Skip to main content

'வரதட்சணை வழக்கில் முன்னாள் துணைவேந்தரின் சிறைத் தண்டனை ஓராண்டாக குறைப்பு'- உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Published on 10/06/2020 | Edited on 10/06/2020


 

Salem district periyar university Former Vice Chancellor high court


மருமகளை வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும், தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாகவும் தொடரப்பட்ட வழக்கில், சேலம் பெரியார் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்திற்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை ஓராண்டாகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 


சேலம், பெரியார் பல்லைக்கழக முன்னாள் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் மகன் ராஜவேலுவுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம் மோரனஹள்ளியைச் சேர்ந்த சங்கீதா என்பவருக்கும் 2002இல் திருமணம் நடந்தது. திருமணம் நடந்த சில தினங்களில் ராஜவேலு அமெரிக்கா சென்று விட்ட நிலையில், சேதுபதி ராமலிங்கம், தன்னிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததாகவும், அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டுத் தன்னை துன்புறுத்தியதாகவும், சூரமங்கலம் காவல் நிலையத்தில் சங்கீதா புகார் செய்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சேதுபதி ராமலிங்கம், அவரது மனைவி ஜோதி, மகன் ராஜவேல், மகள் மீனாட்சி அனுராதா, மருமகன் பரமேஸ்வரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், சேதுபதி ராமலிங்கத்திற்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது. அதேசமயம், அவரது மனைவி ஜோதி, மகள் மற்றும் மருமகனை விடுவித்து தீர்ப்பளித்தது.
 

 


சேதுபதி ராமலிங்கத்திற்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, சேலம் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சேதுபதி ராமலிங்கமும், அவரை வரதட்சணை சட்டப்பிரிவில் இருந்து விடுதலை செய்ததை எதிர்த்து சூரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நிர்மல் குமார், கீழமை நீதிமன்றங்கள் அனைத்து ஆதாரங்களையும் ஆய்வு செய்து வழங்கிய தீர்ப்பில் தலையிட எந்தக் காரணமும் இல்லை எனக் கூறி, சேதுபதி ராமலிங்கத்தை குற்றவாளி எனத் தீர்ப்பளித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

மேலும், சேதுபதி ராமலிங்கத்திற்கு தற்போது 80 வயதாவதால், அவரது வயதைக் கருத்தில் கொண்டு அவருக்கு விதிக்கப்பட்ட மூன்றாண்டு தண்டனையை, ஓராண்டாகக் குறைத்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதேசமயம், வரதட்சணை குற்றச்சாட்டில் அவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, நீதிபதி நிர்மல் குமார் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனை தொடர்பான வழக்கு; பள்ளிக்கல்வித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court ordered the school education department for Case related to punishment in schools

சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனை விதிப்பதை தடை செய்ய வேண்டும் என்ற தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது. 

இது தொடர்பான மனு இன்று (25-04-24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற கடுமையான தண்டனையைத் தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும். ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். 

விதிகளை மீறி குழந்தைகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக ஏதேனும் புகார்கள் வந்தால், அதன்பேரில் அதிகாரிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக விதிகளை அமல்படுத்துவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும்” என்று கூறி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. 

Next Story

 ரூ.4 கோடி பறிமுதல்; அமலாக்கத்துறை விசாரணை கோரிய மனுவுக்கு நீதிமன்றம் அதிரடி!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. 

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், இந்தச் சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் நான்கு கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் உறவினர்களுக்கு காவல்துறை சார்பில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பட்டிருந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 

The court is acting on the petition requested by the enforcement department to investigateon Rs.4 crore confiscated

இந்த நிலையில், நெல்லை சுயேட்சை வேட்பாளர் ராகவன், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ‘ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று (24-04-24) நடைபெற்றது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், ‘பணம் பறிமுதல் வழக்கு, சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாக கருத முடியாது’ என்று கூறியது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.