Skip to main content

என்கவுண்டருக்கு பயந்து ஓராண்டாக தலைமறைவாக இருந்த ரவுடி நீதிமன்றத்தில் திடீர் சரண்!

Published on 04/07/2020 | Edited on 04/07/2020

 

salem district person police court


சேலம், அருகே பல்வேறு கொலை, அடிதடி வழக்குகளில் தொடர்புடைய ரவுடி காட்டூர் ஆனந்தன், காவல்துறை என்கவுண்ட்டருக்கு பயந்து ஓராண்டாக தலைமறைவாக இருந்த நிலையில், திடீரென்று நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

 

சேலத்தை அடுத்த வலசையூர் அருகே உள்ள காட்டூரைச் சேர்ந்தவர் ஆனந்தன் என்கிற காட்டூர் ஆனந்தன் (35). இவர் வீராணம் காவல்நிலையத்தில் ரவுடி பட்டியலில் உள்ளார். பேருந்து நடத்துநர் சண்முகம் கொலை வழக்கு உள்ளிட்ட 3 கொலை வழக்குகளும், பத்துக்கும் மேற்பட்ட அடிதடி, கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் இவர் மீது இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம், முறுக்கு வியாபாரி கணேசன் (30) கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக காரிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இக்கொலையில் தொடர்புடைய மற்றொரு ரவுடி கதிர்வேலை, காவல்துறையினர் கடந்த ஆண்டு என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றனர். 

 

முறுக்கு வியாபாரி கொலை வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ரவுடி காட்டூர் ஆனந்தன் மட்டும் காவல்துறை என்கவுண்டருக்கு பயந்து திடீரென்று தலைமறைவானார். அவருடைய முன்ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், ஓராண்டுக்கு மேலாக தலைமறைவாக இருந்த ரவுடி ஆனந்தன், கடந்த ஜூன் 15ஆம் தேதி, வாழப்பாடி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை காரிப்பட்டி காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது முறுக்கு வியாபாரியை கொலை செய்தது குறித்து பரபரப்புத் தகவல்களைக் கூறியுள்ளார்.

 

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், ''முறுக்கு வியாபாரி கணேசனை கொலை செய்த கும்பலுக்கு காட்டூர் ஆனந்தன்தான் தலைவனாக இருந்துள்ளார். காட்டூரில் உள்ள கோயிலுக்கு ஆனந்தனின் மாமனார் பூசாரியாக இருந்து வருகிறார். அவரிடம், தனக்கு முதல் மரியாதை கொடுக்க வேண்டும் என முறுக்கு வியாபாரி கணேசன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் கணேசனை கொல்ல திட்டமிட்ட ரவுடி காட்டூர் ஆனந்தன், நண்பர்களுடன் சேர்ந்து அவரை தீர்த்துக் கட்டியது தெரிய வந்தது,'' என்றனர்.

 

இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், பின்னர் ஆத்தூர் கிளைச்சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்காளர்களுக்கு பணம்; கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Money for Voters BJP leader caught handed

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி நேற்று நள்ளிரவில் பூலுவப்பட்டியில் உள்ள தேநீர் கடையில் வார்டு வாரியாக ஆலந்துறை பாஜக மண்டல தலைவர் ஜோதி மணி என்பவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளார்.

இது குறித்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணம் விநியோகம் செய்த பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இருந்த ரூ.81 ஆயிரம் ரொக்கப்பணத்தையும், வாக்காளர் பெயர்கள் அடங்கிய பட்டியலையும் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஏற்கனவே சில வார்டுகளில் பணம் விநியோகம் செய்த நிலையில் மேலும் சில வார்டுகளுக்கு பணம் கொடுக்க முயன்றது தெரிய வந்துள்ளது. 

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.