சேலம் அருகே, கார் பட்டறை உரிமையாளரை மர்ம நபர்கள் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து, சடலத்தை ஏரியில் வீசிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

சேலம் அருகே உள்ள மூக்குத்திப்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யனார். இவருடைய மகன் மகேஷ் (30). இவர், சேலம் சீலநாயக்கன்பட்டியில் சொந்தமாக கார் பட்டறை வைத்து நடத்தி வந்தார். பிப். 28ம் தேதி காலை வழக்கம்போல, பட்டறைக்குச் செல்வதாக கூறிவிட்டு, வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றார். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

Advertisment

salem district car service owner incident police investigation

இந்நிலையில், மூக்குத்திப்பாளையம் ஏரியில் மகேஷின் சடலம் மிதப்பதாக அவருடைய பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், இதுகுறித்து மல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

காவல் ஆய்வாளர் அம்சவள்ளி மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து வந்தனர். சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். சடலத்தின் உடலில் கத்திக்குத்து காயங்கள் இருந்தன. இதையடுத்து சடலத்தை, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், அப்பகுதியில் ஏற்கனவே நடந்த ஒரு கொலைக்கு பழிதீர்க்கும் விதமாக மகேஷின் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து மல்லூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment