Skip to main content

ஹெல்மெட் வாங்கினால் வெங்காயம் இலவசம்; சேலம் வியாபாரியின் நூதன உத்திக்கு கைமேல் பலன்!

Published on 19/12/2019 | Edited on 19/12/2019

பெரிய வெங்காயம் விளைச்சல் சரிவு மற்றும் பதுக்கல் காரணமாக, வரலாறு காணாத வகையில் அதன் விலை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பெரிய வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டு மாதத்திற்கு முன்பு வரை கிலோ 40 ரூபாய்க்கு விற்ற பெரிய வெங்காயம், கடந்த ஒரு மாதமாக கிலோ 200 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இதனால், சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.


மத்திய அரசு, எகிப்து, துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்து, உள்நாட்டு சந்தையில் விநியோகம் செய்து வருகிறது. இதையடுத்து, இந்திய சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கடந்த ஒரு வாரமாக 80 ரூபாயாக குறைந்துள்ளது. பதுக்கல்காரர்களும் கையிருப்பு வெங்காயத்தை சந்தைக்குக் கொண்டு வந்ததாலேயே விலை குறைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
 

salem district one of the shop offcer buy helmet get onion one kg customers


இந்நிலையில், வெங்காய தட்டுப்பாட்டு சீசனை பயன்படுத்திக்கொண்ட சேலம் கோட்டையைச் சேர்ந்த ஹெல்மெட் கடைக்காரர் ஒருவர், தன்னுடைய கடையில் ஹெல்மெட் வாங்கும் ஒவ்வொருவருக்கும் தலா ஒரு கிலோ பெரிய வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த பலரும், அவருடைய கடையில் ஹெல்மெட் வாங்க குவிந்தனர்.


சேலம் மாநகரில் ஹெல்மெட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் காவல்துறையினர் கெடுபிடியாக நடந்து கொள்வதால், இதுவரை ஹெல்மெட் வாங்காதவர்கள்கூட, இலவசமாக பெரிய வெங்காயம் கிடைக்கும் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பால் ஹெல்மெட் வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். 


இதுகுறித்து கடை உரிமையாளர் கூறுகையில், ''சேலத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று காவல்துறையினர் வலியுறுத்துகின்றனர். மாநகரில் இரண்டு முக்கிய சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தில் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. 


இதனால் இயல்பாகவே ஹெல்மெட் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தில், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பெரிய வெங்காயம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தேன். இந்த அறிவிப்புக்கு வாடிக்கையாளர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. ஹெல்மெட் அதிகளவில் விற்பனை ஆகியுள்ளது. வெங்காயம் இலவசம் என்பதால், ஹெல்மெட் வாங்குவோரும் பேரம் பேசுவதில்லை,'' என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.