Skip to main content

சேலம் மாநகராட்சி: வசூலாகாத பல கோடி ரூபாய்; தணிக்கை பணிகள் தொடக்கம்... கலக்கத்தில் ஊழியர்கள்! 

Published on 31/05/2022 | Edited on 31/05/2022

 

Salem Corporation: crores of rupees not collected; Audit work begins

 

சேலம் மாநகராட்சிக்கு பல ஆண்டுகளாக வசூலாகாத குத்தகை பாக்கித் தொகை குறித்த தணிக்கை பணிகள் தொடங்கியுள்ள நிலையில், ஓய்வு பெறும் நிலையில் உள்ள வரித்தண்டலர்கள், ஆர்.ஐக்கள், ஏ.ஆர்.ஓக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். 


சேலம் மாநகராட்சியில் 60 கோட்டங்கள் உள்ளன. இவை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி என நான்கு மண்டலங்களாக பிரித்து நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. தூய்மைப் பணியாளர்கள், அம்மா உணவக ஊழியர்கள், கொசுப்புழு ஒழிப்புப் பணியாளர்கள் ஆகிய பிரிவில் 2750 பணியாளர்கள் உள்பட, முதன்மை அலுவலகம், மண்டல அலுவலகங்களில் வரித்தண்டலர்கள், ஆர்.ஐ, ஏ.ஆர்.ஓ, பொறியாளர்கள், அலுவலக பணியாளர்கள், சிப்பந்திகள் என மொத்தம் 4000 பேர் பணியாற்றி வருகின்றனர். 


பணியாளர்களின் ஊதியத்திற்காக மட்டுமே மாதத்திற்கு 11 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. ஆனால், கடந்த சில ஆண்டாகவே மாநகராட்சிக்கு வர வேண்டிய வருவாய் இனங்கள் சரியாக வசூலாகாததாலும், எதிர்பார்த்த அளவுக்கு குத்தகை இனங்கள் விலை போகாதது, அப்படியே பெரிய அளவில் குத்தகை போனாலும், ஏலத்தொகை வசூல் ஆகாதது உள்ளிட்ட காரணங்களால் கடும் நிதி நெருக்கடியில் மாநகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.
 

மேலும், உலக வங்கிக்கடனுக்கான வட்டி மட்டுமே ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் செலுத்த வேண்டிய நிலை உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சொத்துவரி, குடிநீர் கட்டணம், வாடகை உள்ளிட்ட அனைத்து இனங்கள் மூலம் ஆண்டுக்கு 75 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் தாண்டாது என்கிறார்கள். அதாவது, செலவுக்கேற்ற வகையில் வருவாய் இல்லை என்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் மாநகராட்சிக்குச் சொந்தமான நாளங்காடிகள், காய்கறி கடைகள், பாதையோர கடைகள், பூ மார்க்கெட், இறைச்சி அறுவைக் கூடங்கள், வாகன நிறுத்தக் கூடங்கள் ஆகியவற்றை ஏலம் எடுத்தவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வசூலாகாமல் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. 


இது தொடர்பாக சேலம் மாநகராட்சி ஊழியர்கள் நம்மிடம் பேசினர், ''மாநகராட்சிக்குச் சொந்தமான வாகன நிறுத்தக்கூடங்கள், தினசரி மார்க்கெட்டுகள், பூ மார்க்கெட் உள்ளிட்ட இனங்களை பெரும்பாலும் திமுக, அதிமுக பிரமுகர்கள்தான் பினாமிகள் பெயரில் ஏலம் எடுத்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே குத்தகைதாரர்கள், ஒரு நூதன உத்தியைப் பின்பற்றுகின்றனர். குத்தகை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள், கடைக்காரர்களிடம் வாடகை மற்றும் தண்டல் வசூலித்து விடுகின்றனர். பின்னர் அவர்கள், தாங்கள் ஏலம் எடுத்த இனத்தில் இருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்று,  ஏதாவது சாக்குபோக்கு சொல்லி நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று விடுகின்றனர். 


குத்தகைதாரர்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் கையூட்டு பெற்றுக்கொண்டு, அவர்களே இப்படியான யோசனைகளைச் சொல்லி, நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட சேர்மன் ராமலிங்கம் நாளங்காடியை ஏலம் எடுத்த அதிமுக பிரமுகர் சுதாகர், 40 லட்சம் ரூபாய் குத்தகை பாக்கி வைத்திருக்கிறார். அவர் வழங்கிய இரண்டு காசோலைகளும் வசூலாகாமல் திரும்பி வந்துவிட்டன. அவரிடம் பாக்கியை வசூலிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஆர்.ஐ சண்முகம், குத்தகை விடப்பட்டபோது பொறுப்பில் இருந்த ஏ.ஆர்.ஓ பார்த்தசாரதி, அதன்பிறகு அந்தப் பணியிடத்திற்கு வந்த ஏ.ஆர்.ஓ செந்தில்முரளி ஆகியோர் பாக்கியை வசூலிக்க ஆர்வம் காட்டவில்லை. அதற்கான பின்னணி காரணம் என்னவென்றும் தெரியவில்லை. 


ஒரு சிலரின் அலட்சியத்தால் மாநகராட்சிக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் ஊழியர்களுக்கு குறித்த நேரத்தில் சம்பளம் வழங்க முடியாத நிலை தொடர்கிறது. வரி மற்றும் வரி அல்லாத இனங்களுக்கு வசூலிக்கப்படும் காசோலைகள் பல ஆண்டுகளாக ரொக்கமாக்கப் படாமல், வங்கியில் இருந்து மாநகராட்சி காசாளர் வசமே திரும்பப் பெறப்பட்டு வரும் நிலை உள்ளது. 


தற்போது கணினிமயமாக்கப்பட்டுள்ள நிலையில், யு.டி.ஐ.எஸ் எனப்படும் மாநகராட்சி வலைதளத்தில் ஒவ்வொரு குத்தகைதாரரும் செலுத்த வேண்டிய பாக்கி தொகை விவரமும் உள்ளீடு செய்யப்பட வேண்டும். ஆனால், ஊழியர்கள் சிலர் திட்டமிட்டே குத்தகைதாரர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, அவர்களின் முந்தைய ஆண்டின் பாக்கி விவரங்களை யு.டி.ஐ.எஸ் வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதில்லை. அதாவது, குத்தகைதாரர்களின் நிலுவைத்தொகை ஏதேனும் இருப்பின், அதை வெளிப்படையாக காட்டாமல் நடப்பு ஆண்டிற்குரிய கேட்பு விவரம் மட்டுமே சுட்டிக் காட்டப்படுகிறது. இதனால் குத்தகை பாக்கித்தொகை வசூலாகாமல் பேரிழப்பை ஏற்படுத்துகிறது'' என்கிறார்கள் ஊழியர்கள். 


இதுகுறித்து சேலம் மாநகராட்சி உயர் அலுவலர் ஒருவரிடம் கேட்டபோது, ''மாநகராட்சி குத்தகை இனங்களை ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள் இதுவரை செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை வசூலிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரி வசூல் மற்றும் குத்தகை பாக்கியை வசூலிப்பதில் மெத்தனமாக செயல்பட்ட பில் கலெக்டர்கள், ஏ.ஆர்.ஓக்கள் உள்ளிட்டோர்தான் பாக்கித்தொகையை வசூலிப்பதில் முழு பொறுப்பேற்க வேண்டும். சூரமங்கலம் மண்டலம் சேர்மன் ராமலிங்கம் நாளங்காடி குத்தகை தொகை நிலுவை வசூலாகாமல் உள்ளது குறித்து ஆர்.ஐ சண்முகத்திடம் விசாரணை நடத்தப்படும். இது தொடர்பாக சூரமங்கலம் மண்டலத்தில் தணிக்கை பணிகளும் நடந்து வருகின்றன'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.