Skip to main content

சாலையோர காய்கறி வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை! பலநாள் படையெடுப்புக்குப் பின் கடை வைக்க அனுமதி!!

Published on 08/06/2020 | Edited on 09/06/2020

 

salem district ammapet zonal corporation roadside vegetables shops peoples


சேலத்தில், சாலையோர காய்கறி வியாபாரிகள், வணிக வளாகத்திற்குள் கடை வைக்க அனுமதி கேட்டு மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 


சேலம் வ.உ.சி. சந்தை, முதல் அக்ரஹாரம் மற்றும் ஆற்றோரம் பகுதிகளில் 350- க்கும் மேற்பட்ட சாலையோர காய்கறி வியாபாரிகள் கடை நடத்தி வந்தனர். கடந்த மார்ச் 24- ஆம் தேதி மாலை முதல் கரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதையடுத்து, காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள் விற்பனைக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டது. 

நோய்த்தொற்று அபாயம் காரணமாக ஆற்றோரம், வ.உ.சி. சந்தை, அக்ரஹாரம் பகுதிகளில் இயங்கி வந்த காய்கறி கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது. அப்பகுதிகளில் கடை நடத்தி வந்தவர்களில் 100 பேருக்கு மட்டும் சேலம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் காய்கறி கடை வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதனால், கடை நடத்த அனுமதி கிடைக்காத மற்ற 250- க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இதனால், அவர்களின் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டது. 
 

salem district ammapet zonal corporation roadside vegetables shops peoples


இதற்கிடையே, கடந்த மே மாத மத்தியில் ஊரடங்கு விதிகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டன. ஜூன் முதல் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கி வந்த தற்காலிக காய்கறி கடைகள், அருகில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்திற்கு மாற்றப்பட்டது. புதிய இடத்திற்குக் காய்கறி கடைகள் மாற்றப்பட்ட பிறகும், ஏற்கனவே கடை நடத்த அனுமதிக்கப்பட்ட அதே 100 வியாபாரிகளுக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தமுறையும் தங்களுக்கான வாய்ப்பு கைநழுவிப் போனதே என்று மற்ற காய்கறி வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்தனர். 

இந்நிலையில், அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் வணிக வளாகத்தில் கடை நடத்தவும், மாற்று இடங்களை ஒதுக்கக்கோரியும் சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 7) முற்றுகையிட்டனர். பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றியும் மண்டல அலுவலக வளாகத்தில் குழுமி இருந்ததைப் பார்த்தும் அங்கிருந்து மாநகராட்சி ஊழியர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. 

ஒருபக்கம், மாநகராட்சி ஆணையர் சதீஸ், தன் கவனத்திற்கு வரும்பட்சத்தில் சமூக இடைவெளி விதி, முகக்கவசம் அணிதலை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார். மீறுவோருக்கு அந்த இடத்திலேயே அபராதமும் விதிக்கிறார். அதேநேரம், அவருக்குக் கீழ் பணியாற்றும் மற்ற ஊழியர்கள் சமூக இடைவெளியின்றி குழுமி இருக்கும் மக்களைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருந்தனர்.
 


இது தொடர்பாக சாலையோர வியாபாரிகள், சுயதொழில் செய்யும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கே.டி.ராஜூ, கன்னியம்மாள், புவனேஸ்வரி, முருகன் ஆகியோர் நம்மிடம் பேசினர். ''சேலம் ஆனந்தா இறக்கம், ஆற்றோரம் பகுதிகளில் 350க்கும் மேற்பட்ட சாலையோர காய்கறி வியாபாரிகள் கடை நடத்தி வந்தோம். கரோனா ஊரடங்கு அமலான பிறகு எங்களை எல்லாம் ஒரே நாளில் மாநகராட்சி நிர்வாகமும், காவல்துறையினரும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். ஆனால் எல்லோருக்கும் மாற்று இடம் ஒதுக்காமல், வெறும் 100 பேருக்கு மட்டும் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் காய்கறி கடை போட டோக்கன் வழங்கினர். 

காய்கறி மார்க்கெட்டில் சுங்கம் வசூலிக்கும் ஒப்பந்ததாரர் கஜேந்திரன் என்பவர் தனக்கு வேண்டப்பட்ட காய்கறி கடைக்காரர்களிடம் ஒவ்வொருவரிடம் இருந்தும் 1,500 முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை கையூட்டு வசூலித்துக்கொண்டு, அவர்களுக்கு மட்டும் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் கடை நடத்த அனுமதித்துள்ளார். இதைப்பற்றி, அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல அலுவலக அதிகாரிகளிடம் கேட்டால், கஜேந்திரன்தான் சுங்க வசூலிக்கும் ஒப்பந்தம் எடுத்திருக்கிறார். எதுவாக இருந்தாலும் அவரைப் போய் கேளுங்கள் என்று சொல்லி விரட்டுகின்றனர். 

ஊரடங்கு அமலில் உள்ளதால் காய்கறி வியாபாரிகளிடம் சுங்கம் வசூலிக்கக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி கஜேந்திரன், எங்களிடம் கடைக்கு 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை வசூலிக்கிறார். ஒரு கடையில் இரண்டு பேர் இருந்தால், இரண்டு கடையாகக் கருதி சுங்கக்கட்டணம் வசூலிக்கிறார். இதையெல்லாம் மாநகராட்சிக்கு தெரிந்தும்கூட நடவடிக்கை எடுக்கவில்லை.
 

salem district ammapet zonal corporation roadside vegetables shops peoples


ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் வந்த பிறகும்கூட ஏற்கனவே கடை போட அனுமதித்த அதே 100 பேருக்குதான் இப்போதும் தொடர்ந்து கடை நடத்த அனுமதிக்கின்றனர். பழைய பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து வணிக வளாகத்திற்கு காய்கறி கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்கே, அனைத்து சாலையோர காய்கறி வியாபாரிகளுக்கும் கடை நடத்த அனுமதி வழங்க வேண்டும்.

அந்த 100 பேருக்கு மட்டுமின்றி, எங்களுக்கும் வயிறு இருக்கிறது என்பதை அதிகாரிகள் உணர வேண்டும். வாரம் ஒருமுறை அல்லது இரண்டு நாள்களுக்கு ஒருமுறை என்று சுழற்சி முறையிலாவது அனைத்துக் காய்கறி வியாபாரிகளுக்கும் கடை நடத்த அனுமதிக்க வேண்டும். நாங்களும் எங்கள் கோரிக்கை தொடர்பாக அம்மாபேட்டை மண்டல அலுவலகத்திற்கு கடந்த பத்து நாள்களாக நடந்து கொண்டிருக்கிறோம். இன்று வா, நாளை வா என அலைக்கழிக்கிறார்களே தவிர, கடை வைக்க டோக்கன் தர மறுக்கின்றனர். இந்த மண்டலத்தில் வருவாய் ஆய்வாளராக இருக்கும் சுரேஷ் என்பவர் இன்று (ஞாயிறு) டோக்கன் தருவதாகச் சொன்னதன் பேரில்தான் வந்தோம். ஆனால் இப்போதோ அவர், நாளை வாருங்கள் எனச் சொல்கிறார்,'' என்றனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகநாதன் என்ற முதியவர், குடும்பத்தை விட்டு பஞ்சம் பிழைப்பதற்காக சேலம் வந்து, இங்கு வ.உ.சி. சந்தையில் வெங்காயம், உருளைக்கிழங்கு விற்று வருகிறார். ஊரடங்கு பெயரால் தனக்கு காய்கறி கடை வைக்க அனுமதி கிடைக்காததால், மற்ற கடைக்காரர்களிடம் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தார். லாரியில் இருந்து ஒரு கிரேடு தக்காளியை இறக்கினால் பெட்டிக்கு 10 ரூபாய் கூலி கிடைக்கும் என்கிறார் அவர். அதை வைத்துதான் ஊரடங்கு காலத்தில் பசியாறியதாகச் சொல்கிறார்.

காய்கறி கடை வைக்க இன்றாவது அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இரும்பாலையைச் சேர்ந்த மூதாட்டி பெரியக்காள் (75), தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியைச் சேர்ந்த பழனியம்மாள் (65) ஆகியோர் சேலத்திற்கு வந்து பழைய பேருந்து நிலைய வளாகம், ஆற்றோரம் காய்கறி சந்தை சாலையிலேயே இரவில் படுத்துக் கொள்வதாகவும், கடை அனுமதிக்காக பல நாள்களாக மாநகராட்சி மண்டல அலுவலகத்திற்கு நடையாய் நடப்பதாகவும் சொன்னார்கள். 
 

salem district ammapet zonal corporation roadside vegetables shops peoples


''மேச்சேரியைச் சேர்ந்த மாலா என்பவர், காய்கறி கடையை நம்பித்தான் வங்கியில் 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறேன். இந்த வருமானத்தை வைத்துதான் கடனை அடைக்க வேண்டும். அதனால் சேலம் மாநகராட்சி நிர்வாகம் அனைத்து சாலையோர காய்கறி வியாபாரிகளுக்கும் முன்புபோல் கடை வைக்க அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.

காய்கறி கடை வைக்க டோக்கன் வழங்கப்படுவதாக கேள்விப்பட்டு, அம்மாபேட்டை மண்டல அலுவலகத்திற்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே 300- க்கும் மேற்பட்ட சாலையோர காய்கறி வியாபாரிகள் வந்துவிட்டனர். கூட்டத்தை விட்டு வெளியே சென்றால் டோக்கன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில், மூதாட்டிகள் உள்பட பலரும் காலை முதல் இரவு வரை வெறும் தண்ணீரை மட்டுமே குடித்துவிட்டு பட்டினியுடன் அந்த வளாகத்திலேயே காத்துக் கிடந்துள்ளனர். 

இதுபற்றி அம்மாபேட்டை மண்டல வருவாய் ஆய்வாளர் சுரேஷிடம் கேட்டோம். ''மாநகராட்சி வணிக வளாகத்திற்குள் சமூக இடைவெளி வேண்டும் என்பதற்காகத்தான் முதல்கட்டமாக 100 காய்கறி வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதுவரை கடை நடத்த அனுமதி கிடைக்காதவர்களுக்கு ஒரு வாரம் கடை வைத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்படும். அதற்கான டோக்கன்கள் தயாராக இருக்கின்றன. நாளை (திங்கள்) காலையில் பட்டுவாடா செய்து விடுவோம். 
 

salem district ammapet zonal corporation roadside vegetables shops peoples


இதுவரை கடை வைத்திருந்தவர்களுக்கு திங்கள் முதல் அனுமதி கிடையாது. அனைத்துக் காய்கறி வியாபாரிகளுக்கும் சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும். காய்கறி கடைக்காரர்கள் தாங்களாகவே தினமும் இங்கு வந்து செல்கிறார்களே தவிர, அவர்களைத் தினமும் நேரில் வந்து பார்க்கும்படி யாருமே சொல்லவில்லை,'' என்றார் சுரேஷ்.
 

http://onelink.to/nknapp


இதையடுத்து இரவு 06.45 மணியளவில் வருவாய் ஆய்வாளர் சுரேஷ் மண்டல அலுவலகத்தை விட்டு வெளியே செல்லும்போது, அவரை காய்கறி வியாபாரிகள் சூழ்ந்து கொண்டு கடை நடத்துவதற்கான அனுமதி டோக்கன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று கோரினர். நாளை காலையில் வந்து பெற்றுக்கொள்ளும்படி கூறினார். ஆனால் பலரும் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், பின்னர் அனுமதி டோக்கன்களை அவரும், மற்ற ஊழியர்களும் வழங்கினர். 

அடுத்த ஞாயிறு முதல் காய்கறி நடத்த அனுமதி வேண்டுவோரிடம் இருந்து சாலையோர வியாபாரி என்பதற்கான அடையாள அட்டை நகலைப் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து காய்கறி வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
 

மாறான தகவல்!


இந்நிலையில், காய்கறி வியாபாரிகளிடம் 1500 முதல் 5,000 ரூபாய் வரை கையூட்டு பெற்றுக்கொண்டு கடை நடத்த அனுமதி வழங்கியதாக புகார் கூறப்பட்ட சேலம் மாகராட்சி குத்தகைதாரர் கஜேந்திரன் என்பவரை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டோம். 
 


கஜேந்திரன் நம்மிடம், ''காய்கறி வியாபாரிகளிடம் கடை நடத்த அனுமதிப்பதற்காக நான் யாரிடமும் கையூட்டு வாங்கவில்லை. சேலம் மாநகராட்சியில் ஆற்றோரம் காய்கறி சந்தையை சுங்கம் வசூலிப்பதற்காக எனக்கு வழங்கப்பட்டிருந்த குத்தகை உரிமக் காலம் கடந்த 31.3.2020ம் தேதியுடன் முடிந்து விட்டது. அதன்பின், எனக்கும் சேலம் மாநகராட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லாதபோது நான் காய்கறி வியாபாரிகளிடம் கையூட்டு பெற்றதாகச் சொல்வதில் கொஞ்சமும் அடிப்படை உண்மை இல்லை. காய்கறி வியாபாரிகள் என்னைப்பற்றி தவறான தகவல்களை தெரிவித்துள்ளனர். உண்மையில், ஆற்றோரம் காய்கறி சந்தையை குத்தகை எடுத்ததில் எனக்கு பல லட்சம் ரூபாய் நட்டமும், மன உளைச்சலும்தான் ஏற்பட்டுள்ளது,'' என விளக்கம் அளித்துள்ளார்.
 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.