Skip to main content

சேலம்: இனிமேல் திங்கள் முதல் வெள்ளி வரை மட்டுமே கறிக்கடைகள்! மாநகராட்சி புதிய உத்தரவு!!

Published on 12/04/2020 | Edited on 12/04/2020

சேலம் மாநகர பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு முடியும் வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே கறிக்கடைகள் இயங்கலாம் என மாநகராட்சி ஆணையர் சதீஸ் புதிதாக உத்தரவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு அமலில் உள்ள காலக்கட்டத்தில் தேவையின்றி பொதுமக்கள் வெளியே நடமாடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் சில நிபந்தனைகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஊரடங்கினால் அசைவப் பிரியர்கள் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சி வகைகளை ருசிக்க முடியாமல் தவித்து வந்தனர்.

கடந்த மார்ச் 31ம் தேதி இறைச்சிக்கடைகள் திறக்கப்பட்டதால், அசைவப் பிரியர்கள் கசாப்புக்கடைகள் முன்பு குவிந்தனர். ஆடு, கோழி, மீன், முட்டை என ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர். ஊரடங்கினால் சரக்குப் போக்குவரத்தும் முடங்கியதால் ஆடு, கோழி, மீன் ஆகியவற்றின் வரத்தும் குறைந்து இருந்தது.

salem corporation new announcement shops

இதனால் ஆட்டுக்கறி கிலோவுக்கு 300 ரூபாய் வரை உயர்ந்து ஆயிரம் ரூபாய் வரை விற்பனை ஆனது. பிராய்லர் கோழிக்கறியும் கிலோவுக்கு 100 ரூபாய் வரை உயர்ந்தது. 

மேலும், கசாப்புக்கடைகள் முன்பு வாடிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் குறைந்தபட்சம் 3 அடி தூரம் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று விதிகளையும் மறந்து, முண்டியடித்தனர். முகக்கவசமும் அணியாமல் இருந்தனர்.

தமிழகம் முழுவதும் இறைச்சிக்கடைகள் முன்பு கூடிய கூட்டத்தைக் கண்டு அனைத்து மாவட்ட நிர்வாகமும் செய்வதறியாது திணறிப்போனது. இந்நிலையில்தான், சேலம் மாநகர பகுதிகளில் இறைச்சிக்கடைகள் இயங்க முதன்முதலில் மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. 

மேலும், சனி, ஞாயிறுகளில் மட்டும் செயல்படும் வகையில் சேலம் கருப்பூர் அரபிக்கல்லூரி அருகே இறைச்சிக்கென புதிய சந்தையை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியது. சேலம் மாநகரப் பகுதியில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருந்தாலும்கூட, அசைவப்பிரியர்கள் சிரமம் கருதாமல் கருப்பூருக்குச் சென்று தங்களுக்குப் பிடித்த இறைச்சியை வாங்கி வந்தனர். 

அங்கே சமூக விலகல் கடைப்பிடிக்கவும், முகக்கவசம் மற்றும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு உட்படுத்திய பிறகே இறைச்சி வாங்க அனுமதிக்கப்பட்டனர். என்றாலும், ஒட்டுமொத்த சேலம் மக்களுக்கும் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே இறைச்சி சந்தை என்பதால் அங்கும் கூட்டம் கூடுவதை அதிகாரிகளால் தவிர்க்க முடியவில்லை.

இந்நிலையில், சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஸ், இனி மாநகர பகுதிகளில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அனைத்து வகை கறிக்கடைகளும் செயல்படலாம் என சனிக்கிழமை (ஏப். 11) திடீரென்று அறிவித்துள்ளார். அதேநேரம், மாநகர பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாள்களிலும் ஊரடங்கு அமலில் இருக்கும்வரை இறைச்சிக் கடைகளைத் திறக்கக் கூடாது என்றும் தடை விதித்துள்ளார். இந்த புதிய உத்தரவு கருப்பூர் அரபிக் கல்லூரி அருகே அமைக்கப்பட்ட இறைச்சி சந்தைக்கும் பொருந்தும்.

கிறித்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுகின்றனர். இதையொட்டி, நாற்பது நாள் தவக்காலம் முடிந்து அவர்கள் அசைவத்திற்கு மாறுவார்கள். இந்நிலையில், சனி, ஞாயிறுகளில் இறைச்சிக் கடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளதால் கிறித்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதேநேரம், அசைவ பிரியர்கள் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி உணவு உண்பதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில், அந்த நாளில் கடை திறக்காமல் தடை விதிக்கப்படுவதற்கும் கடும் விமர்சனங்கள் கிளம்பி உள்ளன. 
 

சார்ந்த செய்திகள்

Next Story

3 மாதங்களுக்குக் கோழி இறைச்சிக் கடைகளுக்குத் தடை!

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
Ban on chicken shops for 3 months in andhra

ஆந்திரா மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிதிப்ப கிராமத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக, அங்கு பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான கோழிகள் உயிரிழந்துள்ளன. 

இதனையடுத்து, பறவைக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்கவும் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கவும் நெல்லூர் மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், பறவைக் காய்ச்சல் பரவி கோழிகள் இறந்த ஊரிலிருந்து 1 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் கிராமங்கள் மற்றும் நகரங்களில் மூன்று மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனைக்கு, மாவட்ட ஆட்சியர் தடை விதித்து உத்தரவிட்டார். 

மேலும், அந்தப் பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை கடைகளைத் திறக்கவும் தடை விதித்தும், ஒரு கி.மீ முதல் 10 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கும் பகுதிகளில் வெளியூர்வாசிகள் கோழி இறைச்சியை வாங்கிச் செல்ல 15 நாட்கள் தடை விதித்தும் உத்தரவிட்டார். 

Next Story

ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்; கடை உரிமையாளர்கள் போராட்டம்

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Removal of encroachment shops; Shop owners struggle

ஈரோட்டில் இன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்ட நிலையில் அதிகாரிகளுடன் ஜவுளிக்கடை உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வழியாக சத்தி ரோடு சந்திப்பு எல்லை மாரியம்மன் கோவில் வரையிலான சாலையில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. குறிப்பாக பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு வரை சாலையின் ஒரு பகுதியில் தற்காலிகமாக ஜவுளிக் கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் செய்யப்பட்டு வந்தது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த சாலை வழியாகத்தான் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வாகனங்கள் செல்கின்றன. இதனால் இந்த சாலை முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது. சாலை ஆக்கிரமிப்பால் பாதசாரிகள் நடந்து செல்லக்கூட முடியாத நிலை காணப்பட்டு வந்தது.

மேலும் அப்பகுதியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள மாநகராட்சி ஜவுளி வணிக வளாகம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதால், மேலும் அப்பகுதியில் கடுமையான நெருக்கடி ஏற்படும் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் தொடர்ந்து ஆக்கிரமிப்பு இருந்து வந்தது.

இதையடுத்து இன்று காலை மாநகராட்சி தலைமை பொறியாளர் விஜயகுமார், நகர்நல அலுவலர் பிரகாஷ், உதவி ஆணையாளர் பாஸ்கர், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் சேகர் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு செல்லும் சாலையை முழுமையாக அடைத்தனர். இதைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டுவரப்பட்டு சாலையோரம் இருபுறங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினர். எல்லை மாரியம்மன் கோவில் வரை 1 கிலோமீட்டர் தூரத்திற்கு மேலாக சாலையோரத்தில் இருந்த 300க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன.

கடைகள் அகற்றப்பட்டதை அறிந்த ஜவுளி வியாபாரிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பொக்லைன் எந்திரம் முன்பாக சாலையில் படுத்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையையடுத்து கலைந்து சென்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் 150 பேர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் 30 பேர் ஈடுபடுத்தப்பட்டனர். இன்ஸ்பெக்டர் தெய்வராணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பன்னீர்செல்வம் பார்க்கில் இருந்து மணிக்கூண்டு செல்லும் சாலையானது அதிக அளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஜவுளிக் கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகரின் பிற பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள பிற பகுதிகளிலும் இதேபோல ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது' என்றனர்.