Skip to main content

கோகுல்ராஜ் கொலை வழக்கு: சாட்சி விசாரணை டிச. 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
yu


கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டுள்ளார்.


சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் (23) கடந்த 23.6.2015ம் தேதி மாயமானார். அதற்கு அடுத்த நாள் (24.6.2015) மாலை, நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். 


சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிர்வாகி யுவராஜ் உள்ளிட்ட கும்பல்தான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜை ஆணவக்கொலை செய்திருப்பதாக தகவல்கள் பரவின. இந்த வழக்கு தொடர்பாக யுவராஜ், அவருடைய தம்பி தங்கதுரை, அருண், சங்கர், சந்திரசேகர் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்தனர். 

 

o


இந்த வழக்கில் தற்போது சாட்சிகள் விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஜோதிமணி, அமுதரசு ஆகிய இருவர் தவிர யுவராஜ் உள்பட 15 பேரும் இந்த வழக்கின் சாட்சி விசாரணையின்போது ஆஜராகி வருகின்றனர். 


கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் சேலம் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகியும், வழக்கறிஞருமான பார்த்திபன், அரசுத்தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டு உள்ளார். அவர் கடந்த நவம்பர் 22ம் தேதியன்று நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். பின்னர் நேரம் இல்லாததால் யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணையை பிறிதொரு நாளில் வைத்துக்கொள்வதாக தெரிவித்தனர். 

 

ar


அதையடுத்து மீண்டும் சாட்சி விசாரணை திங்கள்கிழமை (டிசம்பர் 3, 2018) தொடங்கியது. கோவை மத்திய சிறையில் இருந்து கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான அருணை எஸ்கார்ட் அழைத்து வர தாமதம் ஆனதால், சாட்சி விசாரணை பகல் 12.40 மணிக்குதான் தொடங்கியது. அருண், நாமக்கல் நீதிமன்றத்துக்கு பகல் 12.25 மணிக்கு அழைத்து வரப்பட்டார்.


யுவராஜ் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஜி.கே. என்கிற கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ, பார்த்திபனிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். 

பார்த்திபன்

p


பார்த்திபனின் சொந்த ஊர், எந்தக் கல்லூரியில் சட்டம் பயின்றார், கோகுல்ராஜை எப்படி தெரியும் என்பது உள்ளிட்ட அடிப்படை தகவல்களில் இருந்து குவிமுச பிரிவு 161 வாக்குமூலத்தில் அவர் தெரிவித்த விவரங்களின் அடிப்படையில் வழக்கறிஞர் ஜி.கே. குறுக்கு விசாரணை நடத்தினார். 


மாலை 3.30 மணிக்கு குறுக்கு விசாரணை முடிந்தது. வேறு எந்த சாட்சிகளும் ஆஜர்படுத்தப்படவில்லை. இதையடுத்து அடுத்தக்கட்ட சாட்சிகள் விசாரணை வரும் 12.12.2018ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார். 


கோகுல்ராஜ் கொலை வழக்கில் முதலாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள யுவராஜ் மீது நீதிமன்றத்தை அவமதித்த வழக்கும் ஜேஎம்-1வது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு ஆம்ஸ்ட்ராங் பாராட்டு

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

Armstrong praises senior advocate  mohan

 

கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட யுவராஜுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்த தீர்ப்புக்கு உறுதுணையாக இருந்த மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகனை பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் சந்தித்து மரியாதை செலுத்தி நன்றி தெரவித்தார். 

 

“பல்வேறு மிரட்டலும் உயிருக்கு அச்சுறுத்தலும் இருந்தபோதும், தன் உயிர் ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட உரிமை இழந்து வாடும் மக்களின் உரிமைக்காக போனால் போகட்டும் என தன்னுயிரை துச்சமாக நினைத்து எட்டு வருடப் போராட்டங்களுக்கு பிறகு ஒரே சாட்சி பிறழ் சாட்சியாக மாறிவிட்ட பிறகும், விடாமுயற்சியால் உண்மை வெல்லும் என அடுத்தடுத்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாதாடி ஆயுள் தண்டனையை பெற்றுத் தந்துள்ள உங்களுக்கு எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்” என்று இந்தச் சந்திப்பின் போது ஆம்ஸ்ராங் தெரிவித்தார்.  

 

 

Next Story

சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் - தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் 

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

 Separate law to prevent caste incident

 

கோகுல்ராஜ் சாதி ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வரவேற்கிறது.

 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டம் ஓமலூர் பொறியியல் கல்லூரி பட்டியலின மாணவர் கோகுல்ராஜ் இடைநிலை சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததற்காக, கொடூரமான முறையில் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். கடந்த 2015 ஜூன் 23 ஆம் தேதி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு  காதலர்கள் சென்ற போது, ஒரு கும்பல் கோகுல்ராஜை கடத்தியது. பிறகு நாமக்கல் மாவட்டம் கிழக்கு தொட்டிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிபிசிஐடி காவலர்கள் விசாரணை செய்த வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியது.

 

அந்த தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பில் கொலைக்கு சாதி தான் முக்கிய காரணம் என்பது நிரூபணம் ஆகி உள்ளது என்றும், சாதி என்ற பேயின் தாக்கத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான வழக்கிலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றம் முன்னிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

 

இந்தியா முழுவதும், குறிப்பாகத் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராக கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் கேட்டுக் கொள்கிறது. இந்த வழக்கில் பல்வேறு நிலைகளில் விசாரணை மேற்கொள்ள காரணமாக இருந்த மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்களுக்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.