சேலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலத்திலேயே வசிப்பவர்களைக் காட்டிலும் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு வருபவர்களுக்கு அதிகளவில் கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. சேலத்தைச் சேர்ந்தவர்கள், வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் என இதுவரை 1197 பேருக்கு கரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டு உள்ளது.
இத்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில், ஜூலை 4- ஆம் தேதி வரை 337 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தற்போது 855 கரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சேலம் அழகாபுரம் சின்ன புதூரைச் சேர்ந்த 52 வயதான ஒருவர், கரோனாவால் பாதிக்கப்பட்டு, மூன்று நாள்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மதுவுக்கு அடிமையான அவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தது. அவர் சிகிச்சை பலனின்றி, ஜூலை 2- ஆம் தேதி நள்ளிரவு உயிரிழந்தார்.
அதேபோல ஜூலை 3- ஆம் தேதி அதிகாலை 57 வயது மூதாட்டி ஒருவரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஏற்கனவே சிறுநீரக பாதிப்பால் டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்தார். ஆத்தூரைச் சேர்ந்த அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். அந்த மூதாட்டியின் கணவரும் கரோனா தொற்றுக்கு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள், சுகாதாரத்துறை வழிகாட்டு விதிகளின்படி அடக்கம் செய்யப்படுகிறது.அதன்படி, தற்போதுள்ள இறந்துள்ள இருவரின் சடலங்களும் சீலநாயக்கன்பட்டியில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த ஜூன் 13- ஆம் தேதி, பொன்னம்மாபேட்டை 9- வது கோட்டத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவரின் 45 வயதான மனைவி கரோனாவால் முதலில் பலியானார். அச்சம்பவத்தை அடுத்து, கடந்த 20 நாள்களில் மட்டும் சேலத்தில் கரோனா தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அடுத்தடுத்து இருவர் இறந்ததால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.