Skip to main content

சேலம் அருகே 140 ரூபாய்க்காக மூதாட்டி கழுத்து அறுத்து கொலை; இளைஞர் கைது!

Published on 29/02/2020 | Edited on 29/02/2020

சேலம் அருகே, கஞ்சா மற்றும் சூதாட்டத்திற்கு அடிமையான இளைஞர், வெறும் 140 ரூபாய்க்காக மூதாட்டியை கழுத்து அறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் அருகே உள்ள திருமலைகிரியைச் சேர்ந்தவர் முத்து (57). இவருடைய தாயார் பழனியம்மாள் (75). இவர், தனது கணவர் பெரியண்ணன் இறந்து விட்டதை அடுத்து, முத்துவின் பராமரிப்பில்தான் வாழ்ந்து வந்தார்.  


இந்நிலையில், பிப்.27ம் தேதி, வீட்டுக்கு அருகில் உள்ள ரேஷன் கடை முன்பு பழனியம்மாள் உட்கார்ந்து இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 20 வயது இளைஞர் ஒருவர், திடீரென்று பழனியம்மாள் அருகே அமர்ந்து அவரிடம் மெதுவாக பேச்சுக்கொடுத்தார். பின்னர் அந்த இளைஞர், மூதாட்டி அணிந்திருந்த தோடு, மூக்குத்தியைக் கழற்ற முயன்றார். சந்தேகம் அடைந்த அவர், கூச்சல் போட்டார்.

salem district grandmother incident police investigation

அவருடைய கூச்சல் சத்தத்தில் ஊர் மக்கள் கூடிவிட்டால் என்ன செய்வது என்று பதற்றம் அடைந்த அந்த மர்ம நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மூதாட்டியின் கழுத்தில் குத்தியதுடன், கழுத்தையும் அறுத்துள்ளார். 


அதற்குள் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வரவே, அந்த மர்ம நபர், மூதாட்டி வைத்திருந்த சுருக்குப்பையை எடுத்துக்கொண்டு, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றார். கழுத்தை அறுத்ததால் அதிக ரத்தம் வெளியேறியதில், மூதாட்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 


இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த இரும்பாலை காவல்துறையினர் விரைந்து வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். உடற்கூறு ஆய்வுக்காக சடலத்தை, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


சம்பவ இடம் அருகில் தனியார் கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்ததில், மூதாட்டியை கழுத்து அறுத்துக் கொன்றவர் வேடுகாத்தாம்பட்டி பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பாலாஜி (20) என்பது தெரிய வந்தது. திருமலைகிரி பகுதியில் பதுங்கியிருந்த பாலாஜியை காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (பிப். 28) கைது செய்தனர். 


காவல்துறையில் கொலையாளி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:


"நான் வெள்ளிப்பட்டறைக்கு வேலைக்கு சென்று கொண்டிருந்தேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய அம்மா இறந்து விட்டார். அதன்பிறகு நான் சரியாக வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்தேன். 


நண்பர்கள் சிலர் மூலமாக எனக்கு கஞ்சா அடிக்கும் பழக்கமும் சூதாடும் பழக்கமும் ஏற்பட்டது. இது இரண்டும் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டேன். சில நாள்களுக்கு முன்புகூட எங்க சித்தி வீட்டில் 5 ஆயிரம் ரூபாயைத் திருடி, சீட்டு ஆடினேன். அந்த ஆட்டத்தில், எல்லா பணத்தையும் தொலைத்துவிட்டேன். 


மூதாட்டி பழனியம்மாள் தோடு, மூக்குத்தி, கால் காப்புகளை போட்டுக்கொண்டு தனியாக ரோட்டோரமாக ரொம்ப நேரமாக உட்கார்ந்து இருந்ததை நோட்டமிட்டேன். அதனால் அவரிடம் பேச்சுக்கொடுப்பதுபோல் நெருங்கி, தோடு, மூக்குத்தியை பறிக்க முயன்றேன். அதற்கு அவர் கத்தி கூச்சல் போட்டதால் கழுத்து அறுத்துக் கொன்றுவிட்டு, அவருடைய சுருக்குப்பையை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டேன். ஆனால் அந்த சுருக்குப்பையில் வெறும் 140 ரூபாய்தான் இருந்தது." இவ்வாறு கொலையாளி பாலாஜி வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.


வெறும் 140 ரூபாய்க்காக மூதாட்டி கொல்லப்பட்ட சம்பவம் வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.