Skip to main content

கரோனா முன்னெச்சரிக்கை: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பொருள்கள் வீடுகளுக்கே நேரடி விற்பனை! 

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

salem corporation

 

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கரோனா தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கையாக 4 மண்டலங்களுக்கு உட்பட்ட 15 கோட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்ட 17 இடங்களில் வசிக்கக்கூடிய பொதுமக்கள், அத்தியாவசியப் பொருள்களைப் பெறுவதற்கு ஏதுவாகச் சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

 

கரோனா நோய்த்தடுப்புப் பணிகளில் சேலம் மாநகராட்சி நிர்வாகம், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாநகரில் பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

 

வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்குள் வருபவர்களுக்கு அதிகளவில் நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, 'வெளியில்' இருந்து வருபவர்களைக் கண்காணித்து மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வசதியாக கருப்பூர் அரசுப் பொறியியல் கல்லூரி, பென்னம்மாபேட்டையில் உள்ள ஐ.ஐ.ஹெச்.டி. கல்லூரி வளாகம், கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கல்லூரி வளாகம் ஆகிய இடங்களில் தனிமைப்படுத்தும் பகுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, முடிவுகள் வெளியான பிறகே மாநகர பகுதிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.

 

இ-பாஸ் அனுமதியின்றி 'வெளியில்' இருந்து வருவோர் மற்றும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்போர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, உரிய அனுமதியின்றி சேலத்துக்குள் நுழைந்த 34 பேர் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்தவர்கள்; சேலத்தை வசிப்பிடமாகக் கொண்டு பணி நிமித்தமாக வெளி மாநிலங்கள், பிற மாவட்டங்களில் தங்கியிருந்து மாநகரப் பகுதிகளில் நுழைந்தவர்களில், கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் நேரடியாக, மறைமுகமாக தொடர்பில் இருந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் 17 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அப்பகுதிகளில் தீவிர நோய்த்தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தினமும் ஐந்து வேளைகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுக்கழிப்பறைகள் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மூன்று முறை சுத்தம் செய்யப்படுகிறது. அப்பகுதிகளில் சேகரமாகும் திடக்கழிவுகள் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் மூலம் பாதுகாப்பான முறையில் அகற்றப்பட்டு வருகிறது. 

 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் ஹோமியோபதி மாத்திரைகள், வீடுகளை தூய்மையாக பராமரிப்பதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் பிளீச்சிங் பவுடர்கள் மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகிறது.

 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடுகளில், தனிமைப்படுத்தப்பட்டவர்களை மாநகராட்சி அலுவலர்கள் தினந்தோறும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். கட்டுப்படுத்தப்பட்ட 17 இடங்களிலும் வெளியாள்கள் உள்ளே செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்கள் அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காகவோ அல்லது பிற எவ்வித நிகழ்விற்காகவும் இருப்பிடங்களை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

 

அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பால், மருந்து பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யவும் மாநகராட்சி நிர்வாகம் வாகனங்களை ஏற்பாடு செய்துள்ளது.

 

அத்தியாவசியப் பொருள்களை பெறுவதற்கு ஏதுவாக ஒவ்வொரு மண்டலத்திலும் சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள் விவரங்களை பின்வரும் தொலைபேசி எண்களில் தெரிவித்தால், வீடுகளுக்கே வந்து விற்பனை செய்யப்படும்.

 

சூரமங்கலம் மண்டலம் - 0427 2387514, 2387595

 

அஸ்தம்பட்டி மண்டலம் - 0427 2314646, 2310095

 

அம்மாபேட்டை மண்டலம் - 0427 - 2263161, 2250300

 

கொண்டலாம்பட்டி மண்டலம் - 0427-2461616, 2461111

 

http://onelink.to/nknapp


கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி சார்பில், அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கட்டுப்பாட்டு அறைகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வீடுகளுக்கே வரவழைத்துப் பெற்றுக்கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறு மாநகராட்சி ஆணையர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
The court asked question for ncb

டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இதற்கிடையே சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சார்பில் சீல் வைக்கப்பட்டது.

இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் சீல் வைத்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்க கோரி ஜாபர் சாதிக் வழக்கறிஞர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (05.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்?” என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. அதற்கு, “சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என என்.சி.பி. தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் ஜாபர் சாதிக் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை முடித்து வைத்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் வீட்டின் சீல் அகற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.