Skip to main content

சேலத்தில் சாலையில் தேங்கிய மழைநீரில் பரிசல் ஓட்டிய மக்கள்; நூதன முறையில் எதிர்ப்பு!

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

சேலத்தில் சாலையில் தேங்கிய மழைநீரில் பரிசல் ஓட்டி, நூதன முறையில் மாநகராட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  


வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் சேலத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் (21/10/2019) இரவு 7.45 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை நேரம் செல்லச் செல்ல கனமழையாக உருவெடுத்தது. இரவு 10.00 மணியளவில் ஓய்ந்த மழை, நள்ளிரவுக்கு மேல் மீண்டும் பெய்யத் தொடங்கியது.


சேலம் மாவட்டம் முழுவதுமே நல்ல மழை பெய்திருந்தது. சோளம்பள்ளம், சீலநாயக்கன்பட்டி, புதூர், தளவாய்ப்பட்டி, சித்தனூர், மாநகர பகுதியில் 4 சாலை, 5 சாலை, சூரமங்கலம், ராஜாராம் நகர், ஜான்சன்பேட்டை, சீலநாயக்கன்பட்டி, அம்மாபேட்டை, நாராயணநகர், கிச்சிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. மேலும், தேசிய நெடுஞ்சாலைகளிலேயே தண்ணீர் குளம்போல் தேங்கின.

SALEM DISTRICT HEAVY RAIN FLOOD MUNICIPALITY CORPORATION NOT CARE


இந்நிலையில், சேலம் & நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே சர்வீஸ் சாலையின் இருபுறமும் மழைநீர் குளமாகத் தேங்கி நின்றது. போதிய வடிகால் வசதிகள் இல்லாததால் நீர் முழுமையாக வடிவதற்கு பல மணி நேரம் ஆனது.  இதனால் அந்த சாலையில் இயல்பாக செல்ல முடியாமல் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.


இதனால் விரக்தி அடைந்த அப்பகுதி பொதுமக்கள், சேலம் மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, சீலநாயக்கன்பட்டி ஊற்றுமலை பகுதியில் சர்வீஸ் சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் பரிசல் இயக்கி நூதன முறையில் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சாக்கடை கால்வாய்களை தூர்வாரி, தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிசலில் பயணித்தபடியே முழக்கமிட்டனர். சாலையில் தேங்கி நிற்கும் மழைநீருடன், கழிவு நீரும் கலப்பதால் கொசுக்கள் உற்பத்தி ஆவதாகவும், அதனால் டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.


இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் நிகழ்விடம் விரைந்து சென்று, பரிசல் ஓட்டி வந்த நபர்களிடம் சமாதானம் செய்தனர். மேலும், கால்வாய் தூர் வாருதல் உள்ளிட்ட பணிகளையும் மாநகராட்சி அதிகாரிகள் முடுக்கி விட்டனர். சீலநாயக்கன்பட்டி பகுதி வாழ் மக்களின் நூதன எதிர்ப்பால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 



 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.