Skip to main content

போதை ஊசி போட்டுக்கொண்ட சிறுவன் பலி; இரண்டு மருந்துக் கடைகள் மீது வழக்கு!

Published on 20/05/2020 | Edited on 20/05/2020

 

salem district child incident medical shops police


சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மகன் அஜித்குமார் (17). கடந்த 15- ஆம் தேதி தனது நண்பர்கள் மூன்று பேருடன் அப்பகுதியில் உள்ள கரட்டுக்குச் சென்றிருந்தான். சிறிது நேரத்தில் வீட்டிற்கு போதையேறிய நிலையில் தள்ளாடியபடி வந்துள்ளான். தனக்கு மயக்கம் வருவதுபோல் இருப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளான் அஜித்குமார். இதையடுத்து பெற்றோர் 108 ஆம்புலன்சுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனம் வீட்டுக்கு வந்து சேர்ந்த நிலையில், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
 


இதுகுறித்து அன்னதானப்பட்டி காவல்நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், சிறுவன் அஜித்குமார், தனது நண்பர்களுடன் போதைக்காக வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டப் பயன்படுத்தப்படும் சொலூசன், பெயிண்டில் கலப்பதற்காக பயன்படுத்தக் கூடிய தின்னர் திரவம், தூக்க மாத்திரை ஆகியவற்றை நீரில் கலக்கிக் குடித்துள்ளதோடு, போதை ஊசியும் உடம்பில் செலுத்தி இருப்பது தெரிய வந்தது.

சம்பவத்தன்று அஜித்குமாருடன் சுற்றித்திரிந்த மூன்று நண்பர்களையும் காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அவர்களுக்கு போதை மாத்திரை, சிரிஞ்சுகள், போதை மருந்து ஆகியவை வழங்கியது யார்? எப்படிப் பெற்றார்கள்? என்ன வகையான போதை மருந்து பயன்படுத்தப்பட்டது? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். சிறுவர்கள் கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி கேட் பகுதிகளில் உள்ள இரண்டு மருந்து கடைகளில் தூக்க மாத்திரை, போதை மருந்துகளை வாங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. மருந்துக் கடை ஊழியர்கள் சிறுவர்களிடம், இருதய நோயாளிகள் வலி தெரியாமல் இருப்பதற்காக விழுங்கக்கூடிய, 160 ரூபாய் மதிப்புடைய மாத்திரைகளை 1,600 ரூபாய்க்கு விற்றுள்ளது தெரிய வந்துள்ளது. 
 

 


இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர் குருபாரதி மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் ரேகா, மாரிமுத்து ஆகியோர் திங்களன்று (மே 18) சம்பந்தப்பட்ட மருந்துக் கடைகளில் நேரில் விசாரணை நடத்தினர். அவர்கள் சிறுவர்களிடம் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமலேயே போதை மாத்திரை, ஊசி மற்றும் மருந்துகளை விற்றிருப்பது உறுதியானது. மேலும் அவ்விரு கடைகளில் இருந்தும் விற்கப்படாமல் உள்ள சில மருந்து, மாத்திரைகளை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர். அந்த இரு மருந்துக் கடைகள் மீது மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து, அன்னதானப்பட்டி காவல்துறையினர், மருந்துக் கடைகளின் உரிமையாளர்களைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். இறந்த சிறுவனின் உடற்கூறாய்வு அறிக்கை வந்ததும், மருந்துக் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறது காவல்துறை.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.