Skip to main content

சேலம்: கந்துவட்டிக்காரர்கள் தொல்லை தாங்க முடியல... தம்பதி தீக்குளிக்க முயற்சி!

Published on 11/02/2020 | Edited on 11/02/2020

சேலத்தில், கந்துவட்டிக்காரர் கடன் கேட்டு தொல்லை கொடுத்ததால், விரக்தி அடைந்த தம்பதியினர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் கிச்சிப்பாளையம் ஓந்தாப்பிள்ளைகாடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (52). சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சரஸ்வதி (45). இவர்களுக்கு இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர். 

salem district collector office couple incident police


கார்த்திகேயன் தனது நிறுவனம் மூலம் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இதற்காக பலரிடம் கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். இந்நிலையில், தொழிலில் நட்டம் ஏற்பட்டதால், கடனை சரியாக திருப்பிச் செலுத்த முடியாமல் தவித்து வந்தார். வட்டி செலுத்த தாமதம் ஆனதால், வட்டிக்கு மேல் ஒரு வட்டி விதித்து, அதையும் கறாராக கேட்டு வசூலிக்கத் தொடங்கினர். இதனால் கடன் கொடுத்த ஒருவருக்கும் அசல் தொகையை இதுநாள் வரை கார்த்திகேயனால் செலுத்த முடியவில்லை. இதனால் கடன்தாரர்களிடம் அவகாசம் கேட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால், கந்துவட்டிக்காரர்கள் தினமும் அவருடைய வீட்டுக்கு பணத்தைக் கேட்டு படையெடுக்க ஆரம்பித்தனர். பலர் அவரையும், குடும்பத்தினரையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.


இந்நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (பிப்.10) வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது. அதையடுத்து, கந்துவட்டிக்காரர்களின் தொல்லை குறித்து சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிப்பதற்காக கார்த்திகேயன் தனது மனைவியுடன் ஆட்சியர் அலுவலகம் வந்தார். 


கந்துவட்டிக்காரர்கள் தினமும் அளித்து வந்த தொல்லையால் கடும் மன உளைச்சலில் இருந்த அவர்கள், திடீரென்று தாங்கள் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறையினர் பாய்ந்து சென்று அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி எறிந்தனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களின் உடல் மீது குடம் குடமாக தண்ணீர் கொட்டினர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்த இச்சம்பவத்தைப் பார்த்த புகார் கொடுக்க வந்த பொது மக்கள் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சேலம் நகர காவல்நிலைய காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.