Skip to main content

குடிபோதையில் டார்ச்சர்... ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி; சடலத்தை தண்ணீர் டிரம்மில் மறைத்து வைப்பு!

Published on 26/12/2021 | Edited on 26/12/2021

 

salem district husband and wife police investigation

சேலத்தில், குடிபோதையில் தினமும் தொல்லை கொடுத்த கணவனை, ஆண் நண்பருடன் சேர்ந்து கொண்டு மனைவியே மரக்கட்டையால் அடித்துக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சடலத்தை தண்ணீர் டிரம்மிற்குள் ஒளித்து வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.

 

சேலம் கிச்சிப்பாளையம் எஸ்எம்சி காலனியைச் சேர்ந்தவர் சேதுபதி (வயது 33). மாட்டிறைச்சி வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா (வயது 30). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், பத்து மாதத்திற்கு முன்பு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தையையும் பிரியா பெற்றெடுத்துள்ளார். 

 

சேதுபதிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. தினமும் மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடப்பதும், அவர்களை அக்கம்பக்கத்தினர் சமாதானம் செய்து வைப்பதும் தொடர்கதையாக இருந்து வந்துள்ளது. 

 

இந்த நிலையில்தான், டிச. 24- ஆம் தேதி நள்ளிரவுக்கு மேல் பிரியாவும், மற்றொரு வாலிபரும் தண்ணீர் டிரம் ஒன்றை வீட்டுக்குள் இருந்து வெளியே தூக்கிக் கொண்டு வந்தனர். அந்த டிரம்மில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. துர்நாற்றத்தை தாங்க முடியாமல், அக்கம்பக்கத்தினர் வெளியே வந்து விசாரித்தனர். 

 

அப்போது பிரியாவும் அவருடன் இருந்த வாலிபரும், மாட்டுக்கறியை வெட்டி டிரம்மில் போட்டிருப்பதாகவும், பன்றி இறைச்சி வெட்டி வைத்திருந்தோம் என மாற்றி மாற்றி முன்னுக்குப்பின் முரணாக பேசினர். 

salem district husband and wife police investigation

அவர்களின் பதிலில் திருப்தி அடையாத அப்பகுதியினர், இதுபற்றி கிச்சிப்பாளையம் காவல்நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். அந்த டிரம்மை திறந்து பார்த்தபோது, அதற்குள் பிரியாவின் கணவர் சேதுபதி சடலம் அழுகிய நிலையில் கிடப்பது தெரிய வந்தது. 

 

காவல்துறையினர், சடலத்தை டிரம்மில் இருந்தவாறே உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

சந்தேகத்தின்பேரில் பிரியாவையும், அவருடன் இருந்த வாலிபரையும்  காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. பிரியாவின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் சதீஷ்குமார் (வயது 40). கட்டடத் தொழிலாளியான இவருக்கு பெற்றோர்கள் இல்லை. திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வசிக்கிறார். 

 

பிரியாவின் குழந்தைகளைப் பார்ப்பதற்காக சதீஷ்குமார் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அவருக்குத் தேவையான உதவிகளையும் அவ்வப்போது செய்து வந்துள்ளார். அதில் அவர்களுக்கு இடையே நெருக்கமான நட்பு உருவானது. சேதுபதி ஊரில் இல்லாத நேரங்களில் சதீஷ்குமாரும், பிரியாவும் பலமுறை தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில், சதீஷ்குமார், பிரியாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. 

 

தன் மனைவி பக்கத்து வீட்டுக்காரருடன் நெருக்கமாக இருந்து வருவதை அறிந்த சேதுபதி, மனைவியை அடித்து உதைத்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, டிச. 16ம் தேதி, பிரியாவின் தந்தை உடல்நலக்குறைவால் இறந்தார். அவருடைய இறுதிச்சடங்கு நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு மறுநாள் இருவரும் வீடு திரும்பினர். 

 

அப்போது சேதுபதி குடிபோதையில் இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சதீஷ்குமார், அவர்களுடைய வீட்டுக்கு நேரில் சென்று சமாதானம் செய்துள்ளார். 

 

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த சேதுபதி, அவரிடமும் தகராறுக்குச் சென்றார். சேதுபதி உயிருடன் இருக்கும் வரை வாழ்வில் நிம்மதி கிடைக்காது எனக்கருதிய பிரியா, கணவரை தீர்த்துக்கட்டி விடலாம் என சதீஷ்குமாரிடம் கூறியுள்ளார். வீட்டில் இருந்த மரக்கட்டையாலும், கல்லாலும் அவர்கள் இருவரும் சேர்ந்து சேதுபதியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த சேதுபதி, நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். 

 

சேதுபதி கொல்லப்பட்ட விவகாரம் வெளியே தெரியாமல் இருக்க அவருடைய சடலத்தை, வீட்டில் காலியாக இருந்த தண்ணீர் டிரம்மிற்குள் போட்டு மறைத்து வைத்துள்ளனர். அந்த டிரம்மில் பழைய தலையணை, போர்வை, கிழிந்த துணிமணிகளையும் போட்டு ஒரு வார காலமாக சடலத்தை வீட்டிற்குள்ளேயே மறைத்து வைத்திருந்துள்ளனர். 

 

ஒரு வாரமாக வீட்டுக்குள்ளேயே சடலம் கிடந்ததால், கடும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இந்த நிலையில்தான் சேதுபதியின் சடலத்தை வெளியே எங்காவது ஒதுக்குப்புறமான இடத்திற்கு எடுத்துச் சென்று புதைத்து விடலாம் என பிரியாவும், சதீஷ்குமாரும் திட்டமிட்டனர். அதன்படி, சடலத்தை நள்ளிரவுக்கு மேல் வீட்டில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். 

 

ஆனால் சடலத்தில் இருந்து வீசிய துர்நாற்றமே அக்கம்பக்கத்தினருக்கு பிரியா மீது சந்தேகத்தை வரவழைத்து விட்டது. இதையடுத்து, பிரியா, அவருடைய ஆண் நண்பர் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் கிச்சிப்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்