சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ரோகிணி, கடந்த வாரம் தமிழ்நாடு இசை பல்கலைக்கழக பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த ராமன், சேலம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து, திங்கள்கிழமை காலை (ஜூலை 1, 2019) அவர், சேலம் மாவட்டத்தின் 172வது ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகளும் புதிய ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமில் ஆட்சியர் ராமன் கலந்து கொண்டு, கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/collector raman-1 copy.jpg)
ஆட்சியர் ராமன், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர். வேளாண்மையில் இளங்கலைப் பட்டமும், மேலாண்மையில் முதுகலைப்பட்டமும் பெற்றுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு மதுரையில் துணை ஆட்சியராக பயிற்சி பெற்ற இவர், அதன்பிறகு முசிறி, மன்னார்குடி, திருச்சி ஆகிய இடங்களில் கோட்டாட்சியராக பணியாற்றியுள்ளார்.
பின்னர், பதவி உயர்வு பெற்ற அவர் திருச்சி, விருதுநகர் மாவட்டங்களில் மாவட்ட வருவாய் அலுவலராகவும், ஆவின் இணை இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக பொது மேலாளர், முதல் அலுவலக அரசு துணை செயலாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.
இந்நிலையில், அவருக்கு கடந்த 2015ம் ஆண்டு ஐஏஎஸ் பதவி உயர்வு கிடைத்தது. அதையடுத்து சென்னையில் நில நிர்வாக இணை ஆணையராக பணியாற்றினார். பின்னர் கடந்த 2016ம் ஆண்டு அவர், வேலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார்.
Follow Us