Skip to main content

சேலத்தில் வீடு வீடாகக் குடும்ப உறுப்பினர்கள் விவரம் கணக்கெடுப்பு; 78 பேருக்கு நோய்த்தொற்று உறுதி!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

salem

 

சேலத்தில் கரோனா தொற்றைக் கண்டறியும் பணிகள் வீடு வீடாக முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ள நிலையில், 78 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.


சேலம் மாநகராட்சி எல்லை என்பது 60 கோட்டங்களை உள்ளடக்கியது. மொத்தம் 2.34 லட்சம் குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மாநகர பகுதிகளில் கரோனா தொற்று நோய்ப் பரவுவதை முற்றிலுமாகத் தடுத்திடும் வகையில் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.


அதன்படி, சேலம் மாநகர பகுதிகளில் கரோனா தொற்று நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வீடு வீடாகச் சென்று குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை முழுமையாகக் கணக்கெடுக்கும் பணிகள் களப்பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வீட்டில் இருப்பவர்களின் பெயர், வயது, தொலைபேசி எண், குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட நோய் அறிகுறிகள் உள்ளவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படுகிறது. 


சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் விவரம், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் பணியாற்றி வருவோர் விவரம், குடும்ப உறுப்பினர்களின் நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம், சுவாசக்கோளாறு, புற்றுநோய் உள்ளிட்ட நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகிறது.


கடந்த 2-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று, இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 1.91 லட்சம் குடியிருப்புகளில் 7.63 லட்சம் நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளது.


இப்பணிகளின்போது 2,330 நபர்கள் காய்ச்சல் அல்லது வறட்டு இருமல், சளி, உடல் சோர்வு, மூச்சுத்திணறல் என ஏதேனும் சில உடல் கோளாறுகளால் அவதிப்பட்டு வருவது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு உடனடியாக கரோனா தொற்று நோய் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. 


இப்பரிசோதனையில், 78 நபர்கள் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

 

http://onelink.to/nknapp


சேலம் மாநகர பகுதிகளில் உள்ள அனைத்துக் குடியிருப்புகளிலும் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொண்டு, சேகரிக்கப்படும் விவரங்களைக் கொண்டு பொதுமக்களைத் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தால் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளுக்குள் வரும் மாநகராட்சி களப்பணியாளர்களிடம் மேற்கண்ட விவரங்களை எவ்வித விடுதலுமின்றி சரியான முறையில் தெரிவித்து, கரோனா தொற்று நோய்த் தடுப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.