Skip to main content

சேகோ ஆலையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த தொழிலாளி விஷ வாயு தாக்கி உயிரிழப்பு!

Published on 29/11/2019 | Edited on 29/11/2019

ஆத்தூர் அருகே, சேகோ ஆலையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷ வாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கூலித்தொழிலாளி உயிரிழந்தார். மேலும், நான்கு பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லி அருகே உள்ள பள்ளக்காட்டைச் சேர்ந்தவர் மாணிக்கம் (65). அதே பகுதியில், கடந்த 15 ஆண்டுகளாக சேகோ ஆலை நடத்தி வருகிறார். ஜவ்வரிசி, ஸ்டார்ச் ஆகியவை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். 


இந்த ஆலையில் மரவள்ளிக் கிழங்குகளை அரைத்த பின்னர் வெளியேற்றப்படும் கழிவு நீரை தேக்கி வைக்க, 60 அடி நீளம், அகலம் மற்றும் 20 அடி ஆழத்தில் இரண்டு தொட்டிகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த இரு தொட்டிகளுக்கும் நடுவில் 8 அடி நீளம், மூன்றடி அகலம் 20 அடி ஆழத்தில் ஒரு கழிவு நீர் தொட்டியும் கட்டப்பட்டு உள்ளது. இந்த தொட்டிகளின் மீது மூடி போட்டு மூடி வைத்துள்ளனர்.

salem district attur sago factory septic tank cleaning incident


இந்த சேகோ ஆலையில் அம்மம்பாளையம் கண்ணகி நகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் மணி என்கிற ஜெயச்சந்திரன் (35) கூலி வேலை செய்து வந்தார். இதே ஆலையில், பள்ளக்காட்டைச் சேர்ந்த வேலாயுதம் (45), காங்கமுத்து (40), கலியன் (48) ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.


இந்நிலையில், வெள்ளிக்கிழமை (நவ. 29) மாலை 5.30 மணியளவில், இரண்டு பெரிய தொட்டிகளுக்கு நடுவில் உள்ள தொட்டியில் இருந்து கழிவு நீரை வெளியேற்றுவதற்காக வேலாயுதம் என்பவர், தொட்டியின் மீது மூடப்பட்டிருந்த மூடியை அகற்றினார். அப்போது எதிர்பாராத விதமாக கழிவுநீர்த் தொட்டியில் இருந்து வெளியேறிய விஷ வாயு தாக்கியதில் வேலாயுதத்திற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, தொட்டிக்குள்ளேயே மயங்கி விழுந்தார்.


இதைப்பார்த்து பதற்றம் அடைந்த சேகோ ஆலை உரிமையாளர் மாணிக்கம், உடனடியாக அதே தொட்டிக்குள் குதித்து வேலாயுதத்தைக் காப்பாற்ற முயன்றார். ஆலை அதிபர் தொட்டிக்குள் குதிப்பதை பார்த்த மணி என்கிற ஜெயச்சந்திரனும் அவரை காப்பாற்றுவதற்காக தொட்டிக்குள் குதித்தார். காங்கமுத்து, கலியன் ஆகியோரும் அவர்களை மீட்பதற்காக தொட்டிக்குள் அடுத்தடுத்து குதித்துள்ளனர்.


இதில், மணி என்கிற ஜெயச்சந்திரனும் விஷ வாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். மற்றவர்கள் அவரை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர், வரும் வழியிலேயே உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. 


ஆலை அதிபர் மாணிக்கம் உள்ளிட்ட நால்வரும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு ஆத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி காவல்நிலைய உதவி ஆய்வாளர் முருகேசன் மற்றும் காவலர்கள் நிகழ்விடம் விரைந்து சென்று விசாரித்தனர். சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த மணிக்கு, சங்கீதா என்ற மனைவியும், இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த சம்பவம் கெங்கவல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காதலன் முகத்தில் ஆசிட் அடித்த காதலி!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Girlfriend threw toilet cleaning liquid on her boyfriend face

உத்தரப் பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் சிகிடாவுனி கிராமத்தை சேர்ந்தவர்  ராகேஷ் பிந்த்(26). இவரும் அதைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராகேஷ் பிந்துக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அப்போது  கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தோடு(ஆசிட்)  நிச்சயதார்த்தம் நடக்கும் இடத்திற்கு வந்த லட்சுமி தனது கையில் வைத்திருந்த திரவத்தை ராகேஷ் பிந்து முகத்தில் வீசினார். இதில் அவர் முகம் மற்றும் உடலில் உள்ள சில இடங்களில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனிடையே அங்கிருந்தவர்கள் லட்சுமியைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தன்னைக் காதலித்து விட்டு வேறொரு பெண்ணை நிச்சயதார்த்தம் செய்ததால் திரவத்தை வீசியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து லட்சுமியைக் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.