Skip to main content

விஷ ஊசி போட்டு செவிலியர் தற்கொலை!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

salem district nurse incident police investigation

 

சேலத்தில் விஷ ஊசி போட்டு தனியார் மருத்துவமனை செவிலியர் தற்கொலை செய்துகொண்டார்.

 

தர்மபுரி மாவட்டம் தனிகாரகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகள் பவித்ரா (வயது 21). இவர், சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். மருத்துவமனை அருகில் உள்ள மருத்துவமனை ஊழியர்கள் விடுதியில் தங்கிப்  பணியாற்றி வந்தார்.

 

நேற்று முன்தினம் (ஏப். 22) காலையில் பணி முடிந்து தனது விடுதிக்குச் சென்றார். மாலையில் நீண்ட நேரமாகியும் அவர் அறையை விட்டு வெளியே வராததால், விடுதியில் தங்கியிருந்த சக ஊழியர்கள் அவருடைய அறை கதவை தட்டிப் பார்த்தனர். அதற்கும் பதில் இல்லாததால், அறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தபோது, அவர் அறைக்குள் பேச்சு மூச்சின்றிக் கிடப்பது தெரிந்தது.

 

இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பவித்ரா சடலமாகக் கிடந்ததும், விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

 

சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர், உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், செவிலியர் வேலைக்குச் செல்ல பிடிக்கவில்லை என்றும், வேலையை விட்டுவிடுவதாகவும் பெற்றோரிடம் பவித்ரா பலமுறை கூறியுள்ளார். அதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்பது தெரிய வந்துள்ளது.

 

தற்கொலையின் பின்னணியில் வேறு காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்