கஞ்சா வியாபாரி கொல்லப்பட்டது ஏன்? பரபரப்பு தகவல்கள்!

salem attur

சேலம் மாவட்டம் ஆத்தூர் புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (34). கஞ்சா வியாபாரி. கட்டப்பஞ்சாயத்து குற்றங்களிலும் ஈடுபட்டு வந்தார்.

கடந்த வியாழனன்று (ஜூன் 11) இரவு, புதுப்பேட்டை வசிஷ்ட நதிக்கரையோரம் உள்ள அம்மன் கோயில் பகுதியில், செந்தில்குமார் கொடுவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, செந்தில்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இந்தக் கொலை தொடர்பாக புதுப்பேட்டையைச் சேர்ந்த முத்துராஜா மகன் தமிழரசன் (32) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

தமிழரசன் குடும்பத்தினர் அப்பகுதியில் பழைய இரும்பு பொருள்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகின்றனர். தொழில் தொடர்பாக, கொலையுண்ட செந்தில்குமாரின் தந்தை செந்தாமரையிடம், தமிழரசினின் தந்தை முத்துராஜா கடன் வாங்கியிருந்தார். கடன் அசல், வட்டி ஆகியவற்றை முறையாக திருப்பிச் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவர்களுககுள் தகராறு இருந்து வந்துள்ளது.

இதற்கிடையே, கஞ்சா வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றிருந்த செந்தில்குமார் பிணையில் விடுதலையாகி வெளியே வந்தார். அவர், தமிழரசனிடம் கடன் தொகையை திருப்பிக் கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.

பலர் முன்னிலையில் கடனைக் கேட்டு அசிங்கப்படுத்துவதால் அவமானம் அடைந்த தமிழகரசன் அவரைத் தீர்த்துக்கட்ட எண்ணினார். இந்நிலையில்தான் ஜூன் 11ம் தேதி, தமிழரசன் கொடுவாளால் செந்தில்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றார். பலத்த காயம் அடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, தமிழரசனை காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. இதற்கிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிந்து சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொலையுண்ட செந்தில்குமாரும், தமிழரசனும் கூட்டாளிகளாக இருந்து உள்ளனர். மேலும், செந்தில்குமார் மீது திருட்டு, வழிப்பறி வழக்குகள் இருப்பதும், அவர் சிலமுறை கைது செய்யப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. அவர் திருடிக் கொண்டு வரும் பொருள்களை எல்லாம் தமிழரசன்தான் கொள்முதல் செய்து, அவருக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளார்.

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால், கஞ்சா வியாபாரி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

attur incident Police investigation Salem
இதையும் படியுங்கள்
Subscribe