Skip to main content

சேலம் மாநகராட்சி: 9 வார்டுகளில் அ.தி.மு.க.வுக்கு டெபாசிட் பறிபோனது!

Published on 24/02/2022 | Edited on 24/02/2022

 

Salem Corporation: Deposit AIADMK in 9 wards!

 

சேலம் மாநகராட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 9 வார்டுகளில் கட்டுத்தொகை பறிபோன பரிதாப சம்பவம் நடந்துள்ளது. 

 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு, ஆளும் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் மரண அடி கொடுத்துள்ளது. குறிப்பாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவருடைய சொந்த மண்ணிலேயே படுதோல்வி அடையச் செய்துள்ளது. சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 50 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. 7 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சுயேச்சைகள் இரண்டு வார்டுகளில் வெற்றி வாகை சூடியுள்ளனர். 

 

இது ஒருபுறம் இருக்க, 9 வார்டுகளில் அ.தி.மு.க. கட்டுத்தொகையை பறிகொடுத்துள்ள பரிதாபமும் நடந்துள்ளது. அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட 11வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளர் கீதா (1389 வாக்குகள்) கட்டுத்தொகை இழந்துள்ளார். அதேபோல், 13வது வார்டில் சீனிவாசன், 14வது வார்டில் பழனிசாமி, 20வது வார்டில் சுதா, 31வது வார்டில் மோகன், 32வது வார்டில் யாஸ்மின் பானு, 42வது வார்டில் சுமதி, 43வது வார்டில் மோகன்ராஜ், 44வது வார்டில் கெஜிராமன் ஆகியோரும் கட்டுத்தொகையை இழந்துள்ளனர். 

 

மொத்தம் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் மூன்றில் ஒரு பங்கு வாக்குகள் பெற்றிருந்தால் மட்டுமே வேட்பாளர் செலுத்திய கட்டுத்தொகையைத் திரும்பப் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. கட்டுத்தொகையை இழந்தது மட்டுமின்றி, 33வது வார்டில் சரோஜா, 50வது வார்டில் பரமசிவம் ஆகியோர் மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டனர். 32வது வார்டில் போட்டியிட்ட யாஸ்மின் பானு 932 வாக்குகள் மட்டுமே பெற்று, 5006 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 

Salem Corporation: Deposit AIADMK in 9 wards!

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் மண்டலக்குழுத் தலைவர்களும் இந்த தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். தேர்தலுக்கு முன்பு, முன்னாள்கள் எப்படியும் வெற்றி பெற்று விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் தேர்தல் முடிவுகளோ அந்த எதிர்பார்ப்பையும் தகர்த்துள்ளது. சேலம் மாநகராட்சியில் மண்டலக்குழு முன்னாள் தலைவர்களான  தியாகராஜன் (1வது வார்டு), அசோக்குமார் (2வது வார்டு), தொடர்ந்து நான்கு முறை கவுன்சிலராக வெற்றி பெற்று வந்த ஏகேஎஸ்எம்.பாலு (3வது வார்டு), ராஜேந்திரன் (26வது வார்டு), சண்முகம் (57வது வார்டு) ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

 

சேலம் எங்கள் கோட்டை என அ.தி.மு.க. திடமாக நம்பி வந்த நிலையில், இந்த தேர்தலில் திமுக அந்தக் கோட்டையை தகர்த்து எறிந்து தன் வசப்படுத்தி உள்ளது. அதிமுகவின் விஐபிக்களும் தோல்வி அடைந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.