Skip to main content

வனத்துறை அதிகாரி, மனைவி இருவருக்கும் 4 ஆண்டுகள் சிறை; சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவு!

Published on 02/04/2021 | Edited on 02/04/2021

 

salem court order forest officer asset properties seizures

 

சேலத்தில் லஞ்சம், ஊழல் மூலம் சொத்துகளைக் குவித்த வனத்துறை அதிகாரிக்கும், அவருடைய மனைவிக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முறைகேடாக வாங்கிக் குவித்த சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்யவும் சேலம் தனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

சேலம் மாவட்டம் வாழப்பாடியைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 61). இவருடைய மனைவி தேன்மொழி (வயது 55). வாழப்பாடி சரகத்தில் வனவராகப் பணியாற்றி வந்தார் ராஜாமணி. அவர் தன்னுடைய பணிக்காலத்தில், கடந்த 2001ஆம் ஆண்டு, லஞ்சம், ஊழல் மூலம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

 

இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் அவர் சில இடங்களில் வீட்டு மனைகள் வாங்கியிருப்பதும், அவற்றைத் தன் மனைவி தேன்மொழி மீது கிரையம் செய்திருப்பதும் தெரிய வந்தது. அந்த சொத்துகளின் அப்போதைய மதிப்பு 24 லட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டது. 

 

இந்த வழக்கு விசாரணை, சேலம் தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுகந்தி, நேற்று முன்தினம் (மார்ச் 31) தீர்ப்பளித்தார். 

 

வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளைச் சேர்த்த முன்னாள் வனத்துறை அதிகாரி ராஜாமணி, அவருடைய மனைவி தேன்மொழி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், முறைகேடாக வாங்கி குவித்த சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டார். 

 

இதையடுத்து ராஜாமணியை ஆத்தூர் கிளைச்சிறையிலும், தேன்மொழியை சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும் அடைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.