்ட் பெற வேண்டுமெனில், பாரஸ்ட் செட்டில்மெண்ட் அலுவலகத்தை நாட வேண்டும். 


அதற்கு மீண்டும் குறுக்கிட்ட வழக்கறிஞர் ஷாஜஹான், ''சார்... இது மூன்று அடுக்கு விசாரணை முறைகளைக் கொண்டது. முதல் அடுக்கில் வருவாய் கோட்டாட்சியர் இப்பிரச்னை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க வேண்டும். அதன்பிறகுதான் நாங்கள் மாவட்ட அளவிலான, அதாவது ஆட்சியரை பார்க்க முடியும். அதன்பிறகு தமிழக அரசை நாட வேண்டும். ஆனால் இதுவரை கோட்டாட்சியரே விசாரணை நடத்தி முடிக்கவில்லை. சூரியூர் வனக்கிராமம் தொடர்பாக இதுவரை கொடுக்கப்பட்ட மனுக்கள் எதுவும் வருவாய்த்துறை வசம் இல்லை என்கிறார்கள்,'' என்று கூறினார். அதற்கு மாஜிஸ்ட்ரேட் பதில் ஏதும் சொல்லாமல், மற்றொரு இடத்திற்கு ஆய்வு செய்ய சென்றார்.


சுமார் இரண்டு மணி நேரம் ஆய்வு நடந்தது. இது தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் செந்தில்குமாரிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்க முயன்றபோது, ''சூரியூர் வனக்கிராமம் தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் நான் எதுவும் சொல்ல முடியாது,'' என்று கூறிவிட்டு கிளம்பிச் சென்றார். ஆய்வு முடிந்து அவர் காரில் ஏறி கிளம்பிச் செல்லும்போது, வனக்கிராம மக்கள் வழித்தடத்தில் திடீரென்று கீழே படுத்து புரண்டு அழுதனர். உரிய தீர்வு கிடைக்க வேண்டும் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.


இதுகுறித்து சூரியூர் வனக்கிராமத்தைச் சேர்ந்த முருகேசனிடம் கேட்டபோது, ''நாங்கள் மூன்று தலைமுறைகளாக 75 ஆண்டுகளுக்கும் மேலாக சூரியூர் வனக்கிராமத்தில் வசிக்கிறோம். வன உரிமை சட்டப்படி மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகள் அல்லது மலைவாசிகளையோ அங்கிருந்து அப்புறப்படுத்தக் கூடாது. திடீரென்று வனத்துறையினர் இந்தப் பகுதியை காப்புக்காடாக அறிவித்து, திட்டமிட்டு எங்களை அப்புறப்படுத்த பார்க்கிறது.

salem district sooriyur village peoples forest officers


நாங்கள் காலம் காலமாக வசித்து வந்த பகுதி காப்புக்காடு என்றால், அதற்கான ஆவண ஆதாரங்களைக் காட்டுங்கள் என்கிறோம். இதுவரை வனத்துறையினர் ஆதாரத்தைக் காட்ட மறுக்கின்றனர். வருவாய்த்துறையின் அடங்கல் ஆவணங்களில், ஜல்லூத்து மலை, ஜருகுமலையை குறிப்பிட சூரியூர் வனக்கிராமத்தை சுட்டிக்காட்டிதான் எல்லை வரையறை செய்திருக்கிறார்கள். ஆனால், இப்போது வருவாய்த்துறையிடம் கேட்டால் சூரியூர் என்ற கிராமமே இல்லை என்கிறார்கள். அப்படி எனில் எங்கள் கிராமம் சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி போல காணாமல் போய்விட்டதா? 


சேலம் மாவட்டத்தில் பனமரத்துப்பட்டி வட்டாரத்தில் 124- வது கிராமம் பனமரத்துப்பட்டி, 125- வது கிராமம் அத்திப்பட்டி, 126- வது கிராமம்தான் சூரியூர். இப்போது வருவாய்த்துறை, வனத்துறை ஆகிய இரண்டு துறைகளின் ஆவணங்களிலும் எங்கள் ஊரைக் காணவில்லை. இல்லாத ஊரில், சொந்த நாட்டில் நாங்கள் அகதிகளைப் போல் வாழ்கிறோம். எங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்க அரசு உரிய தீர்வு வழங்க வேண்டும். இங்கு வசிக்கும் 77 குடும்பத்தினருக்கும் வீட்டு மனை, விவசாய நிலப்பட்டா வழங்க வேண்டும். இப்பிரச்னையில் சுமூக தீர்வு கிடைக்கும்வரை நாங்கள் இங்குள்ள எல்லை பிடாரி அம்மன் கோயில் சத்திரத்தில்தான் தங்கியிருப்போம்,'' என்றார்.


சூரியூர் கிராம மக்கள் அங்குள்ள எல்லை பிடாரி அம்மனை வழிபட்ட பிறகே எந்த ஒரு பணிகளையும் துவங்குகின்றனர். உள்ளூர் மக்கள் பிடாரி அம்மனை சக்தி வாய்ந்த தெய்வமாக கருதுவதோடு, என்ன வேண்டுதல் வைக்கிறோமோ அதை கட்டாயம் பிடாரி அம்மன் நிறைவேற்றித் தருவாள் என்கிறார்கள். சூரியூர் பிரச்னையிலும் சுமூக தீர்வு கிடைக்கட்டும்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.