Skip to main content

சேலம் மாநகரில் சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இனி கறிக் கடைகளைத் திறக்கலாம்! கடும் நிபந்தனைகளுடன் அனுமதி!!

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

SALEM DISTRICT ONE MORE RELAXATION ANNOUNCED CORPORATION


சேலம் மாநகர பகுதிகளில் இனி சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இறைச்சிக் கடைகளைத் திறக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 

கரோனா தொற்று அபாயத்தால் தமிழகம் முழுவதும் மார்ச் 24- ஆம் தேதி மாலை 06.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சி.ஆர்.பி.சி. 144- வது பிரிவின் கீழ் பொதுவெளியில் 5- க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்றாகக் கூடவும் தடை விதிக்கப்பட்டது.
 


ஒரு வாரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தடை உத்தரவில் சிறு தளர்வு அளித்து, மே 3- ஆம் தேதி (ஞாயிறு) இறைச்சிக்கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 9 நாள்களாக இறைச்சி உண்ணாமல் ஏமாற்றத்தில் இருந்த அசைவப் பிரியர்கள் அன்று ஒரே நாளில் கசாப்புக் கடைகளில் குவிந்தனர்.

கடை திறக்கப்பட்ட அன்று சேலம் மாநகரில் குகை, செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, சூரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சிக்கடைகளில் சமூக இடைவெளியின்றியும், முகக்கவசம் அணியாமலும் முண்டியடித்துக் கொண்டு நின்றனர். சமூக விலகல் விதியைப் பின்பற்றாத இறைச்சிக் கடைகளை சேலம் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மூடி சீல் வைத்தது.

அதன்பிறகு மாநகருக்கு வெளியே கருப்பூரில் புதிதாக இறைச்சி சந்தையை உருவாக்கினாலும் கூட பல கி.மீ. தொலைவுக்குச் சென்று ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சியை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டவில்லை. அதையடுத்து நெரிசலைக் கட்டுப்படுத்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் தவிர மற்ற நாள்களில் இறைச்சிக்கடைகளைத் திறக்கலாம் என மாநகராட்சி நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்தது.
 

 


இந்நிலையில், இறைச்சிக் கடைக்காரர்கள் வார நாள்களைக் காட்டிலும் சனி, ஞாயிறு ஆகிய இறுதி நாள்களில் மட்டுமே இறைச்சி வியாபாரம் களைகட்டும் என்பதால், அந்த நாள்களில் மீண்டும் கடைகள் நடத்தவும், வாழ்வாதாரம் மேம்படவும் அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இக்கோரிக்கை மனுக்களைப் பரிசீலித்த மாநகராட்சி நிர்வாகம், மீண்டும் சனி, ஞாயிறு கிழமைகளில் இறைச்சிக் கடைகளை நடத்த அனுமதி அளித்துள்ளது. அதேநேரம் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ''இறைச்சிக் கடைகளில் பணியாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இறைச்சி வாங்கச் செல்லும் வாடிக்கையாளர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாத நபர்களுக்கு இறைச்சி விற்பனை செய்யக்கூடாது.
 

http://onelink.to/nknapp


வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 3 அடி தூரம் சமூக இடைவெளிவிட்டு நிற்க வேண்டும். காலை 05.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை இறைச்சிக் கடைகள் செயல்படலாம். பாலிதீன் பைகளைத் தவிர்த்துவிட்டு, பாத்திரங்களில் மட்டுமே பார்சல் வழங்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறி செயல்படும் இறைச்சிக் கடைகள் உடனடியாக மூடி சீல் வைக்கப்படும். அபராதமும் வசூலிக்கப்படும்'' என்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் மாநகராட்சிக்கு புதிய ஆணையராக பாலசந்தர் ஐஏஎஸ் நியமனம்!      

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

Balachandar IAS appointed as the new Commissioner of Salem Corporation

 

சேலம் மாநகராட்சி புதிய ஆணையராக பாலசந்தர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  சேலம் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த கிறிஸ்துராஜ், கடந்த மே மாதம் 16 ஆம் தேதி, திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, காலியாக இருந்த சேலம் மாநகராட்சி ஆணையர் பொறுப்பை, துணை ஆணையர் அசோக்குமார் கூடுதலாகக் கவனித்து வந்தார்.     

 

இந்நிலையில், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலராகப் பணியாற்றி வந்த கூடுதல் ஆட்சியர் பாலசந்தர் ஐஏஎஸ், சேலம் மாநகராட்சி ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை (ஜூன் 6) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர், சேலம் மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

 

 

Next Story

சாக்கடை சுத்தப்படுத்தும் பணியில் தனிநபரை ஈடுபடுத்தினால் கிரிமினல் நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர்    

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

 Corporation warning criminal action will be taken individual involved sewer work
கோப்புக்காட்சி

 

சாக்கடைக் கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணிகளில் தனி நபர்களை ஈடுபடுத்துவோர் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும் என சேலம்  மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளார்.

 

சேலத்தில் சாக்கடைக் கால்வாயை ஒருவர் பாதுகாப்பு உபகரணங்களின்றி,  சுத்தம் செய்யும் காணொலி காட்சி, மாநகராட்சி நிர்வாகத்துடன் தொடர்ப்புபடுத்தி சமூக ஊடகங்களில் பரவியது. இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் விசாரணை நடத்தினார். காணொலி காட்சியில் உள்ள நபர் மாநகராட்சி பணியாளர் அல்லாத தனி நபர் என்பது தெரிய வந்தது. அவர் வசித்து வரும் பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளின் கோரிக்கையின் பேரில், அந்த நபர்  சாக்கடை கால்வாயில் இறங்கி சுத்தம் செய்ததும் தெரிய வந்தது.     

 

இதையடுத்து, சேலம் மாநகராட்சியின் 60 கோட்டங்களிலும் மாநகராட்சி அனுமதியின்றி, தனிநபர்களை வைத்து சாக்கடைக் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகளை தவிர்க்க வேண்டும் என்று ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார். கழிவுநீர்க் கால்வாய்களில் ஏதேனும் அடைப்புகள் ஏற்பட்டு சுத்தம் செய்ய வேண்டியிருப்பின், பொதுமக்கள் சம்பந்தப்பட்ட கோட்டத்தின்  சுகாதார மேற்பார்வையாளர் அல்லது சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார அலுவலரிடமோ தகவல் தெரிவிக்க வேண்டும்.  

 

மாநகராட்சி அனுமதியின்றி தனிநபர்களைக் கொண்டு சுத்தப்படுத்தும் செயலில் ஈடுபடுத்துவோர் மீது குற்றவழக்கு பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாநகராட்சியில் அனைத்துத் தூய்மைப் பணியாளர்களுக்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், தளவாடப்  பொருள்கள் போதிய அளவில் வழங்கப்பட்டு உள்ளன. தூய்மைப் பணியில் ஈடுபடும்போது பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். கழிவுநீர்க் கால்வாய்களை சுத்தம் செய்ய தனிநபரை அனுமதிப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையர் கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளார்.